8
அம்மையார் காலத்துக்கும் திருமூலர் காலத்துக்கும் இடையில் தமிழ் நாட்டில் சைவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பல. அவையாவன –
1 இறைவனுக்குச் சிவன் என்ற பெயர் ஏற்பட்டது.
2 நமசிவாய மந்திரம் பிரபலமாயிற்று
3 கணபதி வழிபாடு ஏற்பட்டது.
4 திருநீறு பூசும் வழக்கம் ஏற்பட்டது.
5 ஆடற்பெருமான் வழிபாடு பரவியது.
1 மஹாதேவர்சிவன்ஆனார்
அம்மையார் காலம் வரை, புலமை படைத்தவர்கள் பலவாறான அடைமொழிகள் கொண்டு போற்றியபோதிலும், பொதுமக்கள் சிவனைக் குறிப்பிட ஏதேனும் ஒரு பெயரை மட்டுமே பயன்படுத்தி இருக்கக் கூடும். அப்பெயர் பெருந்தேவன் என்பதாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இமயமலை தேவர்களின் உறைவிடமாகக் கருதப்பட்டது என்பதற்குப் பெரும்பாணாற்றுப்படை சான்று தருகிறது. அந்தத் தேவர்களில் பெரியவராகவும் தலைவராகவும் சிவன் கருதப்பட்டிருக்கக் கூடும். அப்பெயர் கொண்ட புலவர் ஒருவர் சங்க காலத்தில் இருந்ததை அறிகிறோம். இதே பொருளுடைய வானோர் பெருமான் என்ற தொடரை அம்மையார் பயன்படுத்துகிறார்.
தேவாரக் காலத்தில் சிவன் என்ற பெயர் வழக்கிற்கு வந்துவிட்டபோதிலும் அப்பெயரை மாணிக்கவாசகர் பயன்படுத்திய அளவுக்குத் தேவார ஆசிரியர்கள் வழங்கவில்லை. அவர் காலம் தொடங்கித் தான் மக்களும் அதைப் பெருவழக்காக ஆக்கியிருக்கக் கூடும். ஆயினும் மணிவாசகருக்குப் பிந்திய காலக் கல்வெட்டுகளிலும் சிவனைக் குறிக்கப் பெருந்தேவன் என்ற சொல்லின் வடமொழி வடிவமான மஹாதேவர் என்ற பெயரே மிகுதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாகப் பயன்படுத்தப்பட்ட சொல் உடையார் என்பதாகும். சிவன் என்ற சொல் அரிதாகவே ஆளப்பட்டுள்ளது.
அதர்வண வேதத்தில் 9-7-7 தான் முதன் முதலாக ருத்திரனுக்கு மஹாதேவன் என்ற பெயர் கூறப்படுகிறது. அடுத்ததாக சதபத பிராமணத்திலும் 6.1.3.7 கௌசீதகி பிராமணத்திலும் 6.1.9 வருகிறது. சிவனை ஏற்றுக் கொள்ள வேதம் படிப்படியாக மாற்றம் அடைந்து வருவதை இது காட்டுகிறது.
தமிழ் நாடு தவிர்த்த பிற இந்திய மாநிலங்களில் இன்று எல்லாச் சிவன் கோவில்களும் மஹாதேவர் பெயராலேயே வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கேரளத்தில் எட்டுமானூர் மஹாதேவர் அம்பலம், வைக்கம் மஹாதேவர் அம்பலம், திருவைராணிக்குளம் மஹாதேவர் அம்பலம் முதலானவை, வட இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோவில், உத்தராஞ்சலில் தெஹ்ரி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரர் கோவில், துவாரகையிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவில், வாராணாசியில் உள்ள சாம்ராஜ்யேஸ்வரர் கோவில், நேபாளத்தில் கோகர்ணத்தில் உள்ள விருந்தாவனம்.
தற்காலத்திலும் மஹாதேவர் என்ற பெயர் முக்கியத்துவம் பெற்றுள்ளதைக் காணலாம். காரைக்கால் அம்மையார் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் அம்மையார் இறைவனோடு ஐக்கியமாகும் வேளையில் சொல்லப்படும் கோஷத்திலும் (தேவ தேவ மஹாதேவ), ஆன்மீகக் கூட்டங்களில் நம பார்வதி பதயே என்று கோஷத்திற்கு எதிர்க் கோஷமாகவும் (ஹர ஹர மஹாதேவ), ஸ்மார்த்தர்கள் காக்கைக்கு உணவளிக்க அழைக்கும்போதும் மஹாதேவர் என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் தான் சிவன் என்ற பெயர் ஏற்பட்டது என்பதையும், குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காகத் தான் அது ஏற்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது என்பதையும், சோழர்களுக்குப் பிற்காலத்தில் தான் அப்பெயர் பெருவழக்காக ஆகியது என்பதையும் அறிகிறோம். சமுதாய மாற்றங்கள், குறிப்பாகச் சமயத் துறையில் மாற்றங்கள் குறுகிய காலத்தில் நிகழ்ந்து முடிவதில்லை. சிவன் என்ற பெயரும் அவ்வாறு நீண்ட கால அளவில் சிறுகச் சிறுகத் தான் ஏற்கப்பட்டதை அறியமுடிகிறது. சிவன் என்ற சொல் எப்படி வந்திருக்கக் கூடும்?
கறைமிடற்று அண்ணல் சிவந்த மேனி உடையவர் என்ற கருத்து சங்க கால நூல்களில் காணப்படுகிறது. அகநானூறு கடவுள் வாழ்த்து அவரது செவ்வான் அன்ன மேனியைப் புகழ்கிறது. அம்மையார் பாடல்களில் இறைவனது நிறம் சிவப்பு என்றும் பொன் வரை போன்றது என்றும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இறைவன் சிவன் என்ற பெயரால் சுட்டப்படவில்லை. எனவே சிவந்த நிறம் மட்டுமன்றி, வேறு ஒரு காரணமும் சேர்ந்து கொண்டதால் தான் அப்பெயர் வழங்கலாயிற்று என ஊகிக்கலாம்.
சிவகதிஅருள்பவர்சிவன்
முத்தி நிலையைக் குறிப்பிடச் சமணர்கள் சிவகதி என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர் என்று திரு.வி.க. கூறுகிறார். [காரைக்கால் அம்மையார் பாடல்களுக்கு உரை – திரு.வி. கலியாணசுந்தரனார்] இந்த வடசொல் மங்கலகரமான, நல்ல நிலைமை என்று பொருள் தருவது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட சமணர்களைப் பொறுத்தவரை, சிவகதி என்பது இறைவன் என்ற ஒருவர் இல்லாமலேயே மகாவீரர் கொள்கைகளின் மீது நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் இவற்றால் விளைவது.
அட்ட மூர்த்தியாக விளங்கும் இறைவன் அருளால் தான் பிறவித் துயர் தீர்த்துப் பிறவா நிலையாகிய சிவகதியைப் பெற முடியும் என்று நம்பிய அடியார் மணிமேகலையில் சைவவாதி [மணிமேகலை 27-87] என்று குறிப்பிடப்படுகிறார். மணிமேகலைக்குப் பிற்பட்ட காலத்தவராகிய அம்மையார் சிவன் என்ற பெயரை வழங்காமல், சிவகதியை மட்டும் முதல் மூத்த திருப்பதிகத்தின் கடைக்காப்பில் குறிப்பிடுகிறார்.
சிவகதி என்பது ஒரு நிலை என்ற கருத்து வளர்ந்து அது பூவுலகம், சுவர்க்கம் போல ஒரு தனி உலகமாகக் கருதப்படலாயிற்று. அதனால் சிவலோகம் என்ற சொல் பிறந்தது. தேவார ஆசிரியர்கள் சிவகதி மற்றும் சிவலோகம் ஆகிய சொற்களைப் பிறப்பு இறப்பு இல்லாத முத்தி நிலையைக் குறிப்பிடப் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையை அருள்பவனைச் சிவலோகன், சிவலோகநாதன், சிவன் என்ற பெயர்களால் சுட்டுகின்றனர். [சிவலோகம் என்பது சிவன் வசிக்கும் இடமாகக் கூறப்படவில்லை. கைலையும் மண்ணுலகில் உள்ள பிற தலங்களும் தாம் சிவனின் உறைவிடமாகக் கூறப்பட்டுள்ளன.]
மண்ணில்மங்கலம்அருள்பவர்சிவன்
சங்க காலத்தில் காய் கடவுள் என வழங்கப்பட்டு அஞ்சுதலுக்கு உரியவராகக் கருதப்பட்ட கண்ணுதற் கடவுள் அம்மையார் காலத்தில் ஒரு மாற்றம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இப்பொழுதும் அவரது தோற்றம் அச்சம் தருவதாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர் அடியார்களிடம் அன்பு மிகுந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். அவருடைய தோற்றத்துக்காக அவரை இகழாது போற்றினால் அவர் அடியார்களுக்கு எல்லாம் கொடுப்பார், நம்மை அவர் எந்த உயர்நிலையிலும் வைப்பார், எந்த உயர் உலகமும் என்று அவருடைய எளிவந்த கருணையைப் போற்றுகிறார் அம்மையார்.
இவரைப்பொருளுணரமாட்டாதாரெல்லாம்
இவரையிகழ்வதேகண்டீர் – இவர்தமது
பூக்கோலமேனிப்பொடிபூசிஎன்பணிந்த
பேய்க்கோலம்கண்டார்பிறர்
[அற்புதத்திருவந்தாதி 29]
அரங்கமாப்பேய்க்காட்டில்ஆடுவான்வாளா
இரங்குமோஎவ்வுயிர்க்கும்ஏழாய் – இரங்குமேல்
என்னாகவையான்தான்எவ்வுலகம்ஈந்தளியான்
பன்னாள்இரந்தாற்பணிந்து
[அற்புதத்திருவந்தாதி 78]
இறைவன் காலனையும், காமனையும், முப்புரத்தையும் அழித்தவன் மட்டுமல்ல, விசயனுக்கு வில் அளித்த கருணையாளனும் கூட. ராவணனின் முரணை அழித்தானே அன்றி அவனையே அழிக்கவில்லை. அத்தகைய ஈசனை அன்பென்னும் போர்வையினுள் சுருட்டி நெஞ்சத்துக்குள் மறைத்து வைத்துவிட்டோம் என்று பெருமிதப் படுகிறார் அம்மையார்.
[இறைவனை அஞ்சுதற்குரியவன் என்ற தொலைவிலிருந்து அன்புக்குரியவன் என்ற அண்மைக்குக் கொண்டுவந்த அவர் இன்னும் சற்று நெருங்கி அவனைக் கிண்டல் செய்யவும் துணிகிறார். இறைவா, நீ பிச்சைக்குப் போகும்போது பாம்புகளை எல்லாம் கழற்றி வைத்து விட்டுப் போ. இல்லாவிட்டால் மகளிர் அஞ்சி உனக்குப் பிச்சை இடாமல் இருந்து விடுவர் என்கிறார். (அந்தாதி 57). நீ உமையைப் பிரியாமல் இருக்க காரணம் என்ன? நீ அவளிடம் கொண்ட விருப்பமா அல்லது அவளைப் பாதுகாப்பாக வைக்க வேறு இடம் கிடைக்கவில்லையா என்று வினவுகிறார். (அந்தாதி 94). உன் பக்கத்தில் உள்ள குலமகள், தலைமேல் உள்ள சலமகள் இருவரில் உனக்கு மிகவும் பிரியமானவர் யார் என்று கேட்டுச் சிவனுடைய குடும்பத்திலேயே சண்டை மூட்டிவிடுகிறார். -அந்தாதி 95]
இவ்வாறு இறைவனின் நன்மை தரும் கோலத்தை முதன்மைப்படுத்தி அம்மையார் ஏற்படுத்திய பக்தி அலை இந்தத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு அடைமொழியால் இறைவனை அழைக்கலாமே என்று மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்க வேண்டும்.
சிவ என்ற சொல் தமிழில் சிவப்பு நிறத்தையும் ஸம்ஸ்கிருதத்தில் நலம் செய்பவர் என்ற பொருளையும் குறிப்பதாகும். இரு வகையிலும் அது இறைவனின் வெவ்வேறு பண்புகளைக் குறிப்பதாலும், இரு மொழியாளர்களுக்கும் உடன்பாடான சொல்லாக இருந்ததாலும் அது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். வேதத்தில் ஆளப்பட்ட சொல்லாகவும் அது அமைந்தது, அதற்குப் பெருமையையும் ஏற்றுக் கொள்ளப்படும் தன்மையையும் சேர்த்திருக்கும். ருத்ரத்தில் 14 முறை கூறப்பட்ட அடைமொழி இது ஒன்றே.
“தமிழ்ச் சொல், வடசொல் எனுமிவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே” என்று திருமூலர் கூறுவதன் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். [திருமந்திரம் 66 ஆகமச்சிறப்பு 10]
திருமூலர் பாடல்களில் தான் சிவன் என்ற பெயர் முதன் முதலாகக் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து தேவாரத்திலும் வருகிறது. பெயரில்லாப் பெருமானைச் சுட்டும் எல்லாப் பெயர்களும் பண்புகளைக் குறிப்பிடும் அடைமொழிகளாகத் தான் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவ்வகையில் இது வரை பயன்படுத்தப் படாத சிவன் என்ற அடைமொழியும் சிவகதியையும் இவ்வுலக நல்வாழ்வையும் அருள வல்ல பெருமானின் நலம் செய்யும் தன்மையைக் குறிப்பிடுவதாகவே வந்துள்ளது.
இவ்வாறு அம்மையாருக்கும் திருமூலருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட சிவன் என்னும் நாமம் இன்று இறைவனின் தனிப் பெரும் பெயராக விளங்குகிறது.
2 ஐந்தெழுத்து
திருமூலர் காலத்துக்கு முன் சிவன் என்னும் பெயர் இல்லாதது போல, ஐந்தெழுத்து என்று அழைக்கப்படும் நமசிவாய மந்திரமும் வழக்கத்தில் இல்லை. தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் ஐந்தெழுத்து பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. கண்ணுதல் கடவுளைக் குறிக்கச் சிவன் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் விளைவாக நமசிவாய மந்திரம் பிரபலமாயிற்று.
அம்மையாரின் பாடல்களில் இரண்டு இடங்களில் ஐந்து என்ற சொல் வருகிறது.
திருவிரட்டை மணிமாலையில் 10 ஆவது பாடல்-
தலையாயினஐந்தினையும்சாதித்துத்தாழ்ந்து
தலையாயினஉணர்ந்தோர்காண்பர்
அதே நூலில் 16வது பாடல்-
புண்ணியங்கள்செய்தனவும்பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணிஓரைந்தும்இசைந்தனவால்
இரண்டு இடங்களிலும் ஐந்து என்பது நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகச் சிலர் பொருள் கொள்ளக் கூடும். கூர்ந்து நோக்கினால் உண்மையை உணரலாம்.
மேலான ஐந்தையும் சாதித்துப் பணிவுடன் மேலான தத்துவத்தை உணர்ந்தவர்கள் இறைவன் கழலைக் காண்பார்கள் என்பது முதல் பாடலின் பொருள். இறைவன் அருளால் நற்செயல்களும், தீநெறி சாராத ஐந்தும் தனக்கு வந்து சேர்ந்ததாக இரண்டாவது பாடலில் அம்மையார் கூறுகிறார்.
இரண்டு இடங்களிலும் ஐந்து என்பது நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகப் பொருள் படவில்லை. புத்தர் போதித்த பஞ்ச சீலம் என்னும் அறநெறிகளோ அல்லது வேறு ஏதேனும் ஐந்து நன்னெறிகளின் தொகுப்போ தான் குறிக்கப் படுவதாகத் தெரிகிறது.
திரு.வி.க. இது ஐந்தெழுத்தைத் தான் குறிப்பது என்று உறுதிபடக் கூறவில்லை. முதல் பாடலில் வரும் ஐந்து என்பது ஐந்தெழுத்தையும் குறிக்கலாம், கொல்லாமை, களவாடாமை, கள்ளாமை, வெஃகாமை, பொய்யாமை ஆகிய அறநெறிகளையும் குறிக்கலாம், பஞ்ச சுத்தி என்னும் சடங்கையும் குறிக்கலாம் என்கிறார். இரண்டாவது பாடலில் வரும் ஐந்து ஐம்புலன்களைக் குறிக்கும் என்று மட்டும் குறிப்பிடுகிறார். [காரைக்கால் அம்மையார் பாடல்களுக்கு உரை – திரு.வி. கலியாணசுந்தரனார்]
நமசிவாய என்ற மந்திரம் ருத்ரம் என்ற வேதப் பகுதியில் காணப்படுகிறது. இறைவனின் பல தோற்றங்களை விவரித்து, வணக்கம் தெரிவித்துக் கொண்டு வரும் 273 போற்றிகளில் 226வது மற்றும் 227வதாக நம சிவாய, சிவதராய என்று வருகிறது. மங்கலமானவருக்கு வணக்கம், மிக அதிகமான மங்கலமுடையாருக்கு வணக்கம் என்று பொருள்படும் இவ்விரண்டும், வேதத்தைப் பொறுத்த வரை பல போற்றிகளில் ஒன்றாக, எந்த ஒரு தனித்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாததாகவே உள்ளன. 11 பத்திகள் கொண்ட ருத்ரத்தில் நமசிவாய மந்திரம் வரும் எட்டாவது அனுவாகம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி http://www.shaivam.org
Eighth Anuvaka
Namah somaya cha Rudraya cha
Salutations to Him who is with His consort Uma.
Namastamraya charunaya cha
Salutations to Him who is red and rosy-red also.
Nama shangaya cha pashupatayou cha
Salutations to Him who brings happiness and who is the Lord of all creatures.
Nama ugraya cha bhimaya cha
Salutations to Him who is fierce and strikes terror at sight into His enemies.
Namo Agrevadhaya cha dure vadhaya cha
Salutations to Him who kills in front and from afar.
Namo hantre cha haniyase cha
Salutations to Him who is in the form of everyone who slays, and who kills all at the time of Pralaya.
Namo vrukshebhyo harikeshebhyo
Salutations to the stately trees with green tufts of leaves.
Nama staraya
Salutations to Him who is the Pravana mantra; Om.
Namash shambhave cha mayo bhave cha
Salutations to Him who is the source of happiness here and hereafter.
Namah shankaraya cha mayaskaraya cha
Salutations to Him who is inherently of the nature of conferring happiness directly in this world
and the world hereafter.
Namah Shivaya cha shivataraya cha
Salutations to Him the auspicious one, who is more auspicious than all others.
Nama stiryouraya cha kulyaya cha
Salutations to Him who is ever present in holy places and on the banks of the rivers.
Namah paryaya chavaryaya cha
Salutations to Him who stands in the further shore and on this shore.
Namah prataranaya chottaranaya cha
Salutations to Him who ferries men over the sins and evils of Samsara (the Illusions of the
world), and who by the grant of knowledge ferries them over Samsara altogether.
Nama ataryaya chaladyaya cha
Salutations to Him who is born again and again in Samsara and who tastes the fruits of Karmas
in the form of Jiva.
Namah shaspyaya cha, phenyaya cha
Salutations to Him who is in the form of tender grass and foam.
Namah sikatya ya cha pravahyaya cha.
Salutations to Him who is in the form of the sands and flowing water.
[இதில் வரும் உமையொருபாகன், மறுபிறவி முதலிய கருத்துகள் சாயணரை ஒட்டி மொழிபெயர்த்த ARTHUR BERRIEDALE KEITH (www.sacred-texts.com) என்பவரது மொழிபெயர்ப்பில் காணப்படவில்லை.]
பஞ்சாட்சரம் வேத வழக்கிலிருந்து மாறுபட்டது என்று அ.ச.ஞா. கூறுகிறார். வேதம் அல்லாத வேறு எந்த மூலத்திலிருந்து அது வந்தது என்பதை அவர் கூறவில்லை.
3 கணபதிவழிபாடுஏற்பட்டது.
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் எதிலும், தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியங்களிலோ, பின்னர் வந்த அம்மையாரின் பாடல்களிலோ, விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.
முதன்முதலாக, திருமூலரின் திருமந்திரத்தில் தான் ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை என்று தொடங்கும் விநாயகர் துதியைக் காண்கிறோம். [இப்பாடலைச் சிலர் இடைச் செருகலாகக் கருதுகின்றனர். அப்பர் சம்பந்தருக்குச் சற்றே முந்திய காலத்தவர் திருமூலர். இவர் காலத்தில் விநாயகர் வழிபாடு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.] சம்பந்தர் ஐந்து இடங்களிலும் திருநாவுக்கரசர் ஏழு இடங்களிலும் விநாயகரைப் பற்றிக் குறிப்பிடுகின்றனரே அன்றி விநாயக வணக்கம் என்று எந்தப் பாடலும் பாடவில்லை. அவர்கள் காலத்துக்குச் சற்று முன் தான் தமிழ் நாட்டில் விநாயகர் வழிபாடு ஏற்பட்டிருக்க வேண்டும். காலத்தால் பிற்பட்ட மாணிக்க வாசகரும் சிவனை வேலன் தாதை என்று குறிப்பிடுகிறாரே தவிர, விநாயகர் பற்றி எந்த விதத் தகவலும் தரவில்லை. எனவே சம்பந்தர் காலம் தொடங்கி மாணிக்க வாசகருக்குப் பிந்திய காலம் வரை சிறுகச் சிறுக விநாயகர் வழிபாடு பெருகி இருக்க வேண்டும்.
சிவனுக்கும் உமை அம்மைக்கும் விநாயகர் பிறந்ததாகச் சம்பந்தரின் பிடியதன் உருவுமை என்ற தேவாரம் கூறுகிறது. எனவே அவர் காலத்துக்கு முன்னமேயே, விநாயகர் தமிழ் நாட்டுக்கு அறிமுகமானது மட்டுமல்லாமல் அவரைச் சிவனுடன் உறவு முறையில் தொடர்பு படுத்தவும் முயற்சிகள் தொடங்கி இருக்கவேண்டும் என்று தெரிகிறது.
நரசிம்ம வர்ம பல்லவனின் தளபதியாக இருந்து, பின்னர் சிறுத்தொண்டர் எனப் பெயர் பெற்ற பரஞ்சோதியார் வாதாபி நகர் மீது படை எடுத்து, அதனைத் தீக்கிரையாக்குமுன் அங்குக் கோட்டை வாயிலில் இருந்த விநாயகர் சிலையைப் பெயர்த்து எடுத்து வந்து, தன் ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் பிரதிட்டை செய்தார் என்று கூறப்படுகிறது. [திருவாரூர்க் கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டதாக குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறுகிறார். திருவாரூர்த் திருக்கோயில் என்ற நூலில் காண்க] சிறுத் தொண்டர் சம்பந்தரின் சமகாலத்தவர் என்று பெரிய புராணத்திலிருந்து அறிகிறோம். அவர் காலத்திலேயே அத்தலம் கணபதீச்சுரம் எனப் பெயரிடப்பட்டிருந்ததிலிருந்து அதற்கு முன்னமேயே விநாயகர் தமிழ் நாட்டில் அறிமுகமானதை அறிகிறோம். மேலும் பரஞ்சோதியார் போர்க் களத்திலிருந்து கொண்டுவந்த பொருள்களைப் பட்டியலிடும் சேக்கிழார் அவற்றில் விநாயகர் திருவுருவம் இருந்ததாகக் குறிப்பிடவில்லை.
விநாயகரின் வழிபாடு வேதத்தின் தாக்கத்தால் ஏற்பட்டதா என்று பார்த்தால் அங்கும் விநாயகரைப் பற்றிய குறிப்பு இல்லை. வேதத்தில் உள்ள ஒரு பாடல் விநாயகருக்கு உரியதாகத் தற்போது வழங்கப்படுகிறது.
கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆநஸ் ஸ்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம் [ரிக்வேதம் 2-23]
இதன் பொருள் – தேவகணங்களுக்குப் பதியாகி கணபதி எனப் பெயர் பெற்ற உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் மதிமான்களுக்குள் மதி மிக்கவர். ஒப்பற்ற புகழ் படைத்தவர். ஒளி பொருந்தியவர்களில் சிறந்தவர். வேதத்திற்கு வேத நாயகராய் விளங்குபவரே, எங்களுடைய பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து உமது அருள் பொலிவுடன் உமக்குரிய ஆசனத்தில் இங்கு எழுந்தருள்வீராக. [மொழிபெயர்ப்பு- ராமகிருஷ்ண மடம்]
இந்தப் பாடலில் எங்கும் விநாயகரின் பிற பெயர்களோ, அவரது தோற்றம் பற்றிய குறிப்புகளோ காணக் கிடைத்தில. இவ்வரிகள் ரிக் வேதத்தில் பிரம்மணஸ்பதி என்ற தலைப்பில் வரும் நான்கு பாடல்களில், முதலாவது பாடலின் முதல் இரண்டு வரிகள். அந்தப் பாடலின் மீதி வரிகளிலோ, மற்றைய மூன்று பாடல்களிலோ கணபதி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பிரம்மணஸ்பதி என்ற சொல் பல முறை குறிக்கப்படுகிறது.
கணபதி என்ற பெயரில் ஒரு தெய்வம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பின்னர் அவரை வழிபட இந்த வேதப் பாடல் பயன்படுத்தப்படத் தொடங்கியது என்று தான் அறிய முடிகிறது.
கணேச சூக்தம் என்ற பெயரில் ஒரு தோத்திரம் உள்ளது. இது 15 வரிகள் கொண்ட ஒரு தொகுப்பு. இதன் முதல் 9 வரிகள் ரிக் வேதத்தின் 8வது மண்டலம் 81வது பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இந்திரனைக் குறித்தவை. அடுத்த 2 வரிகள் முன் சொன்ன 2வது மண்டலம் 23வது பாடலின் துவக்கமாகும். பிரம்மணஸ்பதியைப் போற்றுபவை. மற்ற 4 வரிகள் ரிக் வேதம் 10-112 இல் 9வது, 10வது பாடல்களாக உள்ளன. இவையும் இந்திரனைத் துதிப்பவையே.
உருவ வழிபாடு ஏற்படுத்தப்பட்ட பிறகு, அதற்காக, தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, ஏதேனும் ஒரு வேதப் பாடலைப் பயன்படுத்துவது இங்கு வழக்கம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
இந்தியாவின் பிற பகுதிகளில் பார்த்தால், மஹாராஷ்டிரத்தில் மட்டும் தான் பெருமளவுக்கு விநாயகர் வழிபாடு நடைபெறுகிறது. தமிழ் மக்களும், மராட்டியர்களும் குடியேறி ஆங்காங்கு விநாயகர் கோயில்கள் அமைத்ததைத் தவிர, இந்தியாவின் பிற பகுதிகளில் இது மிகுதியாகக் காணப்படவில்லை. எனவே இது மஹாராஷ்டிரப் பகுதியிலிருந்து வந்தது உறுதிப்படுகிறது.
காலத்தால் பிற்பட்டவராக இருந்தாலும் விநாயகர் சிவனுடைய மூத்த பிள்ளை என்ற இடத்தைப் பிடித்து விட்டார். தமிழ் நாட்டில் விநாயகர் வழிபாட்டுக்குப் பிறகே பிற தெய்வங்களுக்குப் பூசை என்ற வழக்கமும் நிலைத்து விட்டது. மற்றக் கோவில்களை விட பிள்ளையார் கோவில்களே இங்கு அதிகம்.
4 திரு நீறு பூசும் வழக்கம் ஏற்பட்டது
வேத ஸம்ஹிதைகளிலோ, தொல்காப்பியத்திலோ, சங்க நூல்களிலோ திருநீறு பற்றிய குறிப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. [அதர்வசிரம் போன்ற சில உபநிடதங்களில் திருநீறு பேசப்படுகிறது. ஆனால் இவை காலத்தால் பிற்பட்டவை.]
பெருமான் உடலெங்கும் நீறு பூசிக் காட்சி கொடுப்பதை அம்மையார் தான் முதன் முதலாக நமக்குத் தெரிவிக்கிறார். சுடலைப் பொடி அவரது பவள மேனியை வெள்ளி மலையாக மாற்றி விட்டதாக அவர் கூறுகிறார். தான் திருநீறு அணிந்ததாகவோ, மற்ற இறை அன்பர்கள் நீறு பூசியிருப்பதாகவோ அவர் சொல்லவில்லை.
சம்பந்தர் காலத்தில் தான் சிவநேசச் செல்வர்கள் நீறு பூசும் வழக்கத்தைக் காண்கிறோம். திருநீறு தந்து ஆளுடைய பிள்ளை பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார். அப்பருடைய நோய் நீங்கக் காரணமாக இருந்ததும் அவரது தமக்கையார் தந்த நீறுதான். ஒரு முக்கியமான வேறுபாடு என்னவெனில் சிவன் பூசுவதும், காபாலிகர்கள் பூசியதும் காடுடைய சுடலைப் பொடி. சைவர்கள் பூசுவதோ பசுஞ் சாணத்திலிருந்து தயாரிக்கப் படுவது.
எனவே இந்த இடைக்காலத்தில் தான் இவ்வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் சந்தனத் திலகம் இடும் வழக்கமே இருக்க மஹாராஷ்டிரத்திலும் தமிழ் நாட்டிலும் மட்டும் விபூதி இருக்கக் காண்கிறோம். பழந் தமிழகத்தில் இல்லாத இது மஹாராஷ்டிரத்திலிருந்து தான் இங்கு வந்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுகிறது. ஹோமம் செய்தபின் அந்தச் சாம்பலை நீரில் குழைத்து அணியும் வழக்கத்திலிருந்து இது தோன்றி இருக்கவேண்டும்.
5 ஆடற்பெருமான் வழிபாடு பரவியது
அம்மையாருக்குச் சிறிது காலம் முன்பு தான் ஆடற்பெருமான் வழிபாடு தோன்றியது என்று அறிந்தோம். இனி, அவ்வழிபாட்டின் வளர்ச்சியை ஆராய்வோம்.
தலையாலங்காடு
ஆலங்காடு என்ற பெயரில் பல ஊர்கள் தமிழ் நாட்டில் உள்ளன. ஆலமரங்கள் அனேகமாக எல்லா ஊர்களிலும் இருந்தாலும் சில இடங்கள் மட்டும் ஆலங்காடு எனப் பெயரிடப் பட்டிருப்பது அம்மையாரின் பாடல்கள் பிரபலமான பின் ஆலங்காட்டில் நடனமாடும் இறைவன் என்ற கருத்து மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றதைக் காட்டுகிறது. மயிலாடுதுறை அருகில் ஒரு ஊரும், அரக்கோணத்தை அடுத்து ஒரு ஊரும் திரு ஆலங்காடு என்று பெயரிடப்பட்டுள்ளன. திருவாரூருக்கு அருகில் தலையாலங்காடு என்ற பாடல் பெற்ற தலம் உள்ளது. இங்கு இறைவன் நடனமாடுவதாகக் கருதப்பட்டு நர்த்தனபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் அம்மையாரின் பாடலை ஒட்டிப் பெயர் பெற்ற முதல் ஊராக இருக்கக் கூடும். மற்ற ஆலங்காடுகளிலிருந்து வேறுபடுத்துவதற்காக இது தலை ஆலங்காடு என்று பெயரிடப் பட்டிருக்கலாம்.
தமிழ்ப் பெயர்களை ஸம்ஸ்கிருதத்தில் மாற்றும்போது நேருக்கு நேராகத் தான் மொழிபெயர்ப்பது வழக்கம். அவ்வகையில் திருவாலங்காடு வடாரண்யம் என்று கூறப்படுகிறது.(வட- ஆல், அரண்யம்- காடு) ஆனால் தலையாலங்காடு நர்த்தனபுரி என்று கூறப்படுகிறது. எனவே தலைஆலங்காடு என்று பெயரிடப்பட்டது இறைவனின் ஆடற்கோலத்தை நினைவு கொண்டே என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.
காரைக்கால் அம்மையாரின் ஆலங்காட்டில் இறைவனின் நடனக் கோலம் கருத்தளவில் உருவாகி இருந்தது. தலையாலங்காடு என்னும் தலத்தில் அது அருவுருவமாகக் காட்டப்பட்டது. திருவாரூரில் அது மேலும் செம்மைப் படுத்தப்பட்டது.
திருஆருர்
சோழ நாட்டில் ஏழு விடங்கத் தலங்கள் உள்ளன. விடங்க என்ற சொல்லுக்கு உளியால் செதுக்கப்படாத என்று பொருள். கற்சிலைகளை உளியால் செதுக்கி உருவாக்குவது போல் அல்லாமல் அச்சில் வார்த்துச் செய்ததால் உலோகச் சிலைகள் அப்பெயர் பெற்றிருக்கக் கூடும். விடங்கத் தலம் என்ற பெயர் இங்கு தான் முதன் முதலாக உலோக சிற்பத் தொழில் வளர்ந்தது என்று கருத இடமளிக்கிறது. திருவாரூர், திருநள்ளாறு, நாகை, திருக்குவளை, திருக்காறாயில், திருக்கோளிலி, வேதாரண்யம் ஆகிய இந்த இடங்களில் இறைவன் முறையே அஜபா நடனம், கமல நடனம், தரங்க நடனம், குக்குட நடனம், உன்மத்த நடனம், பிருங்க நடனம், ஹம்ச நடனம், ஆகிய வெவ்வேறு வகை நடனங்கள் ஆடுவதாகக் கூறப்பட்டபோதிலும், இந்த ஏழு தலங்களிலும் நின்ற நிலையிலான உலோக விக்கிரகத்தில் இறைவனின் நடனக் கோலம் கற்பிக்கப்பட்டு மட்டுமே இருந்தது. முதன் முதலாக அதைக் கண்ணுக்குப் புலனாக்கிக் காட்டியது தில்லையே.
இறைவனின் ஆடற் கோலத்தைச் சிற்பமாக வடிக்க இந்த ஏழு விடங்கத் தலங்களிலும் முயன்றிருக்க வேண்டும். நின்ற கோலத்தில் உள்ள சிலை வடிப்பது வரையில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தில்லைச் சிற்பிகள் இதில் முழு வெற்றி பெற்று உலோக சிற்பக் கலைத் துறையில் ஒரு பெரும் சாதனை படைத்துவிட்டனர்.
மற்ற ஆறு விடங்கத் தலங்களை விடவும் காரைக்கால் அம்மையாரின் ஆலங்காட்டை விடவும், தலையலங்காட்டை விடவும் திருவாரூருக்கு ஏற்றம் மிகக் கொடுக்கப்பட்டதற்குக் காரணம், அது அக்காலச் சோழ மன்னர்களின் தலைநகராக இருந்ததே.
ஆடற்கோலப் பெருமான் வழிபாட்டைப் பொறுத்தவரை திருவாரூர் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகிறது. எல்லாக் கோயில்களிலும் தேவாரம் பாடுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் என்று கூறித் தில்லையை வணங்கிய பின்னரே துவங்குவது வழக்கம். ஆனால் திருவாரூரில் மட்டும் அந்த வழக்கம் கடைப் பிடிக்கப் படுவதில்லை. எனவே இது தில்லையை விட மூத்த தலம் என்பது பெறப்படுகிறது.
திருநாவுக்கரசர்தன்பாடல்ஒன்றில்
“மாடமொடு மாளிகைகள் மல்குதில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே”
என்று வியக்கிறார். அவர் காலத்தில் தில்லை ஆடற் பிரானின் காரணமாக மிகப் புகழ் பெற்று விளங்கிய போதும் திருவாரூர் தன் பழமைச் சிறப்பு காரணமாகப் புகழ் பெற்றிருக்க வேண்டும். சைவ சமய வழிபடு வடிவங்களில் பிரதானமாக விளங்கும் ஆடற்பெருமான் வழிபாட்டுக்கு வழிகாட்டிய ஊர் என்பதனால் தான் போலும், திருவாரூர்ப் பிறந்தார் அனைவர்க்கும் அடியேன் என்று சுந்தரர் பாடுகிறார்.
விடங்கத் தலங்களில் தியாகராஜா என்றும் விடங்கர் என்றும் அழைக்கப்படுபவர் உமையோடும் கந்தனோடும் கூடியவர் என்ற பொருளில் சோமாஸ்கந்தர் எனப்படுகிறார். அருகில் மற்றொரு அம்மன் சிலையும் சிவகாம சுந்தரி என்ற பெயரில் உள்ளது. தில்லை நடராஜாவின் அருகில் உள்ள அம்மனும் சிவகாமசுந்தரி என்றே அழைக்கப் படுகிறார்.
திருவாரூரின் புற்றிடங்கொண்டாரும் தில்லையின் லிங்கப் பெருமானும் மூலட்டானேசுரர் என்றே அழைக்கப்படுகின்றனர். [குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய திருவாரூர்த் திருக்கோயில்] எனவே திருவாரூரின் சமய முயற்சிகளின் தொடர்ச்சியே தில்லை என்பது புலனாகிறது.
தில்லை
தில்லை மூவாயிரவருக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது அவர்கள் தாம் சைவ சமய எழுச்சிக்குக் காரணமான இந்த மாற்றத்தைச் செய்திருப்பார்களோ என்று தோன்றுகிறது.
காளி வழிபாடு நடைபெற்று வந்த தில்லை அம்பலத்தில் ஆடற் பெருமானை ஏற்றும் அவர்களுடைய முயற்சிக்குப் பலத்த எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும். அதனைச் சமாளித்து அவர்கள் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கலாம்.
சோழியப் பிராமணர்களான தில்லை வாழ் அந்தணர் ஏற்படுத்திய நடராஜ வழிபாடு வைதிக முறையைச் சார்ந்ததாக இருந்ததில் வியப்பில்லை. மற்றொரு சோழியப் பிராமணத் தலமான ஆவுடையார் கோவிலைப் போல இங்கும் முதலில் மகுடாகமமே பின்பற்றப்பட்டது. பின்னர் பாதஞ்ஜல சாஸ்திரம் என்னும் நூல் அதன் வழிபாட்டு முறைகளை மாற்றி அமைத்தது.
“தில்லைப் பெருங்கோயிற் பூசை மகுடாகம விதிப்படி முற்காலத்தில் நடைபெற்றதென்பது இரட்டையர் பாடிய தில்லைக் கலம்பகத்தாலும், 1684-86 ஆண்டுகளில் மராட்டிய மன்னன் சாம்போசி நிகழ்த்திய தில்லைச் சிற்றம்பலவர் கோயில் கும்பாபிஷேகம் உயர் ஆகமப்படி நடைபெற்றதாகச் செப்பேட்டிற் குறிக்கப் பெற்றிருத்தலாலும் அறியப்படும்.” [சிதம்பரம் மயில்வாகனன் தொகுத்த, ‘வரலாற்றில் சிதம்பரம் நடராஜர் கோவில்’ என்ற புத்தகத்தில் காணப்படும் வெள்ளை வாரணனாரின் கட்டுரை]
அம்மையாரின் பெம்மான் ஸம்ஹிதைக் கால ருத்திரனைப் போல் அச்சம் தரும் தோற்றம் உடையவன். கண்ணுக்கு அழகற்ற எட்டி, இலவம், ஈகை, காரை, சூரை ஆகிய முட்செடிகளுக்கு இடையிலும், காதிற்கு இனிமையற்ற நரி, ஆந்தை, கூகை, ஓமன் ஆகிய பிராணிகளின் ஓலத்துக்கு இடையிலும், நெடும்பல் குழிக்கட்பேய் சூழவும், மலையமான் மகள் மருண்டு நோக்கவும் பிணப் புகையினூடே நடனமாடுகிறான். தில்லை மூவாயிரவர் ஏத்திய அம்பலத்தாடியோ உபநிடதங்கள் கூறுவது போல ஆனந்தமே வடிவானவன். அவன் தன் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்பால் அடியார்களுக்கும் ஆனந்தம் அளிப்பவன். வேதம் பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கு இணையாக இறைவனின் தோற்றம் பற்றிய கருத்தும் மாறி வருவதைப் பார்க்கிறோம்.
காளிவழிபாடு
தில்லையை ஒட்டி ஒரு புராணக் கதை உள்ளது. நடராஜாவுடன் நடந்த நாட்டியப் போட்டியில் தோற்ற காளி ஊரை விட்டுப் புறம் போய் எல்லையில் தங்கினாள் என்பதே அது. கடவுளர்களிடையே போட்டி, பகைமை என்ற கற்பனைக் கதையின் பின்னே வேறு ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும்.
காளி வழிபாடு மிகுந்திருந்த தில்லையில் புதிதாக ஏற்பட்ட நடராஜர் வழிபாடு செல்வாக்குப் பெற்று முன்னது புறம் தள்ளப் பட்டிருக்கலாம். “தில்லை வனத்திற்கே உரிய தெய்வம் தில்லைக்காளி. அவளே தில்லை வனத்தின் மத்தியில் இருந்தவள். சிவ வழிபாடு தமிழகத்தில் நிலை பெற்றபோது காளியை அகற்றிவிட்டு அவ்விடத்தில் சிவன் அமர்த்தப்பட்டார்” என்று முனைவர் ஆ.பத்மாவதி கூறுகிறார். [சைவத்தின் தோற்றம் ஆ.பத்மாவதி பக். 21]
தில்லையில் ஆடற்பெருமானின் திருமுன்னுக்கு அடுத்த அறையில் ரகசியம் என்று அழைக்கப்படும் ஒரு வெற்றறை உள்ளது. பஞ்ச பூதத் தலங்களில் ஆகாய வடிவில் விளங்கும் இறைவனின் இடம் இது என்று தத்துவ விளக்கங்கள் கூறப்பட்டபோதிலும், இது ஒரு சுரங்கப் பாதையை அடைக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அதனுள் பழைய காளி வழிபாட்டுத் தலம் இருந்திருக்கலாம் என்று டாக்டர் சுவாமி அவர்களை மேற்கோள் காட்டி முனைவர் ஆ.பத்மாவதி கூறுகிறார். [சைவத்தின் தோற்றம் ஆ.பத்மாவதி பக். 51] சித்சபையின் ரகசிய மண் சுவருக்குப் புனுகுக் காப்பு அணிவிக்கும் வழக்கம் உள்ளதாகக் கூறப்படுவது இதை வலுப்படுத்துகிறது. [ஸ்ரீநடராச தத்துவம் – வை.தட்சிணாமூர்த்தி பக். 255]
உலோகச்சிலை
சிவாலயத்திலுள்ள மற்ற உருவங்கள் எல்லாம் கருங்கல்லால் செதுக்கப் பட்டிருக்க, நடராஜர் சிலை மட்டும் உலோகத்தால் செய்யப்பட்டிருப்பது ஏன்?
காவிரி டெல்டாப் பகுதியான சோழ நாட்டில் கருங்கல் இயற்கையில் கிடைப்பதில்லை. போக்கு வரவு வசதி இல்லாத அக்காலத்தில் வெளியூர்களிலிருந்து கருங்கற்களைக் கொண்டு வருவதற்குப் பல வலிமையான மக்கள் பல நாள் முயன்றால் தான் முடியும். பிற்காலத்தில், பத்தாம் நூற்றாண்டில், சோழ அரசர்கள் வலிமை பெற்ற பின், இதற்காகச் செலவு செய்யக்கூடிய வசதி ஏற்பட்டு, கருங்கல்லில் சிலை வடிக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். அதுவரை உலோகத்தால் சிலை செய்யும் முறையே அங்கு மிகுதியாக இருந்திருக்க வேண்டும். எனவே முதல் நடராஜர் சிலை உலோகத்தால் செய்யப்பட்டது. மக்கள் மற்றத் துறைகளைவிடச் சமயத் துறையில் மிகவும் பழமை விரும்பிகளாக இருப்பது இயல்பு. எனவே, கருங்கல் சிலை செய்யும் வழக்கம் தோன்றிய பின்னரும் புதிதாக ஏற்பட்ட தெய்வங்களை வேண்டுமானால் கருங்கல்லில் வடித்துக் கொள்வோம், பழமையான தெய்வத்திற்குப் பழமையான முறையில் உலோகத்தால் தான் சிலை செய்யப் படவேண்டும் என்று கருதி இருப்பர். மிகப் பழமையான தெய்வமாகிய திருமாலின் மூலவர் சிலைகள் சுதையால் செய்யப் பட்டிருப்பதைக் காண்க. இன்று பாண்டி நாட்டில் மட்டும் பல இடங்களில் நடராஜர் கல் சிலை வடிவத்தில் காணப்படுகிறார்.
தில்லையில் ஏற்பட்ட நடராஜர் வழிபாடு எப்படி எல்லாக் கோவில்களுக்கும் பரவியது? எல்லாக் கோவில்களிலும் உள்ள மூர்த்திகள் அர்த ஜாமத்தில் தில்லையில் ஒடுங்குவதாகக் கூறப்படுவது ஏன்?
சோழ அரசர்கள் ஆடல் வல்லான் வழிபாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்கள் காலத்தில் நெல் அளக்கும் மரக்காலுக்குக் கூட ஆடல் வல்லான் என்று பெயரிடப்பட்டது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் விநாயகருக்கும் முன்பாக நடராஜருக்குப் பூஜை செய்யப்படுகிறது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செந்தளைக் கல்வெட்டு, சோழ நாட்டில் விளங்கிய கோயில்கட்கெல்லாம் முதன்மையாகப் புலியூர்ச் சிற்றம்பலம் விளங்கியதால் கோயில் தேவ காரியங்களைக் கவனிப்பவர்களே, நாட்டிலுள்ள ஏனைய சிவஸ்தலங்களின் வழிபாட்டு முறைகளையும் கண்காணித்து வந்துள்ளனர் என்று கூறுகிறது. எனவே சோழ அரசர் ஆணைப்படி எல்லாக் கோவில்களிலும் ஆடற்பெருமானின் சிலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.