ரொம்ப நாளாச் சிதம்பரம் பத்தி எழுதணும்னு ஆசை. நீண்ட தொடராகவே எழுத முடியும் ஆகவே இதிலேயே தொடர்ந்து எழுதினேன். அநுபவம் இல்லாத என் எழுத்தில் குறைகள் நிறைய இருக்கும். குறைகள் கண்ட இடத்தில் சுட்டிக்காட்டுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். பொதுவாகச் சைவர்களுக்குக் “கோயில்” என்றாலே அது சிதம்பரத்தைத் தான் குறிக்கும். சிதம்பரம் கோயில் காலத்தால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாத அளவுக்குப் பழமை வாய்ந்த ஒன்று என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்போது இங்கே நடராஜரே பிரதானம். ஆனால் இங்கே நடராஜர் வருவதற்கு முன்னாலே சிவலிங்க ஸ்வரூபம் தான் இருந்திருக்கிறது. அதற்குப் பின்னர் தான் நடராஜ ஸ்வரூபம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தில்லை வாழ் அந்தணர்களும் நடராஜரை வழிபடுவதற்காகவே அவரோடு வந்தார்கள். முதன் முதல் இந்த ஸ்தலம் தில்லை வனமாக இருந்தது. ஆகவே இன்றும் இதற்குத் தில்லை என்ற பெயரும் உண்டு. மருத்துவ குணம் நிரம்பிய தில்லை மரத்திற்குப் பல அபூர்வமான விசேஷங்கள் உண்டு. அவை எல்லாவற்றையும் ஓரளவு தருவதற்கும், தில்லை பற்றிய முக்கியமான விவரங்கள் தருவதற்கும் இந்தப் பதிவு. முக்கியமாகத் தில்லை நடராஜரின் தாண்டவக் கோல அர்த்தங்கள், கோயிலின் வழிபாட்டு முறை, தில்லை வாழ் அந்தணர்களின் வரலாறு, நடராஜர் முகமதியர் படையெடுப்பின் போது கேரளாவில் போய் இருந்த வரலாறு என்று பல புதிய தகவல்கள் இடம் பெறும். கொஞ்சம் பல புத்தகங்களையும் படித்துத் தகவல்கள் திரட்டிக் கொண்டே எழுதி உள்ளேன். தவறுகளை மன்னித்துப் பொறுத்து இருந்து படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கீதா சாம்பசிவம்
geethasmbsvm6@gmail.com