15
பிரச்னை என்பது இந்திய கிரிக்கெட் கூடப் பிறந்தது போல. சென்ற வார இறுதியில் பிசிசிஐ – இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் யாருக்கு தொலைக்காட்சி உரிமத்தைத் தரவேண்டும் என்பதை முடிவு செய்தனர். ஜீ டிவி நிறுவனம் இந்த உரிமத்தை US$308 மில்லியன் கொடுத்துப் பெற்றுக்கொண்டது. ஆனால், இந்த முடிவு தவறானது என்று இ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மும்பை உயர் நீதிமன்றம் சென்றனர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் பிசிசிஐ மீது இ.எஸ்.பி.என் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர். அதில் ஏன் இந்திய அரசு, பிசிசிஐ-இடம் இருக்கும் இந்திய கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் தனியுரிமையை நீக்கக்கூடாது என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தனர். இதெல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து. இன்று மும்பை நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில் மறு ஏலம் நடைபெறும் என்றும், இ.எஸ்.பி.என், ஜீ இருவருமே மீண்டும் தொலைக்காட்சி உரிமையைப் பெற எத்தனை பணம் தரவிருக்கிறார்கள் என்பதனை கோர்ட்டாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் கோர்ட் யாருக்கு உரிமை போகவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் என்றும் சொல்லியுள்ளனர்.
இது முட்டாள்தனமாக உள்ளது. ஓர் உயர் நீதிமன்றத்துக்கு இதுதான் வேலையா? இதென்ன, அப்படி ஒரு தலைபோகும் விஷயமா? பிசிசிஐ-இடம் உள்ள அதிகாரங்களை மும்பை உயர்நீதிமன்றம் தன் கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? ஏலமுறையில் ஏதேனும் தவறிருந்தால் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது மட்டும்தான் கோர்ட்டின் வேலை. இடைக்காலத் தடை விதிப்பது, அந்தத் தடையை விலக்கிக் கொள்வது ஆகியவற்றோடு தன் வேலையை நிறுத்திக்கொள்ளாமல் இப்பொழுது கிரிக்கெட் உரிமையை ஏலம் விடுவதிலும் இறங்கியுள்ளது மும்பை உயர் நீதிமன்றம். இப்படி தன் வேலையை காசு வாங்கிக்கொள்ளாமலேயே கோர்ட் செய்யும் என்று எதிர்பார்த்திருந்தால், பிசிசிஐ முன்னமேயே கனம் கோர்ட்டாரவர்களிடம் வேலையை ஒப்படைத்திருக்கலாம்!
O
ராகுல் திராவிட் ஐசிசியின் இந்த ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதையும், சிறந்த கிரிக்கெட் வீரர் (டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என இரண்டும் சேர்ந்து) விருதையும் தட்டிச் சென்றுள்ளார். ஆகஸ்ட் 19 கட்டுரையில் ராகுல் திராவிட்தான் டெஸ்ட் கிரிக்கெட் விருதைப் பெறுவார் என நான் சொல்லியிருந்தேன். ஜாக் கால்லிஸ்தான் இரண்டு வகையான ஆட்டங்களிலும், மேலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் என்பது என் எண்ணம். அதனால் அவருக்குத்தான் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் வாக்குகளில் திராவிட் முதலாவதாகவும், கால்லிஸ், பிளிண்டாஃப் இருவரும் இரண்டாவதாகவும் வந்துள்ளனர்.
திராவிடின் டெஸ்ட் விளையாட்டு அனைவரையும் அந்த அளவிற்கு மயக்கியுள்ளது!
விருது | என் கணிப்பு | யாருக்குக் கிடைத்தது |
---|---|---|
சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் | ராகுல் திராவிட் | ராகுல் திராவிட் |
சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர் | ரிக்கி பாண்டிங் | ஆண்டிரூ பிளிண்டாஃப் |
சிறந்த புதுமுகம் | இர்ஃபான் பதான் | இர்ஃபான் பதான் |
வருடத்தின் சிறந்த ஆட்டக்காரர் | ஜாக் கால்லிஸ் | ராகுல் திராவிட் |
சிறந்த “சமர்த்தான அணி” | நியூசிலாந்து | நியூசிலாந்து |
சிறந்த நடுவர் | பில்லி பவுடன் | சைமன் டாஃபெல் |