"

18

தமிழ் நாட்டில் வாழும் அந்தணர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1 பூர்விகக் குடிகள் 2 குடியேறியோர் 3 புதிய அந்தணர்கள்

பூர்விகக் குடிகள்தொல்காப்பியர் காலம் 

தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்தில் அந்தணர்கள் இருந்திருக்கிறார்கள். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுவகைத் தொழில் கொண்ட பார்ப்பனப் பக்கத்தையும், நான்மறைகளையும் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [புறத்திணை இயல் 16, மரபியல் 71 ,  பாயிரம்.]

பூர்விகக் குடிகள்சங்க காலம்

சங்க காலத்தில் அந்தணர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டனர் என்பதற்கான பல சான்றுகள் அக்கால இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார்  என்று ஒரு புலவர் ஓர் அரசனிடம் கூறுவதாக உரைக்கிறது புறம் 43. புறம் 99இல் ஔவையார் அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோர் அமரர்ப் பேணி ஆவுதி அருத்திய (தேவர்களை மகிழ்விக்க வேள்வி செய்த) பெருமையைப் பேசுகிறார். புறம் 166, நான்கு வேதம், ஆறு ஆங்கம் ஓதி உணர்ந்த அந்தணர்கள் அறம் ஒன்று மட்டுமே புரிந்ததையும் 21 வகையான வேள்விகள் பற்றியும் குறிப்பிடுகிறது. புறம் 367 முத்தீ பற்றிக் குறிப்பிடுகிறது.

சங்க காலப் புலவர்களில் பலர் அந்தணர்கள். புறநானூற்றுப் புலவர்களில் மூவர் –  தாமோதரனார், பெருஞ்சாத்தனார், பேரிசாத்தனார் – வடம வண்ணக்கண் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். வடம என்ற சொல் வடநாட்டிலிருந்து வந்தவர் என்று குறிப்பதாகக் கொள்ளலாம். இவ்வாறு வடம என்ற அடைமொழி பெறாத அந்தணர்களும் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் கபிலர், கவுணியன் விண்ணந்தாயன். அவர்கள் இந்த மண்ணின் பூர்விகக் குடிகளாக இருத்தல்  வேண்டும்.

பூர்விகக் குடிகள்களப்பிரர் காலம்

களப்பிரர் காலத்தில் வாழ்ந்த பூர்விகக் குடி அந்தணர்களில் ஒரு பிரிவினர் சோழியர் என அழைக்கப்பட்டனர் எனத் தெரிகிறது. ஒரு காலத்தில் இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கவேண்டும். குறைந்தது, சோழநாடு முழுவதும் பரவி இருக்கவேண்டும். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர். இன்று தில்லை தவிர்த்தப் பிற பகுதியில் இருந்த சோழியப் பிராமணர்கள் புதிதாக வந்தவர்களுடன் கலந்து விட்டனர்.

1 தீட்சிதர்கள்

நடராஜாவை முதல்வராகக் கொண்ட, தில்லை மூவாயிரவர் என்று முற்காலத்தில் சிறப்பிக்கப்பட்ட இவர்கள் இன்று எண்ணிக்கையில் சில நூறுகளாகக் குறைந்துவிட்ட போதிலும் பிற அந்தணர்களுடன் திருமண உறவு கொள்ளாமல் தங்கள் தனித் தன்மையை இன்றும் பாதுகாத்து வருகின்றனர். தில்லை நடராஜர் ஆலயம் இவர்களது பொதுச் சொத்தாகக் கருதப்படுகிறது.

மற்றத் தமிழ்நாட்டுக் கோயில்களில் பூசை செய்யும் சிவாசாரியர்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சிவாசாரியர்கள் வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் கற்று ஆகமத்தைப் பிரதானமாகக் கொண்டிருப்பது போல அல்லாமல், இவர்கள் வேதம் முழுமையும் கற்பவர்கள். அம்மையாரால் மயானத்தாடியாக வர்ணிக்கப்பட்ட ஆடற்பெருமானை அம்பலத்தில் ஏற்றி அவருக்கு வைதிக முறையிலான வழிபாட்டை ஏற்படுத்தியவர்கள் இவர்களே ஆதல் வேண்டும்.

தங்கள் சிகையைப் பக்கவாட்டில் முடிந்து கொள்ளும் இவர்களது முறை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது. முன் குடுமிச் சோழியன், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற வழக்காறுகளில் குறிப்பிடப்படுபவர்களும் சோழநாட்டின் பூர்வீகக் குடிகளுமான சோழியர்களில் ஒரு பிரிவினராக இவர்கள் இருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். ஆனால் இன்று அவர்கள் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் தீட்சிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தீட்சிதர் என்பது ஒரு குலப் பெயரல்ல. விரதம் பூண்டவர் என்று பொருள்படும் இப்பட்டம், யாகம் செய்தவர்களுக்கும் அவர்கள் பரம்பரையினருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்படுவது. மற்ற தீட்சிதர்களுக்கும் தில்லை தீட்சிதர்களுக்கும் தொடர்பு இல்லை. மிகுந்த எதிர்ப்புக்கிடையே எப்படியாவது நடராஜாவைத் தில்லை அம்பலத்தில் நிலை நாட்டுவது என்று விரதம் பூண்டிருப்பார்கள் என ஊகிக்கலாம். மற்றச் சோழியர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே இவர்கள் முன் குடுமியைப் பக்கவாட்டுக் குடுமியாக மாற்றிக் கொண்டிருக்கக் கூடும். [முன் குடுமி வழக்கம் கொண்ட கேரள நம்பூதிரிகளும் இந்தச் சோழியரே என்றும் ஆதி சங்கரர் அந்தக் குலத்தில் தோன்றியவர் என்றும் காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறுகிறார். தெய்வத்தின் குரல் பாகம் 5 சங்கரர் வரலாறு]

2 நம்பியார்கள்

சைவத்தைச் சார்ந்த 300 சோழிய அந்தணர்கள் ஆவுடையார்கோவிலை ஒட்டிய பகுதியில் வாழ்ந்தனர். தில்லை மூவாயிரவர் போல, இவர்கள் ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் எனப்பட்டனர். இன்று அக்கோவிலில் பூசை செய்பவர்கள் மட்டும் நம்பியார் என்ற பட்டப் பெயர் கொண்டவர்கள். இவர்கள் இன்றும் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் முன்குடுமியைக் கைவிட்டு விட்டனர். ஆனால் ஆவுடையார் கோவிலில் உள்ள சிற்பங்கள் அங்கு முன்பு வாழ்ந்த பிராமணரும், பிறரும் முன்குடுமி கொண்டிருந்தார்கள் என்று காட்டுகின்றன.

3 தென்கலை வைணவர்கள்

பழந் தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு நம்பி என்ற பட்டம் பெருவழக்காக இருந்ததைப் பார்க்கிறோம். தென்கலை வைணவர்களும் சோழியர்களே. மற்ற இடங்களில் உள்ள தென்கலையார் இதை மறந்து விட்டபோதிலும் திருவெள்ளரையில் பூசை செய்யும் தென்கலை வைணவர்கள் இன்றும் தங்களைச் சோழியர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள்.  அவர்களும் நம்பி என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்தனர். ராமானுஜரின் உறவினர்களும் குருமார்களும் பலர் நம்பி என்ற பின்னொட்டு தாங்கியவர்கள்.

4 ஆனைக்கா அந்தணர்கள்

திருவானைக்காவிலும் வைதிகப் பிராமணர்களே பூஜை செய்கிறார்கள். (பிரதமசாகி, அய்யாநம்பி, திருணபட்டன் எனப் பல்வகைப் பட்டப் பெயர்களைக் கொண்டவர்கள்.) அங்கு பின்பற்றப்படும் பூஜை முறையும் வித்தியாசமாக உள்ளது. இவர்கள் இன்று வடமர்களுடன் கலந்து விட்டாலும் இவர்களது முன்னோர்கள் முற்காலத்தில் சோழியர்களாகவே இருந்திருத்தல் வேண்டும்.

5 வீழி அந்தணர்

ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் போல் திருவீழிமிழலை அந்தணர் ஐநூற்றுவர் என்ற வழக்கும் உண்டு. இவர்களும் பண்டைச் சோழியர்களாகவே இருத்தல் கூடும். ஆனால் இன்று அங்கு சோழியர் என்று சொல்லிக் கொள்வோர் இல்லை.

6 நயினார்,  பட்டர்,  திருசுதந்திரர்

திருவாரூரில் பூசை செய்பவர்களில் சிலர் நயினார் என்றும், சிலர் பிரமராயர் என்றும் கூறப்படுகின்றனர். திருச்செந்தூரில் பூசை செய்யும் திருசுதந்திரர் என்பவர்களும் மதுரைக் கோவிலில் பூசை செய்யும் பட்டர்களும் இத்தகைய பழந் தமிழ்க் குடிகளே. பிற ஊர்க் கோவில்களில் பூசை செய்பவர்களும் கல்வெட்டுகளில் பட்டர் என்றே குறிக்கப் பெற்றுள்ளனர். ஆனால் இன்று மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ளவர்கள் தவிர ஏனையோர் தங்களைச் சிவாசாரியர்கள் அல்து குருக்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

களப்பிரர் கால அந்தணர்கள்

சைவ சமய வரலாற்றில் அம்மையாருக்கும் சம்பந்தருக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த அந்தணர்களின் பங்கு முக்கியமானது. தில்லை மூவாயிரவர், ஆவுடையார் கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர், திருவானைக்கா சோழியர்கள், செந்தூர் ஈராயிரவர் தவிர பிற அந்தணர்கள் அக்காலச் சமய மாற்றங்களுக்கு உடன்பட்டிருக்க மாட்டார்கள் என்பது சைவச் சோழியர்களின் எண்ணிக்கை சுட்டப்பட்டதிலிருந்து அறியலாம்.

சிவன் வேத தெய்வம் அல்ல என்பதாலும், வேத ருத்திரன் தவிர வேறு இரண்டு தோற்றுவாய்களிலிருந்து சைவம் உருவாக்கப்பட்டது என்பதாலும் வேள்விகளில் சிவனுக்கு அவிர்ப்பாகம் கொடுப்பதை அவர்கள் எதிர்த்திருக்கக் கூடும். இறுதியில் சைவ அந்தணர்கள் வெற்றி பெற்றனர். இதுவே தக்கன் கதை நமக்கு உணர்த்தும் வரலாற்றுச் செய்தியாகும். அம்மையாரால் குறிப்பிடப்படாத இப் புராண நிகழ்ச்சி, தேவாரத்தில் பெருமளவு குறிக்கப்படுவதிலிருந்து இது இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.

புதிய குடியேற்றம்

அம்மையார் காலத்துக்குப் பின் வந்து குடியேறியவர்களில் வடமர் என்ற குழு மட்டும் தமிழ்ப் பெயரைத் தாங்கி நிற்கிறது. மற்றவற்றின் பெயர்கள் வடமொழியில் உள்ளன. எண்ணிக்கையில் மிகுந்தவர்களும் வடமர்களே. பல்லவர் காலத்தில் வந்த பிரகசரணம் (தண்டந்தோட்டம் கல்வெட்டு), வாத்திமர், கேசியர், ராஜேந்திர சோழன் காலத்தில்  குடியேற்றப்பட்ட அஷ்ட ஸஹஸ்ரம் ஆகிய குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் உரியதாக தலா பதினெட்டு கிராமங்கள் உண்டு. வடமர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கிராமங்கள் இல்லை. அவர்கள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். குறிப்பாக, சோழநாட்டில் வாழ்ந்த வடமர் எண்ணிக்கை மிகுதி.

இவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பல்வேறு காலங்களில் வடபுலத்திலிருந்து குடியேறியவர்களாக இருக்க வேண்டும். வடமருக்கு மட்டும் தமிழ்ப் பெயரும் மற்றவர்க்கு வடமொழிப் பெயரும் இருப்பதிலிருந்து பின்வருமாறு ஊகிக்கலாம். முதலில் வந்தவர்களுக்கு இங்குள்ள தமிழர்கள் தமிழில் வடமர் என்று பெயர் சூட்டினர். பின்னர் வந்தவர்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்றாலும் அவர்கள் தங்களைச் சாராதவர்கள் என்று வேறுபடுத்திக் காட்டுவதற்காக வடமர்கள் தங்கள் மொழியில் அவர்களுக்குப் பெயரிட்டு இருக்கலாம். எல்லோரும் வருணத்தால் அந்தணர் எனினும் இக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கவில்லை. பின்னர் வந்த ஒவ்வொரு குழுவுக்கும் 18, 18 கிராமங்களை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மையான இடங்களில் வடமர் வாழ்ந்தனர்.

சோழ நாட்டில் இவர்களுக்கென இறையிலி நிலங்கள் பெருமளவில் வழங்கப்பட்டிருப்பதை நோக்கும் போது, களப்பிரர் காலத்தில் சீரழியும் நிலையில் இருந்த சைவ சமயத்திற்குப் புத்துயிர் கொடுக்கவென, வலிமை குன்றிய நிலையில் இருந்தபோதும் சோழ அரசர்கள் இவர்களைப் பெருமளவில் குடியேற ஊக்குவித்திருக்கலாம் என்பது அறியப்படுகிறது.

புதிதாகக் குடியேறிய எல்லோருமே சைவத்துக்கு ஆதரவு அளித்தார்கள் எனக் கூற முடியவில்லை. சிலர் வைணவத்தின் பக்கம் சார்ந்தனர். அவர்களே வடகலை வைணவர்கள் எனப் பெயர் பெற்றிருக்கக் கூடும். இவர்கள் வைணவத்தைப் பின்பற்றிய போதிலும் தென்கலை வைணவர்களுடன் சமய நடைமுறைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தனர். சமூக அளவிலும் அவர்கள் தென்கலையாருடன் உறவு கொள்வதைத் தவிர்த்தனர். வடகலை வைணவர்கள் இறந்தால் தீட்டுக் காக்கும் வழக்கம் சில வடமரிடையே இருந்ததாகக் கூறப்படுவதிலிருந்து [The people of India –Tamilnadu, vol.  3 – Page 1407– Author V.S.Deep Kumar, Editor K.S.Singh .] இவர்கள் வடமர்களே என்பதும் சமய வேற்றுமை காரணமாகப் பிற்காலத்தில் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர் என்பதும் தெரிகிறது. [தென்கலை வைணவர்கள் தமிழுக்கும் கோவில் வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வடகலையார் வைதிகச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இவற்றிலிருந்து வடமர்களில் வைணவத்தைத் தழுவியோரே வடகலை வைணவராயினர் என்பது தெரிகிறது]

மராட்டியப் பகுதியிலிருந்து குடியேறியதாகக் கருதப்படும் வடமர்கள் தவிர விந்தியமலைக்கு அப்பாலிருந்தும் சில அந்தணர்கள் குடியேறி இருக்க வேண்டும் என்பதைப் பின் வரும் கதைகளிலிருந்து ஊகிக்கலாம்.

யாக்ஞவல்கியர் என்பவர் வைசம்பாயனரின் சீடர். சில காரணங்களால் சீடனைக் கோபித்த அவர் நான் கற்றுக் கொடுத்த வேதத்தைக் கக்கிவிட்டு வெளியேறு என்று உத்திரவிட்டார். அவர் அதைக் கக்கியதாகவும் மற்ற சீடர்கள் புறா உருக் கொண்டு அதை உண்டதாகவும் கூறுவர். அதுவே கிருஷ்ண யஜுர் வேதமாகும். பின்னர் யாக்ஞவல்கியர் சூரியனைக் குருவாகக் கொண்டு மீண்டும் வேதத்தைப் பயின்றார். அது சுக்ல யஜுர்வேதம் எனப்படுகிறது. தமிழ்நாட்டில் சுக்ல யஜுர் வேதக்காரர்கள் குறைந்த அளவில் உள்ளனர். அவர்கள் மத்தியான்னப் பறையர் என்றும் அழைக்கப்பட்டனர். வட இந்தியாவில் யஜுர் வேதக்காரர்களில் சுக்லப் பிரிவினர் மட்டுமே உண்டு.

அடுத்த கதை பெரிய புராணத்தில் உள்ள சோமாசி நாயனாரைப் பற்றியது. அவரைப் பற்றிச் சேக்கிழார், சிவனடியார் எத்தன்மையராக இருப்பினும் அவரை வணங்குபவர் என்று சுருக்கமாகக் கூறியுள்ளார்.

எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்

அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்

சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை

நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்

இது தொடர்பாக செவிவழிச் செய்தி ஒன்று உண்டு. சோமாசியார் ஒரு வேள்வி செய்தார். அதற்குச் சிவபெருமான் நேரில் வந்து அவிர்ப்பாகம் பெறவேண்டுமென்று விரும்பினார். பல அந்தணர்கள் புடை சூழ வேள்வி நடந்து கொண்டிருக்கும்போது உணவு வேண்டி ஒரு சண்டாளன் வந்ததைக் கண்ட சோமாசியார், வித்தையிலாப்புலையனும்அஃதென்னும்வேதம் என்பதற்கிணங்க அவிர்ப்பாக உணவை அந்தச் சண்டாளனுக்கு அளித்தார். மற்ற அந்தணர்கள் அதை எதிர்த்தனர். சண்டாள வடிவில் இருந்த சிவன் அந்தணர்களைப் பறையர்களாக மாற்றிச் சபித்தார். அவர்கள் தவறை உணர்ந்து மன்னிக்க வேண்டிக் கொண்டதன் பேரில் சாபத்தின் கடுமையைக் குறைத்து, மத்தியானத்தில் மட்டும் நீங்கள் பறையர்களைப் போல் நடந்து கொள்வீர்களாக என்றார்.

இந்த இரண்டு கதைகளையும் சேர்த்துப் பார்க்கையில் கீழ்க்கண்டவாறு  நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

விந்தியத்திற்கு வடக்கிலிருந்து இங்கே குடியேறி இருந்த பிராமணர்களைக் கொண்டு சோமாசியார் வேள்வி செய்திருக்கலாம். அவர்கள் ருத்திரனை யாகத் தலவனாகக் கூறும் ருக்வேத வழியைப்(ருக் 1.43.4, 4.3.1, 1.72.6) பின்பற்றாமல், ருத்திரனுக்குக் காயமுற்ற பிராணிகள், மீந்து போனது, தரையில் சிந்தியது இவை தான் கொடுக்கப்படவேண்டும் என்ற சதபத பிராமண [சதபத பிராமணம் 1.7.4.9 as quoted in The concept of Rudra Siva through the ages by Mahadev chakravarti] வழி வந்தவர்களாக இருக்கக் கூடும். ருத்திரனின் மறு பெயராகக் கருதப்பட்ட சிவனுக்குப் பிரதானமான இடம் கொடுத்ததை ஏற்றுக் கொள்ளாமல், தட்சன் கதையில் நடந்தது போல, எதிர்த்திருக்கலாம். அதன் காரணமாக அவர்களை உள்ளூர் அந்தணர்கள் புறம் தள்ளி இருக்கலாம்.

குடியேறியவர்களில் வடமர் என்பவர்கள் சைவ மறுமலர்ச்சியில் பெரிதும் உதவி புரிந்ததை முதலில் கண்டோம். ஆனால் அவர்கள் வேதம் ஓதிக் கொண்டும் வேள்விகள் செய்து கொண்டும் இருந்தார்களே அன்றிக் கோவில் பூசகர்கள் பணியில் ஒரு போதும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. கோவிலுடன் அவர்களது தொடர்பு அங்கு அத்தியயன பட்டர் பணி -மாலை வேளைகளில் வேத பாரயணம் செய்தல்- மட்டுமே.

புதிய அந்தணர்கள்

சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகியது. எனவே கோயிலில் பணி புரிவதற்குரிய பூசகர்களின் தேவையும் மிகுந்தது. எனவே பிற சாதியினர் அந்தணராக்கப்பட்டிருப்பர் என்று நினைக்க இடமுண்டு. சிவன் கோவில் பரிசாரகர் பிராமணப் பிள்ளை எனச் சோழநாட்டில் அழைக்கப்படுவது இதற்கு வலுச்சேர்க்கிறது.                       

சோழர் காலக் கல்வெட்டுகளில் பூசகர்கள் சிவப் பிராமணர்கள் எனக் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் பெரும்பாலும் நம்பி, பட்டர், பட்டஸ்ய என்னும் பின்னொட்டைக் கொண்டிருந்தது. இப்பெயரைக் குடியேறிய பிராமணர்கள் வைத்துக் கொள்வதில்லை. பட்டர், நம்பி என்பன பழமையான அந்தணரைக் குறிப்பன. வைணவப் பூசகர்கள் பட்டாசாரியர் என அழைக்கப்படுகின்றனர். பட்டஸ்ய என்பது பட்டருடைய என்று பொருள் தருவது. இது புதிதாக அந்தணராக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயராக இருக்கலாம்.

மயூரசன்மன் என்னும் கடம்ப மன்னன் காலத்தில் சில ஆந்திர பிராமணர்கள் பிராமணர் அல்லாதார் சிலரைப் பூணூல் அணிவித்து அந்தணராக்கி அவர்களுக்குப் புதிய பின்னோட்டுப் பெயர் அளித்ததாகக் கூறப்படுகிறது.[The peoples of India Vol – I  page 169] அது போலத் தமிழகத்திலும் செய்யப்பட்டிருக்கலாம்.

திருவலஞ்சுழிக் கல்வெட்டு ஒன்றில் ஒரு சிவாசாரியரின் பெயர் திருவெண்காடன் செட்டி பெரியான் என்று கூறப்படுவது இதை வலுப்படுத்துகிறது. மேலும், அந்தணக் குடும்ப உறுப்பினர்கள் தங்களைக் குறிக்கும்போது சூத்திரம், கோத்திரம் சுட்டுவது இயல்பாகும். ஆனால் வலஞ்சுழியில் காணப்படும் கல்வெட்டுகள் சிலவற்றில் இந்நிலை இல்லை. [வலஞ்சுழிவாணர் – மு.நளினி, இரா.கலைக்கோவன்.] இவர்கள் முற்காலத்தில் அரசரின் சமாதி மீது அமைக்கப்பட்ட நடுகல் அல்லது லிங்கத்திற்குப் பூசை செய்ய நியமிக்கப் பட்டவர்களின் பரம்பரையினராக இருக்க வாய்ப்பு மிகுதியும் உண்டு.

பூர்விக இடத்தைப் பொறுத்து இன்றைய சிவாசாரியர்கள் திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று வகையினர். இந்த மூன்று இடங்களிலும் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து சிவாசாரியர்கள் வரவழைக்கப் பட்டுக் குடியமர்த்தப்பட்டனர் என்று சித்தாந்த சாராவளிக்கு உரை எழுதிய அனந்த சிவாசாரியர் கூறுகிறார். [புதுவை மண்ணில் ராசராசன் கண்ட கலைக்கோயில் – அரு. அப்பாசாமி பக்.147] தமிழ்நாட்டுச் சிவாசாரியர்கள் பண்பாட்டு வகையில் தமிழர்களாகவே இருப்பதால் அவர்கள் இந்த மூன்று இடங்களில் ஆந்திர ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட பிற சாதித் தமிழர்களாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. புதிதாக அந்தணராக்கப்பட்டவர்கள் பழைய பட்டர்களுடன் திருமண உறவு கொண்டிருக்கலாம்.

முற்காலத்தில் சிவாசாரியர்கள் முழுமையாக வேதப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கக் கூடும். காலம் செல்லச் செல்ல, அரச ஆதரவும் மக்கள் கண்காணிப்பும் இன்மை காரணமாக, கோயில் பூசைக்குத் தேவையானதை மட்டும் கற்றால் போதும் என்ற எண்ணம் ஏற்பட்டு, தற்போது ருத்ரம், சமகம் ஆகிய பகுதிகளை மட்டும் கற்கின்றனர். பிராமணரின் பல வழக்கங்களைக் கடைப்பிடித்த போதிலும் இன்றும் சிவாசாரியர்கள் தங்களைப் பிராமணரிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்.

தமிழ் நாட்டில் ஸம்ஸ்கிருதம் வைதிகச் சமயத்தவரால் புகுத்தப்பட்டது அல்ல.

தொல்காப்பியர் காலத்திலேயே வடசொற்கள் இருந்ததை அறிகிறோம். சங்க காலத்திலும் வேதம், வேதியர், ஸம்ஸ்கிருதம் யாவும் இருந்தன. வட சொல் பயன்பாடு மிகுதிப்பட்டது களப்பிரர் காலத்தில் தான். வடக்கிலிருந்து வந்த சமண சமயம் சூரசேனி என்னும் பிராகிருதத்தையும், சாக்கியம் பாலி என்னும் பிராகிருதத்தையும் கொணர்ந்தன. மகாயான புத்த மதமோ ஸம்ஸ்கிருதத்தையே முழுவதும் பயன்படுத்தியது.

பிராகிருதம் என்பது ஸம்ஸ்கிருதத்தின் கொச்சை வடிவம், அக்கால வட இந்தியாவின் பேச்சு மொழி. தென்னாட்டில் பிராகிருதம் வழக்கில் இல்லை. காளிதாசரின் நாடகங்கள், உயர்குடி ஆண் பாத்திரங்கள் ஸம்ஸ்கிருதத்தில் பேசுவதாகவும் பெண்களும் தாழ்குடியினரும் பிராகிருதத்தில் பேசுவதாகவும் அமைந்துள்ளன. சமண சாக்கிய இலக்கியங்கள் பிராகிருதத்தில் அமைந்துள்ளன.

வடக்கிலிருந்து வந்த சமண சாக்கியர் தமிழ் மக்களுடன் பிராகிருதம் மூலமாகத் தொடர்பு கொண்டிருக்க முடியாது. ஆயினும் தமிழ்நாட்டில் ஸம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் அந்தணர்களிலும் மற்றவர்களிலும் சிலர் இருந்திருக்க வேண்டும். எனவே தம் கொள்கைகளைப் பரப்பப் பிராகிருத மொழியை விட ஸம்ஸ்கிருதமே ஏற்ற ஊடகம் என உணர்ந்து அவர்கள் அதையே பயன்படுத்தி இருக்கக் கூடும்.

திருஞான சம்பந்தரின் பாடல்களை விட அப்பரின் பாடல்களில் தான் வடசொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மருள் நீக்கியார் என்ற தமிழ்ப் பெயர் தாங்கிய அப்பர், சமண சமயத்தில் சேர்ந்த பின் தருமசேனர் என்ற வடமொழிப் பெயர் பெற்றதையும், தருமபாலர், புத்தமித்திரர் போன்ற வடமொழிப் பெயர் தாங்கிய புறச் சமயத்தார் அனைவரும் பச்சைத் தமிழரே என்பதையும்  கவனிக்க வேண்டும்

எனவே தான் மண்ணின் மொழியில் பாக்கள் இயற்றிய ஞானசம்பந்தர் தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன் என்று பெருமிதத்தோடு கூறிக் கொள்கிறார். திருமூலரும் என்னை நன்றாக இறைவன் படைத்தான் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு என்று கூறிப் பரவசப்படுகிறார்.

பின் ஆலயங்களில் ஸம்ஸ்கிருதம் புகுந்தது எப்படி?

சமணத்திலிருந்து புதிதாகச் சைவத்துக்கு வந்தவர்களைக் கவர்வதற்காக ஸம்ஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மதம் மாறியவரின் உற்சாகம் என்பதற்கிணங்கப் புதிதாக அந்தணராக்கப்பட்டவர்கள் பழைய அந்தணர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக ஸம்ஸ்கிருதத்தை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கி  இருக்கலாம்.

அந்தணர்கள் சிவாலய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருவதில்லையா ?

அந்தணர்களுக்கு வேதத்தைக் காப்பாற்றும் பொறுப்பு இருப்பதால் அவர்கள் வைதிகக் கர்மாக்களுக்கு முன்னுரிமை தருவது உண்மையே. எனினும் அவர்கள் கோவில் வழிபாட்டைப் புறக்கணிப்பதில்லை. சொல்லப்போனால், மற்றவர்கள் அங்காளம்மன், காளி, ஐயனார் முதலான தொல்பழம் தெய்வங்களையே குலதெய்வமாகக் கொண்டிருக்க, சிவனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் அந்தணர்கள் மட்டுமே. ஆம். வைதீஸ்வரன்கோவிலில் உள்ள வைத்தியநாதப் பெருமானைச் சிவாசாரியர் அல்லாத அந்தணர்களில் பெரும்பாலானோர் குலதெய்வமாகக் கொண்டுள்ளனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வேதமும் சைவமும் Copyright © 2014 by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.