3
தொன்று தொட்டு பத்தாயிரம் ஆண்டுகளாக உழவுத் தொழிலில் தலைநிமிர்ந்து நின்றான் தமிழன்
மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த பெருமைக்கு உரியது நம் தமிழ்நாடு அன்று ஒவ்வோர் உழவனும் ஆராய்ச்சியாளனாக
ஒவ்வொரு பதினைந்து கிலோ மீட்டருக்கும் ஒரு விதை ரகத்தைத் தேர்வு செய்து கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் விதை ரகங்களை உருவாக்கி, காலம் காலமாக கைமாற்றி கொடுத்து உயர் விளைச்சல் கண்டார்கள்.
இந்த விதைகள் தமிழரை வாழ வைக்கும் விதைகளாக இருந்தன.
வறட்சியைத் தாங்கி நின்றன. நோயை விரட்டியடித்தன. கால்நடைகளை வளர்க்க வைக்கோலை வாரி வழங்கின. புயலை எதிர்த்து நின்றன. அப்டிப்பட்ட பல விதை ரகங்களின் பெருமைகளைப் பேசும் தொகுப்பு இது.
நொந்து போன விவசாயிகளின் சிந்தையில் தன்னம்பிக்கை வளர்க்கும் நூல் இது.
இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்த சத்தும் உடைய நமது பாரம்பரிய நெல் ரகங்களை சிவப்பரிசியின் பெருமைகளை நுகர்வோரிடம் கொண்டு செல்லும் ஒரு முன் முயற்சி இது. இந்த நோக்கங்கள் நிறைவேறினால் அது இயற்கைக்குக் கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும்.
விதைப்போம் அறுப்போம்“என்ற இந்த நூல் எழுதுவதற்கு எனக்குத் தூண்டுகோலாக இருந்தவர் கங்காராணி பதிப்பக உரிமையாளர் ஆசூர் க. தங்கதாசன் அவர்கள்.
நெல்லுக்கு இரண்டு முறை தமிழக அளவில் பெரும் திருவிழாக்கள் நடத்தி, தமிழகமெங்கும் பாரம்பரிய நெல் ரகங்கள் பரவிடக் காரணமாக இருந்தவர்.
நான் பல நெல் ரகங்களைப் பார்த்தறிய உறுதுணையாக இருக்கும் ‘கட்டிமேடு‘ஜெயராமன் அவர்கள் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கைவழி வேளாண்மையில் நான் ஈடுபடவும் நல்ல பயிற்சியாளனாக மாறவும் எனக்கு நல்ல பயிற்சி கொடுத்து இயற்கை விவசாயத்தில் முன்னோடியாக விளங்கச் செய்த தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்க இயக்குநர் மா. ரேவதி அவர்கள். இந்த ‘விதைப்போம் அறுப்போம்“என்ற தொகுப்பு நூல் எழுதுவதற்கு முழு முதற்காரணமாக இருந்தவர் மா. ரேவதி அவர்கள்தான்.
இன்னும் இந்த நூல் உருவாகப் பல வகையிலும் உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கும் சான்றோர் களுக்கும் கருத்துகளைத் தந்த பல பெரியவர்களுக்கும் நண்பர்களுக்கும் பசுமை விகடன், காரைக்கால் வானொலி போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களுக்கும், பாடல்களை எழுதித் தந்த இராம. கண்ணன் அவர்களுக்கும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் இல்லத்தரசி ஜெயலட்சுமிக்கும் என் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், தடை சொல்லாது ஊக்கப்படுத்தும் என் பிள்ளைகள் அஸ்வத்தாமன், ராஜப்பிரியன், பிரபு ஆகியோர்களுக்கும், இந்த நூலை வெளியிட்டுச் சிறப்பித்த கங்காராணி பதிப்பகத்தார்க்கும் நன்றி! நன்றி! நன்றி!
ச,கரிகாலன் 208, சாமியப்பா நகர்
திருத்துறைப்பூண்டி
அலைபேசி : +91 81 22 47 01 02