"
  1. பாயிரம்

இந்நூல் ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் அரிய நூல்களில் “எளிமையிலிருந்து வலிமைக்கு” எனப் பொருள்படும் ஓர் அழகிய நூலினது முதற் பாகத்தின் மொழிப் பெயர்ப்பு. முதனூலின் ஐந்தாவது அதிகாரத்தின் தொடக்கத்தில் கண்ட ஆங்கிலக் கதையை நம்மவரிற் பெரும்பாலார் கேட்டிருக்க மாட்டாராதலால் அக்கதையின் பெயரினை இந்நூலிற் குறிப்பதால் பயனில்லையென்று கருதி, அதற்குப் பதிலாகப் ‘பாரதக் கதை’ என்று குறித்துள்ளேன். முதனூலின் கருத்துக்களை நம்மவர்கள் எளிதில் உணருமாறு, சிற்சில இடங்களில், சில சொற்களைச் சேர்த்தும் சில சொற்களை விடுத்தும், இம்மொழி பெயர்ப்பைச் செய்துள்ளேன்.

முதனூலில் கண்ட ஆங்கிலச் செய்யுள்களைத் தமிழ்ச் செய்யுள்களாக்கி இதன்கண் சேர்த்துள்ளேன். முதனூலிற் கண்ட விவிலிய நூல் கோட்பாடுகளும் மேற்கோள்களும் இதர மத நூல்களின் கோட்பாடுகளுக்கும் மேற்கோள்களுக்கும் ஒத்திருக்கின்றமையால் அவற்றை அவ்வாறே மொழி பெயர்த்துள்ளேன். இந்நூலில் நான் உபயோகித்துள்ள சில சொற்கள் குறிக்கும் பொருள்களையும் குறித்திருக்கிறேன். நான் இதுவரையில் பார்த்துள்ள இலக்கியங்களில் காணப்படாத ‘எஃது’ என்பது போன்ற ஒன்றிரண்டு சொற்களைப் புதியன புகுதலாக இதில் உபயோகித்துள்ளேன்.

ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் நூல்களெல்லாம் உலகத்திற்கு, முக்கியமாக நம் தேசத்திற்கு, மிக்க நன்மை அளிப்பவையென்பது அறிவிற் சிறந்த பலருடைய அபிப்பிராயம் அந்நூல்கள் நம் வள்ளுவர் மறைக்கொப்பப் போற்றத்தக்கவை. ஆகவே அந்நூலில் கூறியுள்ள பொருள்களைக் கசடற உணர்ந்து கைக்கொண்டொழுகுபவர் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் மனிதர் அடையக்கூடிய மேலான நிலைகளையெல்லாம் அடைவரென்பது திண்ணம். ஆதலால், தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அந்நூல்களால் நன்மை அடைய வேண்டும் என்பதே நான் அவற்றை மொழி பெயர்த்தற்குக் காரணம்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை
கோவிற்பட்டி, 25-7-30.

License

Icon for the Public Domain license

This work (வலிமைக்கு மார்க்கம் by வ.உ.சி) is free of known copyright restrictions.

Share This Book