"

வலிமையை அடைதல்

உண்மையும், நம்பிக்கையும், தயாளமும் அன்பும் நிறைந்திருக்கின்ற அகத்திற்கு மாத்திரம் மெய்யான வலிமை கொடுக்கப்படுகின்றது. இக் குணங்களைக் கொண்டிராத அகமானது வலிமையை அறிய முடியாது; ஏனெனில் வலிமை, சுகத்தைப் போலவே ஒரு புற உடைமையன்று; ஓர் அக அநுபவம். பேராசையுள்ள ஒரு மனிதன் ஒரு கோடீசுவரனாகலாம். ஆனால், அவன் எப்பொழுதும் துன்பமுள்ளவனாகவும், இழிஞனாகவும், எளியனாகவும் இருப்பான். தன்னினும் மிகுந்த செல்வமுள்ள ஒருவன் உலகத்தில் இருக்கிறவரையில் தன்னைப் புறத்திலும் எளியவனென்றே அவன் நினைத்துக்கொண்டிருப்பான்; ஆனால், நேர்மையும் உதாரமும், அன்புமுள்ள மனிதர் தமது புறஉடைமைகள் கொஞ்சமாயிருந்தபோதிலும் அஷ்ட ஐசுவரியங்களுக்குமுரிய வலிமையை அடைந்திருப்பர்; “அதிருப்தி உடையவனே எளியன்; தனக்குக் கிடைத்துள்ளவற்றோடு திருப்தியுடையவனே வலியன்.” தயாளமுள்ளவனாயிருப்பவனே அதிக வலிமையுள்ளவன்.

பிரபஞ்சத்தில் ஜடமும் சித்துமாகிய சகல நல்ல பொருள்களும் நிறைந்திருக்கின்ற விஷயத்தை நாம் சிந்தித்து, அதனோடு மனிதன் சில தங்க நாணயங்களையோ, சில காணி புழுதி நிலங்களையோ சம்பாதிக்கக் கொள்ளும் குருட்டுத்தனமான ஆசையை நாம் ஒப்பிட்டுப் பார்க்குங்காலையில் சுயநலம் எவ்வளவு இருண்டதென்பதையும், மடத்தனமென்பதையும் நாம் காண்போம். அப்பொழுதுதான் தன்னலநாட்டம் தன்னையே அழிப்பதென்பதைத் தெரிவோம். பிரகிருதியானது ஒன்றையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் எல்லா உயிர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருந்தும், அஃது ஒன்றையும் இழப்பதில்லை; மனிதன் எல்லாவற்றையும் தனக்கென்று வைத்துக் கொண்டிருந்தும், அவன் ஒவ்வொன்றையும் இழந்துவிடுகிறான்.

நீங்கள் உண்மையான வலிமையை அடைய விரும்புவீர்களாயின், நியாயமாகச் செய்யப்படும் ஒவ்வொன்றும் அநியாயமாக முடியுமென்று அநேகர் கொண்டிருக்கிற தப்பு நம்பிக்கையை நீங்கள் கொள்ளாதீர்கள். ஒழுக்கத்தின் வலிமையிலுள்ள உங்கள் நம்பிக்கையை அசைக்கக் கூடிய ‘போட்டி’ என்பதற்கு நீங்கள் இடங்கொடாதீர்கள். ‘போட்டி’யின் விதிகளைப்பற்றி மனிதன் பேசுங்காலையில் நான் சிறிதும் கவனிப்பதில்லை; ஏனெனில், ஒருநாள் அவற்றையெல்லாம் ஓட்டுவதும், இப்பொழுதும் அவற்றையெல்லாம் நியாயமான மனிதனுடைய அகத்திலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் ஓட்டுகிறதுமான மாறாத சட்டத்தை நான் அறிந்திருக்கிறேன். இச் சட்டத்தை அறிந்திருப்பதனால், சகல வகை அயோக்கியங்களும் அழிவை அடையுமென்று தெரிந்து அசையாத அமைதியுடன் இருக்கின்றேன்.

நியாயமென்று நீங்கள் நம்புகிற காரியத்தையே சகல சந்தர்ப்பங்களிலும் செய்யுங்கள்; மெய்ச் சட்டத்தை நம்புங்கள்; பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்காநின்ற தெய்வ சக்தியை நம்புங்கள்; ஒருபோதும் உங்களை அது கைவிடாது; எப்பொழுதும் உங்களை அது காப்பாற்றும். அத்தகைய நம்பிக்கையால் உங்களுடைய நஷ்டங்களெல்லாம் இலாபங்களாக மாறும்; உங்களை வருத்துகின்ற நிந்தனைகளெல்லாம் ஆசீர்வாதங்களாக மாறும். உண்மையையும் தயாளத்தையும் அன்பையும் ஒருபொழுதும் நீங்கள் கைவிடாதீர்கள். அவை உங்களை உண்மையான வலிமையுள்ள நிலைமைக்கு உயர்த்துமாகலான், “தனக்குப் போய்த் தானம்,” என்று உலகத்தார் சொல்வதை நீங்கள் நம்பாதீர்கள். அதனை நம்புதல் ஒருவனது சொந்த சௌகரியங்களை மட்டும் நினைக்கும்படி செய்யுமேயன்றி, மற்றவர்களைப் பற்றி நினைக்கவே விடாது. அதனைக் கைக்கொண்டு நடக்கிறவர்களுக்கு ஒருநாள் வரும்; அந்நாளில் அவர்களை எல்லோரும் கைவிட்டு விடுவார்கள்; அவர்கள் தனிமையாலும் துன்பத்தாலும் அழும்பொழுது அவர்களை ஏனென்று கேட்கவும் அவர்களுக்கு உதவி புரியவும் ஒருவரும் முன்வரமாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி நினைத்தற்கு முன்னர்த் தன்னைப்பற்றி நினைத்தல் மேம்பாடும் தெய்வத்தன்மையுள்ள ஒவ்வொரு மனோ எழுச்சியையும் தடுத்தும் கெடுத்தும் அழித்தும் விடும். உங்கள் ஆன்மா விரிவுறுக; உங்கள் அகம் அன்போடும் தயாளத்தோடும் மற்றவர்களிடத்துச் செல்லுக; உங்கள் இன்பம் பெரியதாகவும் நீடித்து நிலை நிற்பதாகவும் இருக்கும்; சகல வலிமையும் உங்கள் பால் வந்து சேரும்.

நீதி மார்க்கத்தை விட்டு விலகினவர், ‘போட்டி’ தம்மைப் பாதிக்காதபடி தம்மைக் காத்துக் கொள்ளுதற்காக எண்ணிறந்த முயற்சிகள் செய்கின்றனர். நீதி மார்க்கத்தில் ஒழுகுகின்றவர் ‘போட்டி’யினின்று தம்மைக் காப்பதற்காக முயற்சிகள் செய்ய வேண்டிய ஆவசியகமில்லை. இது வெறும் வார்த்தையன்று. யோக்கியதையாலும் நம்பிக்கையாலும், சகல ‘போட்டி’களையும் வென்று, தம்மோடு ‘போட்டி’ செய்த காலத்தில் தாம் தமது ஒழுக்கங்களிலிருந்தும் சிறிதும் விலகாது நடந்து வலிமையை அடைந்துள்ள மனிதர்கள் இக்காலத்திலும் இருக்கிறார்கள். அவர்களை அழிப்பதற்காக முயன்றவர்களெல்லாம் தோல்வியடைந்து கீழே விழுந்துவிட்டார்கள்.

நன்மை என்று சொல்லப்படும் குணங்களையெல்லாம் ஒருவன் கைக்கொண்டிருத்தல்அவனைத் தீமையின் சகல சக்திகளினின்றும் தப்புவிக்கும், இக்குணங்களைவளர்ப்பதனால் ஒருவன் அசைக்க முடியாத வெற்றியை அடைவான். என்றென்றும் நிலைநிற்கத்தக்க வலிமையை அடைவான்.

வெண்பா
தீயவினை நோவு செறிதுன்பம் உட்கவலை
தூயமன வெள்ளுடையில் தோய்ந்ததனால்-ஆயகறை
பின்னிரங்கற் கேணி பிரார்த்தனையூற் றால்நீங்கி
முன்னிறத்த வெண்மைவரு மோ!

அறியாமை மார்க்கத் தடிவைத்த போழ்து
செறியாநிற் கும்பெருகித் தீமை–அறியாமை
எய்தியதன் காரணம் ‘யான்’ என்னும் சுயநயத்தைச்
செய்ததுவே யென்று தெரி.

அறிவுடைமை யாலாம்நீர் அவ்வுடையி லாய
செறிகறையைப் போக்கி வெண்மைசேர்க்கும்;- அறிவுடைமை
அன்புசமா தானம் அறியாமெய்ஞ் ஞானமெனும்
மின்புனலை நல்கும் விரைந்து.

பாவம் செயல்பின் பரிந்திரங்கல் துன்பநெறி;
ஏமநல்கும் மெய்ஞ்ஞானம் இன்பநெறி-ஞால
உயிர்க்கெல்லாம் நன்றாற்ற ஓடிவரும் மெய்ஞ்ஞானம்
செயிர்க்கெல்லாம் வேராம் ‘யான்’ சென்று.

யான் உள்ளே யின்றாக இம்மண்நீர் தீக்காற்று
வான்உள்ளே நிற்கின்ற வாலறிவோம்;-தேன்உள்ளே
ஊறிப் பெருகியெங்கும் ஓடி நிறைந்துவெளி
ஏறிப் பெருகிநிற்கும் இங்கு.

 

வலிமைக்கு மார்க்கம் முற்றும்

License

Icon for the Public Domain license

This work (வலிமைக்கு மார்க்கம் by வ.உ.சி) is free of known copyright restrictions.

Share This Book