1
ஹிமாச்சலத்துச் சூரியன்….
இந்த மின் நூலில் உங்களை “தேவ பூமி” என்று அழைக்கப்படும் ஹிமாச்சல பிரதேசத்தின் ஒரு சில இடங்களுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். நான் ரெடி நீங்க ரெடியா?
ஹிமாச்சலப் பிரதேசத்தினை தேவ பூமி என ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா? ஹிமாச்சலத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் – ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் நிச்சயம் உண்டு – இதைத் தவிர கிராம தேவதைகள், குலதெய்வங்கள் என நிறையவே. இதைத் தவிர நெடுஞ்சாலைகளில் கூட நிறைய சின்னஞ்சிறு கோவில்கள் – பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் ஆஞ்சனேயர் கோவில்கள் – அதனால் இந்த மாநிலத்தினை தேவ் பூமி என்று அழைக்கிறார்கள்.
பனிபடர்ந்த தௌலாதார் மலைத்தொடர்…
”ஹிமா” எனும் சமஸ்க்ருத வார்த்தைக்கு பனி என்ற அர்த்தம் உண்டு. முற்றிலும் பனிபடர்ந்த மலைகள் கொண்டதால் இப்பகுதிக்கு ஹிமாச்சலப் பிரதேசம் என்று பெயர் சூட்டினார்களாம். அப்படி பெயர் சூட்டியவர் ஆச்சார்யர் திவாகர் தத் ஷர்மா என ஹிமாச்சலத்தின் வரலாறு பற்றிய குறிப்பொன்று கூறுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் எனக்கும் எங்கள் பகுதியில் இருக்கும் சில நண்பர்களுக்கும் இப்படி பனி படர்ந்த மலைப்பிரதேசத்திற்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்க, பயணத்திற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம்.
நவம்பர் மாதத்திலேயே பயணம் பற்றிய முடிவு எடுத்துவிட்டதால் ஒவ்வொருவராக கேட்டு பயணிக்க இருக்கும் நபர்களை முடிவு செய்தோம். 15 பேருக்கு மேல் வருவதாகச் சொல்ல, ஒரு Tempo Traveler அமர்த்திக்கொள்ளலாம் என முடிவாயிற்று. நடுவில் ஒரு சிலர் வர முடியாத சூழல், வேறு சிலர் வருவதாகச் சொல்ல, ஏற்கனவே முடிவெடுத்தபடி Tempo Traveler பயணம் தான்.
கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ஆம் தேதி காலையில் தில்லியிலிருந்து தொடங்கியது எங்கள் பயணம். அதிகாலையில் அப்படி ஒரு பனிமூட்டம் – தில்லியிலேயே இத்தனை பனியும் குளிரும் இருந்தால் ஹிமாச்சலத்தில் இன்னும் அதிக குளிரப் போகிறது என்று நண்பர்கள் சிலர் சொன்னாலும் எதையும் தாங்கும் இதயமும், பலமும் எங்களுக்கு உண்டு என்று திடமாகப் புறப்பட்டது எங்கள் குழு!
பைஜ்நாத் கோவில், ஹிமாச்சலப் பிரதேசம்
மார்கழி மாதம் என்பதால், எங்கள் பகுதியில் இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் காலையில் திருப்பாவை/திருவெம்பாவையோடு சேவை தொடங்கும். அதனால் பயணிக்கும் முன்னர் ஏழுமலையானிடமும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு பயணத்தினை நல்லபடியாக முடித்துத் தர வேண்டிக்கொள்வோம் எனச் சொன்னதற்கு இணங்க, அனைவரையும் சுமந்து கொண்டு புறப்பட்டது எங்கள் ரதம்.
ஏழுமலையானை தரிசித்து அங்கிருந்து புறப்பட்டோம். தலைநகரைத் தாண்டி தேசிய நெடுஞ்சாலையைத் தொட முயற்சி செய்தோம். அங்கே தேசிய நெடுஞ்சாலையைக் காணவில்லை! யாருப்பா அத திருடிட்டு போனது! என்ன ஆயிற்று? அடுத்த பகுதியில் சொல்லட்டா! இப்ப வர்ட்டா!
தொடர்ந்து பயணிப்போம்……