"

உலகம் மனத்தின் பிரதிபிம்பம்

நீங்கள் எப்படி இருக்கின்றீர்களோ அப்படியே உங்கள் உலகமும் இருக்கின்றது. உங்கள் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் உங்கள் அகத்தின் தன்மைக்குச் சரியாகச் செய்யப்பட்டிருக்கின்றது. உங்கள் புறநிலைமை எவ்வாறிருந்தாலும் பெரிதன்று; உங்கள் புறநிலைமைகளெல்லாம் உங்கள் அகநிலைமைகளின் பிரதிபிம்பங்களேயாகலான், உங்கள் அகத்தின் நிலைமைதான் பெரிது. உங்கள் புறத்திலுள்ள ஒவ்வொன்றும் உங்கள் அகத்திலுள்ளவற்றிற்குச் சரியாகச் செய்யும் திருத்தவும் படுமாகலான், எவையெல்லாம் உங்களால் இதுமுன் அறியப்பட்டிருக்கின்றனவோ அவையெல்லாம் உங்கள் அனுபவத்தில் அடங்கியிருக்கின்றன; எவையெல்லாம் உங்களால் இனிமேல் அறியப்படப்போகின்றனவோ அவையெல்லாம் உங்கள் அநுபவமாகிய வாயிலின் மூலமாகச் செல்ல வேண்டும்; ஆதலால், அவையெல்லாம் உங்கள் ஜீவனில் ஒரு பாகமாகும்.

உங்கள் நினைப்புக்களும், அவாக்களும், நோக்கங்களும் உங்கள் உலகமாகின்றன; அழகும், இன்பமும் சுகமுமாகிய உங்கள் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும், அல்லது அழகின்மையும், துன்பமும் துக்கமுமாகிய உங்கள் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும், உங்கள் அகத்துள் அடங்கியிருக்கின்றன. உங்கள் நினைப்புக்களால் உங்கள் வாழ்க்கையை-உங்கள் உலகத்தை-உங்கள் பிரபஞ்சத்தை ஆக்குகிறீர்கள்; அல்லது அழிக்கின்றீர்கள். நினைப்பால் உங்கள் அகத்துள் நீங்கள் அமைக்கின்ற வாழ்க்கையையும் நிலைமைகளையும் போலவே உங்கள் புறவாழ்க்கையும் நிலைமைகளும் அமைகின்றன. உங்கள் அகத்தின் ஆழ்ந்த அறைகளில் எதனைப் பொதிந்து வைத்திருக்கின்றீர்களோ அது சிறிதும் தவறாத ஒரு நியதிப்படி உங்கள் புறவாழ்க்கையின் நிலைமையாக வந்து உங்களைப் பொருந்தும், அசுத்தமும், கீழ்மையும், சுயநலமுமுள்ள ஆன்மா கேட்டையும், துன்பத்தையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது; சுத்தமும், மேன்மையும், பரநலமுமுள்ள ஆன்மா ஆக்கத்தையும், இன்பத்தையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு ஆன்மாவும் தனக்குச் சொந்தமானவற்றைக் கவர்கின்றது; அதற்குச் சொந்தமல்லாத எஃதும் அதனை அணுகாது. இதனை அபரோக்ஷமாக அறிதல் தெய்வ நீதியின் சர்வ வியாபகத் தன்மையை அறிதலாம். ஆக்கத்தையும் கேட்டை உண்டுபண்ணுகிற ஒவ்வொரு மனித வாழ்க்கையின் சம்பவங்களும் அவனவனது அக நினைப்பின் சக்தியாலும் தன்மையாலும் அவனவனைச் சார்கின்றன. கைக்கொள்ளப்பட்ட நினைப்புக்களும் அநுபவங்களும் சேர்ந்த சேர்க்கையே ஜீவன்; அதன் விளக்கத்திற்காக அதனாற் செய்து கொள்ளப்பட்ட கருவியே உடம்பு. ஆதலால், உங்களுடைய நினைப்புக்கள் எவையோ அவையே நீங்கள்; உங்களைச் சுற்றியுள்ள சரவுலகமும் அசரவுலகமும் உங்களுடைய நினைப்புகளுக்குத் தக்க உருக்களைக் கொள்கின்றன. புத்தர், “நமது நிலைமைகளெல்லாம் நமது நினைப்புக்களின் பலன்கள்; அவைகளெல்லாம் நமது நினைப்புகளையே ஆதாரமாகக் கொண்டுள்ளன; அவைகளெல்லாம் நமது நினைப்புக்களாலேயே செய்யப்பட்டுள்ளன” என்று கூறியிருக்கிறார். ஆதலால், ஒருவன் சந்தோஷகரமான நினைப்புக்களில் வசிக்கின்றமையால் சந்தோஷமுள்ளவனாயிருக்கிறான்; மற்றொருவன் விசனகரமான நினைப்புக்களில் வசிக்கின்றமையால் விசனமுள்ளவனாயிருக்கிறான். ஒருவன் அச்சமுள்ளவனாகவோ அல்லது துணிவுள்ளனவாகவோ, மடையனாகவோ அல்லது அறிஞனாகவோ, கலக்கமுற்றவனாகவோ அல்லது அமைதியுற்றவனாகவோ இருந்தால் அவனுடைய அந்நிலைமைக்குரிய காரணம் அவன் அகத்துள்ளேயே இருக்கின்றது; புறத்தில் இல்லவே இல்லை. ஆனால், சிலர், “புறநிலைமைகள் நமது மனங்களைப் பாதிப்பதேயில்லையென்று நீர் சொல்லுகிறீரா?” என்று வினவக்கூடும். நான் அப்படிச் சொல்லவில்லை. நான், “எவ்வளவு தூரம் உங்களைப் புற நிலைமைகள் பாதிக்கும்படி இடங்கொடுக்கிறீர்களோ அவ்வளவு தூரமே அவை உங்களைப் பாதிக்கக் கூடும்” என்று சொல்லுகிறேன். இஃது ஒருபோதும் மாறாத உண்மையென்று அறியுங்கள். நினைப்பின் தன்மையையும் பிரயோஜனத்தையும் வலிமையையும் நீங்கள் சரியாக அறிந்து கொள்ளாததனாலேயே புறநிலைமைகள் உங்களைப் பாதிக்கின்றன. புறப்பொருள்கள் உங்கள் வாழ்க்கையை ஆக்குதற்கும் அழிப்பதற்குமுரிய சக்தியைக் கொண்டிருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள். (உங்களுடைய சகல துக்கங்களும் நம்பிக்கை என்னும் இச்சிறு சொல்லில்தான் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.) நீங்கள் அப்படி நம்புவதால் நீங்கள் அப் புறப்பொருள்களுக்குக் கீழ்ப்படுகின்றீர்கள்; நீங்கள் அவற்றின் அடிமைகளென்றும், அவை தம் இஷ்டப்படி செய்யக் கூடிய உங்கள் எஜமான்களென்றும் நீங்கள் ஒப்புக்கொள்ளுகின்றீர்கள்; அப்படிச் செய்வதால் நீங்கள் அவற்றினிடத்திலில்லாத ஒரு வலிமையை அவற்றிற்குக் கொடுக்கின்றீர்கள், நீங்கள் புற நிலைமைகளுக்கு இலக்காகுவதோடு அவற்றைப்பற்றி நீங்கள் உங்கள் நினைப்பிற் கொண்டுள்ள விசனத்திற்கோ அல்லது சந்தோஷத்திற்கோ, அச்சத்திற்கோ அல்லது துணிவிற்கோ, பலத்திற்கோ அல்லது பலஹீனத்திற்கோ இலக்காகின்றீர்கள்.

பல வருஷங்களாகக் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து வைத்திருந்த நிதிகளையெல்லாம் சிறு வயதில் இழந்து விட்ட இரண்டு மனிதர்களை நான் அறிவேன். அதனால் ஒருவன் மிக வருத்தமடைந்து கவலைக்கும், கிலேசத்திற்கும், ஏக்கத்திற்கும் இடங் கொடுத்துவிட்டான். மற்றொருவன் தனது நிதியைக் கொடுத்து வைத்திருந்த வட்டிக்கடை முறிந்து விட்டதென்று பத்திரிகையில் வாசித்தவுடன், “நமது பணம் போய்விட்டது; கவலையும் கிலேசமும் அதனைத் திரும்பக் கொண்டு வரமாட்டா. ஆனால், கடுமையான முயற்சி அதனைத் திரும்பக் கொண்டு வரும்” என்று சாந்தமாகவும் திடமாகவும் கூறினான். அதுமுதல் அவன் அதிக ஊக்கத்தோடு வேலை செய்து வந்தான். விரைவில் அவன் செல்வன் ஆகிவிட்டான். முந்திய மனிதனோ தனது பணம் போய்விட்டதைப் பற்றிக் கிலேசித்துக் கொண்டும் தனது துரதிருஷ்டத்தைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டுமிருந்து மிகத் தரித்திரமான நிலைமைகளுக்கு, உண்மையில் தனது பலஹீனமும் அடிமைத்தனமும் பொருந்திய நினைப்புகளுக்கு ஆளாகிவிட்டான். பண நஷ்டம் ஒருவனுக்கு ஒரு தீமையாக அமைந்தது, அவன் அதனைக் கிலேச நினைப்போடும் அச்ச நினைப்போடும் கொண்டதனால்; பண நஷ்டம் மற்றொருவனுக்கு ஒரு நன்மையாக அமைந்தது, அவன் அதனைத் திடமும் நம்பிக்கையும் புதிய ஊக்கமும் பொருந்திய நினைப்புக்களோடு கொண்டதனால்.

புறநிலைமைகள் இன்பத்தையாவது துன்பத்தையாவது கொடுக்கும் சக்தியை உடையனவாயிருப்பின், அவை எல்லா மனிதருக்கும் ஒரே விதமான இன்பத்தையாவது துன்பத்தையாவது கொடுத்தல் வேண்டும். ஆனால், ஒரே நிலைமை சிலருக்கு இன்பத்தையும் சிலருக்குத் துன்பத்தையும் கொடுக்கின்றது; ஆதலால் இன்பமும் துன்பமும் நிலைமையில் இல்லையென்பதும், அவற்றைக் கொள்ளுகிற மனிதனது மனத்திலேயே உள்ளனவென்பதும் தெளிவாக விளங்கவில்லையா? இதனை நீங்கள் அபரோட்சமாக அறியத் தொடங்குங்காலையில் நீங்கள் உங்கள் நினைப்புக்களை ஆளுதற்கும், உங்கள் மனத்தைத் திருத்தி ஒழுங்கு செய்தற்கும், உங்கள் ஆன்மாவின் அகக் கோயிலைத் திரும்பக் கட்டுவதற்கும் தொடங்குவீர்கள். அப்பொழுது நீங்கள் பிரயோஜனமற்ற நினைப்புக்களையும் அவசியமற்ற நினைப்புக்களையும் உங்கள் அகத்தினின்றும் வெளிப்படுத்தி, சந்தோஷமும், சாந்தமும், உறுதியும், உரமும், இரக்கமும், அன்பும், அழகும், நித்தியத்துவமும் பொருந்திய நினைப்புக்களை உங்கள் அகத்துள் கொள்ளுவீர்கள். இவ்வாறு நீங்கள் செய்யுங்காலையில் நீங்கள் சந்தோஷமும் சாந்தமும் உள்ளவர்களாகவும், வலிமையும் ஆரோக்கியமும் உள்ளவர்களாகவும், நித்திய அழகும் நித்திய வாழ்வும் உள்ளவர்களாகவும் இருப்பீர்கள்.

நமது வாழ்க்கையில் நேரும் சம்பவங்களில் இவையிவை சுககரமானவை, இவையிவை துக்ககரமானவை என்று நாம் நினைக்கிறதுபோல, நம்மைச் சூழ்ந்துள்ள பொருள்களிலும் இவையிவை சுககரமானவை, இவையிவை துக்ககரமானவை என்று நாம் நினைக்கிறோம். அதனால் ஒருவன் ஒற்றுமையையும் அழகையும் பார்க்கிற இடத்தில் மற்றொருவன் ஒற்றுமையின்மையையும் அழகின்மையையும் பார்க்கிறான். ஓர் உற்சாகமுள்ள இயற்கைத் தத்துவ சாஸ்திரி ஒருநாள் தனது தொழில் சம்பந்தமாக ஒரு கிராமத்தின் மூலை முடுக்குகளெல்லாம் அலைந்து கொண்டிருந்தான்; அப்பொழுது அவன் ஒரு நெற்களத்திற்குச் சமீபத்திலுள்ள ஓர் உவர் நீர்க்குட்டத்தைக் கண்டான். அவன் பூதக்கண்ணாடி கொண்டு பரீட்சிப்பதற்காக அக்குட்டத்தின் நீரில் சிறிது ஒரு பாத்திரத்தில் மொண்டு கொண்டிருந்தபோது அவன் பக்கத்தில் நின்ற கல்வியில்லாத ஒரு கிருஷிகனிடத்தில் அக்குட்டத்தில் மறைந்து கிடக்கும் எண்ணிறந்த அதிசயங்களைப் பற்றிச் சொல்லி, கடைசியாக, “இக்குட்டத்தில் எத்தனையோ கோடிப் பிரபஞ்சங்கள் இருக்கின்றன. அவற்றைக் காணத்தக்க புத்தியாவது கருவியாவது நம்மிடம் இல்லை” என்று கூறினான். அவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷிகள், “இந்நீருள் எண்ணிறந்த தவளைகள் இருப்பதை நானும் அறிவேன்; ஆனால் அவைகளை எளிதில் பிடித்து விடலாம்” என்றான். இயற்கைப் பொருள்களின் ஞானம் நிரம்பிய மனத்தையுடைய அவ்வியற்கைத் தத்துவ சாஸ்திரி இயற்கையின் அழகையும் ஒற்றுமையையும் காட்சிக்குப் புலப்படாத பெருமையையும் அக்குட்டத்தில் பார்த்தான். அப்பொருள்களில் ஞானமில்லாத மனத்தையுடைய கிருஷிகன் அருவருக்கத்தக்க தவளைகளை மாத்திரம் அக்குட்டத்தில் கண்டான்.

வழிப்போக்கனது காலில் மிதிபடுகிற காட்டுப்பூ, ஒரு புலவனது ஞானக்கண்ணிற்கு (பொறிகளால் காணமுடியா)க் கடவுளினது தூதன் போலத் தோன்றுகிறது. அநேகருக்குச் சமுத்திரமானது கப்பல்கள் சென்று உடைவதற்கேதுவாகிய ஒர பயங்கரமான நீர்ப்பரப்பாகத் தோன்றுகிறது; ஒரு சங்கீத வித்வான் அதனை ஓர் உயிருள்ள பொருளாகக் காண்கிறான்; அதனுடைய சகல மாறுதல்களிலும் அவன் தெய்வ கீதங்களைக் கேட்கிறான்; ஒரு சாதாரண மனிதன் இவ்வுலகத்தின்கண் ஆபத்துக்களையும் குழப்பங்களையும் பார்க்கிறான்; ஒரு தத்துவ ஞானி இவ்வுலகத்தின்கண் காரண காரிய ஒழுங்கைப் பார்க்கிறான். ஒரு நாஸ்திகன் இவ்வுலகத்தில் நித்திய மரணத்தையே காண்கிறான். ஓர் ஆஸ்திகன் இவ்வுலத்தில் நித்திய வாழ்வையே காண்கிறான்.

இவ்வுலக சம்பவங்களுக்கும் பொருள்களுக்கும் நாம் நமது நினைப்புகளாகிய வஸ்திரங்களை உடுத்துவதுபோல நாம் நம்மைச் சுற்றிலுள்ள மற்றை மனிதர்களுக்கும் நமது நினைப்புகளாகிய வஸ்திரங்களை உடுத்துகிறோம். சந்தேக நடத்தையுள்ளவன் ஒவ்வொரு மனிதனையும் சந்தேக நடத்தையுள்ளவனாக நினைக்கிறான்; பொய்யன் எல்லா மனிதரையும் பொய்யரென்று நினைக்கிறான்; பொறாமையுள்ளவன் ஒவ்வொருவனிடத்திலும் பொறாமையைப் பார்க்கிறான்; உலோபி தனது பொருளைக் கவருவதற்கு ஒவ்வொரு மனிதனும் ஆசை கொண்டிருக்கிறதாக நினைக்கிறான்; தனது மனச்சாக்ஷ¢க்கு விரோதமான காரியங்களைச் செய்து பணம் சம்பாதிக்கிறவன் உலகத்திலுள்ளவர்களெல்லாம் மனச்சாக்ஷ¢க்கு விரோதமான காரியங்களைச் செய்வதாகவும் தனது பொருளை அவர்கள் திருடுவதற்காக அவாக் கொண்டிருப்பதாகவும் எண்ணித் தனது தலையணையின்கீழ் கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு உறங்குகிறான்; பெருங் காமுகன் சாதுக்களை வெறும் வேஷதாரிகளென்று நினைக்கிறான். இதற்கு மாறாக அன்புள்ள நினைப்புகளில் வசிக்கின்றவர் எல்லா மனிதரையும் அன்புடையவராக நினைத்து, அவரிடத்து அன்பும் அநுதாபமும் பாராட்டுகின்றனர்; யோக்கியத்தையும் நம்பிக்கையுமுள்ளவர் எவரிடத்தும் சந்தேகம் கொள்வதில்லை; பிறருடைய பெருஞ் செல்வத்தைக் கண்டு சந்தோஷப்படுகிற நற்சுபாவமும் தயாளமுமுடையவர், பொறாமை எப்படியிருக்குமென்றும் அறியார்; தமது அகத்துள் மெய்ப்பொருளை அபரோட்சமாகக் காண்கின்றவர் விலங்குகளுள்பட சகல உயிர்களிடத்தும் மெய்ப்பொருளைக் காண்கின்றனர்.

புருஷர்களும் ஸ்திரீகளும் தமது மனத்தில் கொண்டுள்ள நினைப்புகளுக்குஒத்தவாறு காரியங்கள் நிகழக் காண்கிறார்கள்; ஏனெனில், அவர்கள் தமதுமனத்திலிருந்து எவற்றைப் புறத்தே அனுப்புகின்றனரோ, அவற்றையே காரணகாரியநியதிப்படி புறத்திலிருந்து கவருகின்றனர்; ஆதலால், அவர் தம்மையொத்தமனிதரின் சேர்க்கையைக் கொள்கின்றனர். “இனம் இனத்தோடு சேரும்” என்னும்பழமொழி பெரும்பாலார் கொள்ளும் பொருளினும் மிக ஆழ்ந்ததோர் பொருளைக்கொண்டிருக்கின்றது; அது ஜடவுலகத்திலுள்ள ஒவ்வொன்றும் தன்தன் இனத்தோடுசேர்ந்திருக்கிறது போலச் சித்துலகத்திலுள்ள ஒவ்வொன்றும் தன் தன் இனத்தோடுசேர்ந்திருக்கிறதென்ற உண்மையையும் விளங்குகின்றது.

வெண்பா
“அன்புகொள வேண்டினுயிர்க் கன்புசெய்வாய்; மெய்வேண்டின்
இன்பமொடு மெய்மொழிவாய்; ஏனையர்க்கு-முன்பெதனை
நல்குவையோ அஃதுநினை நண்ணும்; நினதுள்ளம்
நல்குபிம்பம் நின்னுலகம், நாடு.”
நீங்கள் உங்கள் மரணத்திற்குப்பின் ஒரு பேரின்ப உலகத்தைஅடையவேண்டுமெனக்கோரிக் கொண்டிருப்பீர்களாயின், இதோ! ஒரு சந்தோஷ சமாசாரம்உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்பேரின்ப உலகத்தில் நீங்கள் இப்பொழுதேபிரவேசித்துப் பேரின்பத்தை அநுபவிக்கலாம். அப்பேரின்ப உலகம் பிரபஞ்சமுழுவதிலும் நிரம்பியிருக்கிறது. அஃது உங்கள் அகத்துள்ளேயும் இருக்கிறது.அதனை நீங்கள் கண்டு அடைந்து அநுபவிக்க வேண்டுமென்று அது காத்துக்கொண்டிருக்கிறது. ஆன்மாவின் அக ஒழுங்குகளையெல்லாம் அறிந்த ஒருவர், ‘கடவுளுலகம் இதோ இருக்கிறது; அதோ இருக்கிறது’ என்று மனிதர் சொல்லும்பொழுது, நீங்கள் அவர்பின் செல்லவேண்டாம். ‘கடவுளுலகம் உங்கள் அகத்துள்ளேயேஇருக்கிறது’ என்று கூறியுள்ளார். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால்நீங்கள் இவ்வாக்கை நம்ப வேண்டும்; நீங்கள் இதனைச் சந்தேகம் சிறிதும் இல்லாதமனத்தோடு பூரணமாக நம்பவேண்டும்; பின்னர் நீங்கள் இதனை அபரோட்சமாகக் காணும்வரையில் இதனைத் தியானிக்க வேண்டும், நீங்கள் இவ்வாறு தியானிக்குங்காலையில் உங்கள் அகவுலுவலகத்தைச் சுத்தப்படுத்தவும் புதுப்பிக்கவும்தொடங்குவீர்கள். நீங்கள் அதனைப் புதுப்பிக்குங் காலையில் உண்மைகளைஒன்றன்பின் ஒன்றாக அறிவீர்கள்; அநுபவங்களை ஒன்றன்பின் ஒன்றாகஅனுபவிப்பீர்கள்; தன்னை ஆளும் ஆன்மாவின் மந்திர சக்தியைத் தவிரப்புறப்பொருள்களில் யாதொரு சக்தியும் இல்லையென்று காண்பீர்கள்.

நிலைமண்டில ஆசிரியப்பா
உலகினைத் திருத்தி, அஃதுற்றுள பலவகைக்
கேட்டையு மழிவையு மோட்டி யொழிக்கவும்,
களைநில மனைத்தையும் விளைநில மாக்கவும்,
பாலை வனங்களைச் சோலையா மாற்றவும்,
உன்னுவை யாயின், நின்னைத் திருத்தே;
உலகினை நீடு வலனொடு பிணைத்துள
மறத்தளை களையறுத் துலகைவெளி யேற்றி,
உடைந்த உளங்கள் திடங்கொள உதவவும்,
துயரினை யொழித்துச் சுகமுறச் செய்யவும்,
விரும்புவை யாயின், அறுக்கநின் தளையே.
உலகின் நீண்ட பிணிகளைத் தீர்த்ததன்
துயரையும் துன்பையும் மயலையும் தொலைக்கவும்,
பிணியெலாம் தீர்த்ததில் பேரின்ப மாக்கவும்,
துன்பமுற் றார்க்கெலாம் இன்பம் நல்கவும்,
நினைப்பை யாயின், நின்பிணி தீரே.
உலகின் மரணக் கனவி னின்றும்
அமரி னின்றும் உலகை யெழுப்பிஅஃ
தன்பும் நட்பும் அறிவும் அழிவிலா
வாழ்வின் ஒளியும் மன்னிடச் செய்ய
எண்ணுவை யாயின், எழுப்புக நின்னையே.

 

License

Icon for the Public Domain license

This work (வலிமைக்கு மார்க்கம் by வ.உ.சி) is free of known copyright restrictions.

Share This Book