நினைப்பின் மௌன வலிமை
(சக்திகளை ஆளுதலும் செலுத்தலும்)
பிரபஞ்சத்திலுள்ள சக்திகளிலெல்லாம் மிக வலிமையுள்ள சக்தி மௌன சக்தி. “மௌனம் மலையைச் சாதிக்கும்.” சரியாகச் செலுத்துங்காலையில், ஒரு சக்தி எவ்வளவுக்கெவ்வளவு வலிமையுள்ளதோ, அவ்வளவுக்கவ்வளவு இலாபத்தையும், பிசகாகச் செலுத்துங்காலையில், அவ்வளவுக்கவ்வளவு கஷ்டத்தையும் தரும். நீராவி, மின்சாரம் முதலிய யந்திர சக்திகள் சம்பந்தப்பட்டமட்டில் இவ்வுண்மையைப் பலரும் அறிவித்திருக்கின்றனர். ஆனால், சக்திகளிலெல்லாம் மிகமிக வலியதாகிய நினைப்புச் சக்தியை, சிருஷ்டிக்கும் பிரவாகமாகவும் சம்ஹரிக்கும் பிரவாகமாகவும் அனுப்பிக் கொண்டிருக்கிற மனோவுலகம் சம்பந்தபட்டமட்டில் இவ்வுண்மையை அறிந்து உபயோகிப்பவர் மிகச் சிலரே.
தாம் அபிவிருத்தியாகிக் கொண்டிருக்கிற இக்காலத்தில் மனிதர் அச்சக்திகளை ஆளுவதற்குத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களுடைய தற்கால முக்கிய நோக்கமெல்லாம் அச்சக்திகளை அடக்கியாளுதலே. இந்த ஸ்தூல உலகத்தில் மனிதர் அடையக் கூடிய ஞானமெல்லாம் தன்னை அடக்கியாள்தலிலேயே அடங்கியிருக்கிறது. “உங்கள் விரோதிகள்பால் அன்பு பாராட்டுங்கள்” என்னும் கட்டளையானது, இப்பொழுது மனிதர்களை அடிமையாக்கிச் சுயநலப் பிரவாகங்களில் அடித்துக் கொண்டுபோகிற மனோசக்திகளை வசப்படுத்தி அடக்கியாளுதற்குரிய ஞானத்தை அடைவதற்கு நீங்கள் இப்பொழுதே, இங்கேயே தொடங்குங்கள் என்று உபதேசிக்கின்றது.
பரம்பொருட் சட்டத்தைப் பூரணமாக அறிந்திருந்த எபிரேய தேசத்துத் தீர்க்கதரிசிகள், புறச்சம்பவங்கள் அக நினைப்போடு சம்பந்தப்பட்டவையென்றும். ஒரு தேசத்தின் அழிவோ ஆக்கமோ அக்காலத்தில் அத்தேசகத்தாரை ஆண்டு கொண்டிருக்கும் நினைப்புகளையும் அவாக்களையும் பொறுத்ததென்றும் எப்பொழுதும் சொல்லி வந்தார்கள். அனைத்திற்கும் காரணமாகிய நினைப்பின் வலிமையைப் பற்றிய அறிவு, உண்மையான சகல ஞானத்திற்கு பலத்திற்கும் ஆதமாரமாயிருப்பதுபோல அவருடைய தீர்க்க தரிசனத்திற்கும் ஆதாரமாயிருந்தது. தேச சம்பவங்கள் தேசத்தாரது மனோசக்திகளின் வேலைகளேயன்றி வேறல்ல. யுத்தங்களும், தொத்து நோய்களும் பஞ்சங்களும் பிசகாகக் செலுத்தப்பட்ட மனோ சக்திகள் ஒன்றோடொன்று சந்திப்பதாலும் மோதுவதாலும் உண்டாகின்றன. அவைதாம் பரம்பொருட் சட்டத்தின் காரியஸ்தரென்ற அறிவு வெளிப்படும் ஸ்தானங்களாம். யுத்தத்திற்கும் ஒரு மனிதனது அல்லது ஒரு கூட்டத்தாரது செல்வாக்கே காரணமென்று கூறுதல் அறிவீனம். அஃது ஒருதேசத்தாரது சுயநலத்தின் மிகக் குரூரமான கோரச் செயல்.
எல்லாப் பொருள்களையும் காட்சிக்குக் கொண்டு வருவன மௌனமும் வெற்றியும் பொருந்திய நினைப்புச் சக்திகளே. பிரபஞ்சம் நினைப்பிலிருந்தே வெளிப்பட்டது ஜடப் பொருள்களைப் பகுத்துக்கொண்டு போகப்போகக் கடைசியாக மீதமாவது திரிசியமான நினைப்பென்றே தத்துவ சாஸ்திரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மனிதரால் செய்யப்பட்ட காரியங்களெல்லாம் முதலில் நினைப்பில் செய்யப்பட்டுப் பின்னரே காட்சிக்கு வந்தன. நூலாசிரியரும் உண்மை காண்போரும் சிற்பிகளும் தமது வேலைகளை முதலில் நினைப்பால் செய்து முடிக்கின்றனர்; நினைப்புலகத்தில் தமது வேலைகளைச் சரியாகவும் பூரணமாகவும் செய்து முடித்த பின்னரே, அவற்றைக் காட்சியுலகத்திற்குக் கொண்டு வருவதற்காக ஸ்தூலப்படுத்தத் தொடங்குகின்றனர்.
எல்லாவற்றையும் ஆள்கின்ற பரம்பொருட் சட்டத்திற்கு ஒற்றுமையாக நினைப்புச் சக்திகளைச் செலுத்தும்போது, அவை சிருஷ்டிக்கும் சக்திகளும் இரக்ஷ£க்கும் சக்திகளுமாகின்றன; அவை அச்சட்டத்திற்கு மாறாகச் செலுத்தப்படுங்காலையில் பிரிக்கும் சக்திகளும் அழிக்கும் சக்திகளுமாகின்றன. உங்கள் நினைப்புகள் நன்மை வடிவாயிரா நின்ற கடவுளின் சர்வசக்தியிலும் ஆள்கையிலும் அசையாத பூரண நம்பிக்கையைக் கொள்ளுதல், நீங்கள் அக்கடவுளோடு ஐக்கியமாகும்படிக்கும் நீங்கள் உங்கள் அகத்துள்ள சகல தீமைகளின் காரணத்தையும் பரிகாரத்தையும் காணும்படிக்கும் செய்யும். நீங்கள் கடவுளை நம்புவீர்களாயின், நீங்கள் நீடூழி வாழ்வீர்கள்; இந்நம்பிக்கையே உங்கள் ரக்ஷ¢ப்புக்கு வழி; நித்திய நன்மையாயிருக்கின்ற கடவுளின் மெய்யொளியில் பிரவேசித்தலே இருளினின்று நீங்குதலும் துன்பத்தினின்று இரக்ஷ¢க்கப்படுதலுமாம்.
எவ்விடத்தில் அச்சமும் தொல்லையும் கவலையும் ஐயமும் எரிச்சலும் ஆசாபங்கமும் இருக்கின்றனவோ அவ்விடத்தில் நம்பிக்கையின்மையும் அஞ்ஞானமும் இருக்கின்றன. இம் மனோநிலைமைகளெல்லாம் சுயநலத்தின் நேரான பலன்கள்; அவை தீமையின் வலிமையிலும் தலமையிலும் உள்ளூரக் கொண்டுள்ள நம்பிக்கையை ஆதரவாகக் கொண்டுள்ளன; ஆதலால் அவை அநுபவ நாஸ்திகமாம்; ஆன்மாவைக் கெடுக்கும் இம் மனோநிலைமைகளுக்கு இடம் கொடுத்தலும் ஆளாகுதலுமே மெய்யான நாஸ்திகம். மனித சமூகம் வேண்டுவது இந்நிலைமைகளிலிருந்து இரக்ஷ¢க்கப்படுதலே; இந்நிலைமைகளின் ஆளாகவும் அடிமையாகவும் இருக்கிற எந்த மனிதனும் தான் இரக்ஷ¢ப்பை அடைந்து விட்டதாக வீண்பெருமை பாராட்ட வேண்டாம். அஞ்சுதலும் கவலுதலும் கடவுளை நிந்தித்தலையொத்த ஒரு பாவமாகும்; ஒருவன் நித்திய நியாயத்தில், சர்வ வல்லமையுள்ள நன்மையில், அகண்டாகாரமான அன்பில், உள்ளுறுத்திய நம்பிக்கை கொண்டிருப்பானாயின், அவன் அச்சத்தையாவது கவலையையாவது எப்படி அடைதல் கூடும்? தான் அஞ்சுதலும் கவலுதலும் ஐயுறுதலும் அப்பொருளை மறுத்தலையும் நம்பாதிருத்தலையும் ஒக்கும். இத்தகைய மனோநிலைமைகளிலிருந்துதான் சகல பலஹீனங்களும் தவறுதல்களும் உண்டாகின்றன; ஏனெனில் அவை உண்மையான நினைப்புச் சக்திகளைப் பிரித்து அழிகின்றன; அவை அவ்வாறு அழிக்கப்படாவிட்டால், அவை மிகுந்து வலிமையோடு தமது காரியத்தை விரைந்துசெய்து, தமது இலாபகரமான பலன்களைக் கொடுக்கும். இந்நிலைமைகைளை ஒழித்தல், பலமுள்ள ஒரு வாழ்வை அடையும்படிக்கும் அடிமையாயிருத்தலை விட்டு அரசனாக்கும்படிக்கும் செய்யும்; இந்நிலைமைகளை ஒழிப்பதற்கு ஒரே ஒரு மார்க்கம்தான் உண்டு. அஃது அகஞானத்தில் நிலையாக மேன்மேலும் வளர்ந்து கொண்டிருத்தலே. மனத்தினால் தீமையை மறுப்பது மட்டும் போதாது; ஒவ்வொரு நாளும் தீமையை விலக்கி, அதனை அறிதல் வேண்டும், நன்மையை மனத்தினால் அங்கீகரித்தல் மட்டும் போதாது; விடாத முயற்சியால் ஒவ்வொரு நாளும் நன்மையைச் செய்து, அதனை அறிதல் வேண்டும்.
மனத்தை அடக்குவதற்காக விவேகத்தோடு செய்யும் அப்பியாசம், ஒருவனது அகத்தின் நினைப்புச் சக்திகளைப் பற்றிய ஞானத்தை விரைவில் அடையுமாறு செய்து, பின்னர் அவற்றைச் சரியாகச் செலுத்துவதற்கும் உபயோகித்தற்கும் வேண்டும் பலத்தை அடையுமாறும் செய்கின்றது, நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உங்களை ஆளுகின்றீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் மனோ சக்திகளை நீங்கள் ஆண்டு உங்கள் காரியங்களையும் புற நிலைமைகளையும் ஆள்வீர்கள். எந்த மனிதன் கைபட்டால் எல்லாம் அழிந்து போகின்றனவோ, எந்த மனிதன் தன் கையில் கொடுக்கப்பட்ட வெற்றிகளை வைத்துக் கொள்ளாமல் விட்டுவிடுகிறானோ அந்த மனிதனை எனக்குக் காட்டுங்கள். அவன் வலிமைக்கு நேர் மாறுதலையான மனோநிலைமைகளில் இடைவிடாது வசித்துக் கொண்டிருக்கிறானென்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். ஐயமாகிய சேற்று நிலத்தில் எப்பொழுதும் உழன்று கொண்டிருத்தலும், அச்சமாகிய உதிர் மணல்களை எப்பொழுதும் சேர்த்துக் கொண்டிருத்தலும், கவலையாகிய காற்றுக்களால் இடைவிடாது அலைக்கப்படுதலும், ஓர் அடிமையின் வாழ்வை அடையும்படி செய்யும். அத்தகைய மனிதன் கடவுளிடத்து நம்பிக்கை வையாததாலும், தன்னைச் சரியாக ஆளாததாலும் தனது காரியங்களைச் சரியாக ஆள்வதற்குத் திறமையில்லாதவனாயும் தனது நிலைமைகளுக்கு ஓர் அடிமையாயும் இருக்கிறான்; உண்மையில் அவன் தனக்கே அடிமையாயிருக்கிறான்; அத்தகைய மனிதர்க்குத் துன்பமே ஆசான்; அவர் சகிக்க முடியாத கொடிய துன்ப அநுபவத்தால் பலஹீனம் நீங்கிக் கடைசியாகப் பலம் பெறுகின்றனர்.
நம்பிக்கையும் காரியமுமே வாழ்க்கையின் பலமும் நோக்கமும் ஆகும். உறுதியான தெய்வ நம்பிக்கையும் அசையாத காரிய சிந்தனையும் எக்காரியத்தையும் முடிக்கும். தெய்வ நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளுதலால், நினைப்புச்சக்திகள் ஒன்று சேர்கின்றன. நல்ல காரிய சிந்தனையை ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்துவதனால், செய்து முடிக்க வேண்டிய காரியத்தை நோக்கி நினைப்புச் சக்திகள் செல்லுகின்றன. நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் சரி, நீங்கள் வெற்றியையாவது பிரயோஜனத்தையாவது வலிமையையாவது எள்ளளவேணும் அடையவேண்டுமானால். நீங்கள் அமைதியையும் நம்பிக்கையையும் வளர்த்து உங்கள் நினைப்புச் சக்திகளை ஒருமுகப்படுத்துவதற்குக் கற்றுக் கொள்ளவேண்டும். நீங்கள் வியாபாரிகளென்று வைத்துக் கொள்வோம்; நீக்கமுடியாத ஒரு கஷ்டமோ நஷ்டமோ திடீரென உங்கள்பால் வருகின்றது. உடனே நீங்கள் அச்சத்தையும் கவலையையும் கொள்ளுகின்றீர்கள்; நீங்கள் உங்கள் புத்தியை இழக்கும் நிலைமைக்கு வந்துவிடுகின்றீர்கள். அத்தகைய ஒரு மனோநிலைமையைக் கொண்டிருத்தல் அழிவையே கொடுக்கும்; ஏனெனில், அகத்துட் பிரவேசிக்கும்பொழுது, காரியத்தைச் சரியாகத் தீர்மானிக்கும் சக்தி நீங்கிவிடுகின்றது. அச்சமயத்தில், நீங்கள் அதிகாலையிலாவது இராத்திரியிலாவது அமரிக்கையாயிருக்கும் ஒரு நேரத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்; அந்நேரத்தில் நீங்கள் ஓர் தனித்த இடத்திற்காவது, உங்கள் வீட்டில் உங்களுக்கு எவ்வித இடைஞ்சலும் நேரிடாத ஓர் அரங்கிற்காவது செல்லுங்கள்; அவ்விடத்தில் நீங்கள் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குச் சந்தோஷத்தையும் இன்பத்தையும் கொடுக்கிற ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்துக் கொண்டு, உங்களுக்குக் கவலையைக் கொடுக்கிற விஷயத்தினின்றும் உங்கள் மனத்தைப் பலவந்தமாக நீக்கிவிடுங்கள்; சிறிது நேரத்துள் அமைதியும் உறுதியுமுள்ள ஒரு பலம் உங்கள் மனத்திற்குள் உங்களுக்குத் தெரியாமல் பிரவேசிக்கும்; உடனே உங்கள் கவலை நீங்கிப் போய்விடும். எந்த நிமிஷத்தில் உங்கள் மனம் கவலையாகிய தாழ்ந்த ஸ்தானத்திற்குத் திரும்புகின்றதோ, அந்த நிமிஷத்திலேயே உங்கள் மனத்தை அதனின்று திருப்பி, அமைதியையும் பலத்தையும் கொடுக்கின்ற ஸ்தானத்திற்குக் கொண்டு போய் மறுபடியும் அங்கு நிறுத்துங்கள். இதனை நீங்கள் பூரணமாகச் செய்து முடித்தபொழுது உங்கள் கஷ்டத்தை நிவர்த்திப்பதற்குரிய வழிகளைச் சிந்திப்பதில் உங்கள் மனத்தை ஏகாக்கிரப்படுத்துங்கள்; நீங்கள் கவலையாயிருந்தபோது உங்களுக்குச் சிக்கலாகவும் நீக்க முடியாததாகவும் தோன்றிய விஷயம் இப்பொழுது சிக்கலற்றதாகவும் நீக்கக்கூடியதாகவும் தோன்றும்; இப்பொழுது நீங்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அதனைச் செய்வதற்குரிய மார்க்கத்தையும் கவலையும் சஞ்சலமுமில்லாத மனத்திற்கு மாத்திரம் சொந்தமான தெளிவோடும் அறிவோடும் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் உங்கள் மனத்தைப் பூரண அமைதிக்குக் கொண்டு வரச் சக்தியுள்ளவர்களாவதற்கு நீங்கள் பல நாள் முயல்வது ஆவசியகம்; ஆனால், இடைவிடாது முயன்றால் நீங்கள் நிச்சயமாக அதனைச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் அமைதியாயிருக்கும் நேரத்தில் நீங்கள் எதனைச் செய்து முடிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் பகற்காலத்தில் உங்கள் வியாபாரத்தில் பிரவேசித்தபொழுது உங்கள் கவலைகள் மறுபடியும் உங்கள் அகத்தில் பிரவேசித்து உங்களை ஆளத் தொடங்கும்; அப்பொழுது முன் அமைதியான நேரத்தில் நீங்கள் குறித்த காரியமும் மார்க்கமும் பிசகானவையென்றும் அறிவில்லாதவையென்றும் நீங்கள் நினைக்கத் தொடங்குவீர்கள். ஆனால். அவ்வித நினைப்புக்களுக்கு நீங்கள் இடங்கொடுத்தல் கூடாது. அமைதியான நேரத்தில் தோன்றிய காரியத்தையோ மார்க்கத்தையோ நீங்கள் சிறிதும் விடாது பின்பற்றுங்கள். நீங்கள் உங்கள் கவலையின் நிழல்களைப் பின்பற்றாதீர்கள். அமைதியான நேரமே சரியான அறிவையும் தெளிவையும் கொடுக்கிற நேரம். மனத்தை அவ்விதமாகப் பயிற்றுவதால் சிதறுண்ட நினைப்புச் சக்திகள் திரும்ப ஒன்று சேர்ந்து குறித்த காரியத்தில் சென்று அதனைச் செய்து முடிக்கும். அமைதியும் பலமுமுள்ள ஒரு நினைப்பின் ஏகாக்கிரத்தின் முன் எத்தகைய கஷ்டமும் நிலை நிற்கமாட்டாது. ஒருவனது மனோசக்திகளை விவேகத்துடன் செலுத்துவதாலும் உபயோகிப்பதாலும் முடிக்கக்கூடாத காரியம் ஒன்றுமில்லை.
நீங்கள் உங்கள் அகத்துள் ஆழ்ந்து சென்று ஆராய்ந்து தேடி, அங்கு ஒளிந்து கொண்டிருக்கிற உங்கள் விரோதிகளையெல்லாம் ஒழிக்கும் வரையில் நீங்கள் நினைப்பின் கூரிய வலியையாவது, புறத்திலுள்ள ஸ்தூலப் பொருள்களுக்கும் உங்கள் நினைப்புக்கும் உள்ள பிரிக்க முடியாத சம்பந்தத்தையாவது, உங்கள் நினைப்பு சமநிலையில் வைக்கப்பட்டுச் சரியாக செலுத்தப்படுங்காலையில் உங்கள் வாழ்க்கை நிலைமைகளைச் சரிப்படுத்திச் சீர்திருத்தும் அதன் சக்தியையாவது நீங்கள் சிறிதும் அறிய முடியாது. நீங்கள் நினைக்கிற ஒவ்வொரு நினைப்பும் நீங்கள் வெளியில் அனுப்புகிற ஒவ்வொரு சக்தியாகும். அதன் இயற்கைக்கும் வலிமைக்கும் ஒத்தவாறு அது வெளியே சென்று அதனைப் பெறத்தக்க மனங்களுட் பிரவேசித்துத் தங்கும்; அது திரும்ப நன்மையாகவோ தீமையாகவோ உங்கள்பால் வந்து சேரும். ஒரு மனத்திற்கும் மற்றைய மனங்களுக்கும் இடைவிடாத சம்பந்தமும் இடைவிடாத கொடுக்கல் வாங்கல்களும் இருக்கின்றன. சுயநல நினைப்புக்களும் கலக்க நினைப்புக்களும் கேட்டையும் அழிவையும் கொடுக்கும் தீமையாகிய பேயின் தூதர்; அவை வெளியிற் சென்று மற்றை மனங்களிலுள்ள தீமையை உயிர்ப்பித்து வளர்க்கின்றன. அவை திரும்ப உங்கள்பால் அதிக பலத்தோடு வந்து சேர்கின்றன. ஆனால் அமைதியும், தூய்மையும், பரநலமுமுள்ள நினைப்புக்கள் உங்கள் அகத்தினின்று வெளிப்பட்டு உலகத்திலுள்ள தீயசக்திகளைக் கெடுத்து, உலகத்திற்கு ஆரோக்கியத்தையும், §க்ஷமத்தையும் இன்பத்தையும் கொடுக்கும் நன்மையாகிய தெய்வத்தின் தூதர்கள்; அவை கவலையாலும் துக்கத்தாலும் வருந்துகின்ற மனத்திற்கு அமைதியையும் சுகத்தையும் கொடுத்து அழிந்துபோன உள்ளங்களுக்கு அழியாத் தன்மையைத் திரும்பக் கொடுக்கின்றன.
நீங்கள் நல்ல நினைப்புக்களை நினையுங்கள். அவை உங்கள் புறவாழ்க்கையில் நல்ல நிலைமைகளில் உருக்களோடு விரைவில் வந்து பொருந்தும். நீங்கள் உங்கள் மனோ சக்திகளை அடக்கி ஆளுங்கள். நீங்கள் உங்கள் புறவாழ்க்கையை உங்கள் இஷ்டப்படி திருத்திக் கொள்ளத்தக்க சக்தியுள்ளவர்களாவீர்கள். ஒரு புண்ணியவான் தனது அகத்திலுள்ள சகல சக்திகளையும் பூரணமாக ஆள்கிறான். ஒரு பாவி தனது அகத்திலுள்ள சகல சக்திகளாலும் பூரணமாக ஆளப்படுகிறான். இதுதான் இவ்விருவருக்குமுள்ள வித்தியாசம்.
உண்மையான பலத்தையும் நிலையான சாந்தியையும் அடைய வேண்டினால், தன்னை அடக்குதலையும் தன்னை ஆள்தலையும், தன்னைச் சுத்தப்படுத்துதலையும் தவிர வேறு மார்க்கமே இல்லை. நீங்கள் உங்கள் மனம் போன போக்கில் செல்லுதலானது உலகத்தில் உங்களை ஆண்மையற்றவர்களாகவும், சந்தோஷமற்றவர்களாகவும், பிரயோஜனமற்றவர்களாகவும் செய்துவிடும். உங்கள் அற்ப விருப்பு வெறுப்புகளையும், உங்கள் கோபமும் சந்தேகமும் பொறாமையுமாகிய வெறிகளையும், உங்களை அடிமைகளாக்கி ஆளாநின்ற நிலையற்ற மற்றைய குணா குணங்களையும் நீங்கள் வெல்ல வேண்டும். உங்கள் வாழ்க்கையாகிய வஸ்திரத்தைச் செல்வமும் இன்பமுமாகிய பீதாம்பரமாக்கிக் கொள்ள நீங்கள் விரும்புவீர்களாயின், மேற்சொல்லிய வேலையை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். உங்கள் அகத்திலுள்ள நிலையற்ற குணா குணங்களுக்கு நீங்கள் எவ்வளவு காலம் அடிமைகளாயிருக்கிறீர்களோ அவ்வளவு காலமும் நீங்கள் உங்கள் ஜீவ யாத்திரையில் மற்றைய மனிதர்களையும் வெளித் துணைகளையும் சார்ந்திருக்க வேண்டிய ஆவசியகம் ஏற்படும். நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உறுதியாகவும் பத்திரமாகவும் செல்லவும் ஒரு பெரிய காரியத்தைச் செய்து முடிக்கவும் விரும்புவீர்களாயின், நீங்கள் கலக்கத்தையும் தோல்வியையும் உண்டுபண்ணும் சகல சஞ்சலங்களையும் ஒழித்துவிட வேண்டும். நீங்கள் “மௌனநிலை”களை அடைவதற்கு, அஃதாவது உங்கள் மனத்தை அமைதியாக்குவதற்கு நாள்தோறும் பழகவேண்டும். இது கவலையுள்ள நினைப்பிற்குப் பதில் அமைதியுள்ள நினைப்பையும், பலஹீன நினைப்புக்குப் பதில் பலமுள்ள நினைப்பையும் கொள்வதற்கு ஒரு வழி. இதனை நீங்கள் செய்து முடிக்கும் வரையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையைச் சம்பாதித்த காரியங்களிலும் வேலைகளிலும் வெற்றியைடையத்தக்க விதத்தில் உங்கள் மனோசக்திகளைச் செலுத்த முடியாது. இஃது ஒருவனுடைய சிதறுண்ட சக்திகளை ஒரு நல்ல மார்க்கத்தில் செலுத்துவதற்கு உபாயமாகும். சிதறுண்ட பல நீரோட்டங்களையும் கேட்டை விளைவிக்கும் பல நீரோட்டங்களையும் நன்றாக வெட்டியுள்ள ஒரு வாய்க்காலில் செலுத்துவதால், அதன் பக்கத்திலுள்ள பிரயோஜனமற்ற ஒரு நிலத்தைப் பொன் போன்ற கதிர்களைக் கொடுக்கும் ஒரு நன்செயாகவோ அல்லது நல்ல கனிகளைக் கொடுக்கும் ஒரு தோட்டமாகவோ செய்துவிடலாம்; அதுபோல எவன் அமைதியை அடைந்து தனது அகத்திலுள்ள நினைப்போட்டங்களை அடக்கி அவற்றை நல்ல நெறிகளில் செலுத்துகிறானோ அவன், தனது ஆன்மாவை இரக்ஷ¢ப்பதோடு தனது அகத்தையும் வாழ்வையும் பயன் தருவனவாகச் செய்கிறான்.
நீங்கள் உங்கள் மனோ எழுச்சிகளையும் நினைப்புக்களையும் ஆளும் திறமையை அடைந்த காலையில், உங்கள் அகத்துள் ஒரு புதிய மௌனசக்தி வளர்வதையும், அமைதியும் பலமுமுள்ள ஒரு நிலையான உணர்ச்சி உங்களிடத்தில் தங்குவதையும் நீங்கள் அறியத் தொடங்குவீர்கள். அப்பொழுது, உங்கள் அந்தரங்க சக்திகள் வெளிப்படத் தொடங்கும்; அப்பொழுது நீங்கள் வெற்றியைக் கொடுக்கும் அமைதியோடும் நம்பிக்கையோடும் உங்கள் வேலைகளைச் செய்துமுடிக்கும் சக்தியுள்ளவர்களாவீர்கள். நீங்கள் இப்புதிய சக்தியையும் பலத்தையும் அடைகிற சமயத்திலே உங்கள் அகத்துள் “ஆன்ம தரிசனம்” என்று சொல்லா நின்ற அகவிளக்குப் பிரகாசிக்கும். அதன் பின்னர் நீங்கள் இருளில் வழி தெரியாமல் நடக்க மாட்டீர்கள்; வெளிச்சத்தில் வழி தெரிந்து நடப்பீர்கள். அவ்வான்ம விளக்கம் வளரவளரப் பகுத்தறிவும் நுண்ணுணர்வும் அளவு கடந்து அதிகரித்துக் கொண்டிருக்கும். அப்பொழுது எதிர்காலச் சம்பவங்களையும் உங்கள் முயற்சிகளின் பலன்களையும் முன்கூட்டிச் சரியாக அறியத்தக்க ஞான திருஷ்டி உங்கள் அகத்துள் வளரும். உங்கள் அகத்துள் எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் மாறுகின்றீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் புறவாழ்வு மாறுதலடையும். மற்றவர்கள் சம்பந்தமாக உங்கள் மனப்போக்கை நீங்கள் மாற்றுங்காலையில் உங்கள் சம்பந்தமாக அவர்கள் கொண்டுள்ள மனப்போக்கையும் நடக்கையையும் மாற்றுவார்கள். நீங்கள் தாழ்வையும் பலஹீனத்தையும் அழிவையும் கொடுக்கும் நினைப்புக்களை ஒழித்த காலையில், பலமும் சுத்தமும் உயர்வும் பொருந்திய மனங்களால் சிருஷ்டிக்கப்படும் உண்மையும் வலிமையும் ஆக்கமும் பொருந்திய நினைப்போட்டங்களை அடைவீர்கள்; உங்கள் சந்தோஷம் அளவு கடந்து அதிகப்படும்; தன்னை ஆள்வதால் உளதாகும் இன்பத்தையும் பலத்தையும் செல்வாக்கையும் நீங்கள் அடையத் தொடங்குவீர்கள். இவ்வின்பமும் பலமும் செல்வாக்கும் இடைவிடாது உங்களிடத்திலிருந்து வெளியில் சென்று கொண்டிருக்கும்; உங்கள் முயற்சி ஒன்றுமில்லாமலும், உங்களுக்குத் தெரியாமலும் வலிய மனிதர்கள் உங்கள்பால் வந்து சேர்வார்கள்; செல்வாக்கு உங்கள் கையில் கொடுக்கப்படும்; உங்கள் நினைப்புக்களின் மாறுதலுக்குத் தக்கபடி உங்கள் புறநிலைமைகளும் மாறுதலடையும்.
“ஒரு மனிதரது விரோதிகள் அவன் சொந்த வீட்டுக்காரர்களே.” எவன் பயனும் பலமும்சுகமும் அடைய விரும்புகிறானோ, அவன் இன்மையும் இரவும் மலமும் பொருந்தியநினைப்போட்டங்களைக் கொள்ளும் ஒரு கலனாயிருத்தல் கூடாது. அறிவுள்ளகிருகஸ்தன் ஒருவன் தனது வேலைக்காரர்களையெல்லாம் சரியாக ஆண்டு நல்லவிருந்தினரைத் தன் வீட்டிற்கு அழைப்பதுபோல், மனிதன் தனது அவாக்களையெல்லாம்சரியாக ஆண்டு நல்ல நினைப்புக்களைத் தனது ஆன்மாவின் அரண்மனைக்குள்விடுவதற்குக் கற்றுக் கொள்ளவேண்டும். தன்னை அடக்கியாள்வதில் சிறிய வெற்றியைஅடைந்தாலும் அது பெரிய வலிமையை அவனுக்குக் கொடுக்கும். எவன் இந்த மேலானகாரியத்தைப் பூரணமாகச் செய்து முடித்தானோ, அவன் அதற்குமுன் சொப்பனத்திலும்காணாத ஞானத்தையும், மனோபலத்தையும், சாந்தத்தையும் அடைகிறான். தன்னைச்சரியாக ஆளுகிறவன் பிரபஞ்சத்திலுள்ள சகல சக்திகளும் தனக்கு உதவி புரிவதையும்ஊழியம் செய்வதையும் அபரோட்சகமாகக் காண்பான்.
வெண்பா
மிகவுயர்ந்த வான்சுவர்க்கம் வேண்டுவையேல் என்றும்
தகவுயர்ந்த நன்னினைவே தாங்கு;-மிகவிழிந்த
கீழ்நிரயம் வேண்டுவையேல், கேடெல்லாம் நல்குமொரு
தாழ்நினைவே யெஞ்ஞான்றுந் தாங்கு.
(தகவு-ஒழுக்கம்)
நின்னினைப்பே நின்மேல் நிலவும் சுவர்க்கமாம்;
நின்னினைப்பே நின்கீழ் நிரயமாம்;-நின்னினைப்பை
யன்றியிவண் இன்பம் அணுவுமில்லை; நின்னினைப்பை
யன்றியிவண் துன்பமிலை யாங்கு.
(ஆங்கு-அவ்வாறு)
நினைப்பதனை நீத்தக்கால் நீழுலகம் நீங்கும்;
நினைப்பதனை நீத்தக்கால் நீங்கும்-வினைப்பயன்கள்;
நித்தியமா யுள்ள நினைப்பினின்றே காலமுதல்
தத்துவமெல் லாம்நிகழுஞ் சார்ந்து.
(சார்ந்து-பொருந்தி)
மதிப்பும் அவமதிப்பும் மாண்அன்பும் வன்பும்
துதிப்பு மிழிப்புமின்பும் துன்புங்-கதிப்புடனே
ஊழையாள் கின்ற உரஞ்சால் நினைப்பினது
கோழைவே டங்களெனக் கொள்.
(வன்பு-பகை)
விழையும் இரவியது வெள்ளொளியே யீங்கு
மழைவில்லின் பன்னிறமா மாறும்;-தழைவோ
டிலகுமொரு மெய்ப்பொருளே எல்லோருங் காணும்
உலகினது பல்பொருளாம் ஓர்.
(விழையும்-(எல்லோரும்)விரும்பும்)
மெய்ப்பொருளோ நின்மனத்துள் வீற்றுளது;நின்னான்மா
மெய்ப்பொருளை யெய்திநிற்க வேண்டுவையேல்-கைப்பொருளை
நின்மனமெஞ் ஞான்றும் நினைக்கும்படி செயல்நின்
கன்மமென நன்றாகக் காண்.
(கைப்பொருளை-ஒழுக்கமாகிய பொருளை)
அந்நினைவு நின்கொள்கை யாவையுமே மெய்யாக்கும்;
புன்னிரயச் சொற்பனத்தைப் போக்கடிக்கும்; – நன்னடையுந்
தூயதவ மும்பூண்டார் தொன்றுதொட்டு வாழின்பம்
ஏயசுவர்க் கத்துள் இடும்.
(மெய்யாக்கும்-உண்மையாக்கும்)
இன்பத்தை யாக்குவ தின்பநினைப் பெஞ்ஞான்றுந்
துன்பத்தை யாக்குவது துன்பநினைப்-பென்புடல்செய்
புண்ணியபா வங்களுடன் பொய்யிருளும் மெய்யொளியும்
நணணுநினைப் பாக்கிநிற்கும் நன்கு.
(என்பு உடல்-எலும்புடைய சரீரம்)
சீர்சான்ற மெய்யைத் தினமுநினைப் பாயேல்நீ,
சீர்சான்ற மெய்யைத் தெரிவாய்நீ;-ஏர்சால்
மகத்தான மெய்யை மனத்துட்கொள் வாயேல்,
மகத்தான மெய்யாவாய் மற்று.
(மெய்யை-மெய்ப்பொருளை)