கதை (21)
இந்த கதைக்கு ஒரு ஆங்கில சினிமா முன்னோடி. அந்த சினிமா பார்த்திருந்தாலும் உங்களுக்கு இந்த கதையைப் படித்ததன் பலன் கிடைப்பது உறுதியல்ல. எனவே படியுங்கள்.
தொலை தொடர்பு, சாடிலைட், ஆகாய விமானங்கள் ஆகிய சாதனங்கள் வரும் முன்னால், அதிக தூரங்களைக் கடக்க கப்பலில் பயணம் செய்தார்கள்.
சில முறை, கப்பல்கள் அவை சேருமிடத்தை அடையும் முன்பாகவே ஆபத்துக்கு உள்ளாகி, பயணம் செய்த அனைவரும் மரித்த பல சம்பவங்களை நாம் கேட்டும் படித்தும் இருக்கிறோம்,
அப்படியே உயிர் தப்பி, கடலில் நீந்தி வந்தாலும், திமிங்கிலம் போன்ற பல கடல் வாழ் உயிரினங்களுக்கு, தின்பண்டமாக மாறுவது என்னவோ உறுதி.
அப்படியே தப்பித்து, பல நாட்கள் நீந்தியபிறகு, அந்த வழியாக வந்த வேறொரு கப்பலின் மாலுமிகளால் காப்பாற்றப்பட்டு, உயிர், தப்பிய சம்பவங்கள் (பெரும்பாலும் கற்பனையில் வளர்த்தவை) திரைப்படமாக்கப்பட்டு நம் மேல் திணிக்கப்பட்டதுண்டு. நாமும் அதை
விரும்பி பலமுறை பார்த்தது உண்டு.
இந்த கதையில் அப்படி எதுவுமே ஆகாமல் உயிர் பிழைத்த கதாநாயகன், மனித அரவமே இல்லாத ஒரு தீவில், (பிறந்த மண்ணிலிருந்து பல ஆயிரம் மைல் தொலைவில்) தனிமையில், குளிரில், உணவின்றி, நோயுற்று பல மாதங்கள் தவித்திருந்தான்.
இந்த புதிய வாழ்வில் அன்றுவரை கண்டிராத, அனுபவித்திராத பல்வேறு இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் அடிமையான நேரம்.
தனிமை அளித்த பயம், அதனால் உறக்கம் வராத பல பகல் – இரவுகள், மரணத்தின் பிடியிலிருந்து தாற்காலிகமாக விடுபட்டாலும் , மீளாச்சிறையில் தஞ்சம் புகுந்தாகிவிட்டது.
இந்த சிறைச்சாலையிலிருந்து விடுபட வழிகள் தேடி, ஓய்ந்து போயாகி விட்டது. என்றோ ஒருநாள், எப்படியாவது மற்ற மனிதர்களைக் காண்போம் என்ற சிறிய நம்பிக்கையை மாத்திரம் மனதில் கொண்டு, இந்த மனிதன் புதிய, திகிலூட்டும் பின்னணியில், வாழ்வதற்குக் கற்றான்.
பச்சை மாமிசம் உண்டு உயிர்வாழக் கற்றான். பலநாட்கள் உழைத்து, சிறுகச் சேமித்த மரக்கிளைகளைக் கொண்டு வீடு ஒன்றை உருவாக்கினான். காடுகளுக்கே உரித்தான இனம் புரியாத உயிர்களிடமிருந்து தொல்லை அடைவதும், தினம் தினம் அவைகளிடமிருந்து விடுதலை பெறுவது. காய்ந்த மரத்தை கொண்டு குளிர் காய தீ உண்டாக்கக் கற்றது. (தீப்பெட்டி இல்லாமல் தீ உருவாக்கும் வித்தையை கற்றது). இவைகள் எல்லாம் கனவுபோல கண்முன் விரிந்தது.
ஒரு இரவு, குடிசைக்கு அருகில், பிடித்த மீனை தீயில் வாட்டி உண்டு மகிழ்ந்திருந்த நாள். தீயை முழுவதும் அணைக்காமல், அதன் மெல்லிய கதகதப்பில் உறங்கினான்.
அப்போது, அந்த எதிர்பாராதது நடந்தது. நள்ளிரவில், மீனை வாட்டிய தீயிலிருந்து தீப்பொரிகள் பறந்து குடிசையில் குடியேற, குடிசை தீப்பிடித்து கொழுந்து விட்டெரிந்தது. தப்பித்து பிழைத்தான் மனிதன்.
பல நாட்கள் உழைத்து கட்டிய குடிசை தீக்கிறையாகிவிட்டதே என்று மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தான். மீண்டும் ஒரு குடிசையை உருவாக்க எத்தனை நாளாகுமோ என்றெல்லாம் வருந்தினான்.
அன்றே விடியும் தருவாயில், கண்ணுக்கு எட்டிய வெகு தொலைவில் கப்பலொன்று நிற்பதும், தீக்கிறையாகி இப்போதும் புகைந்து கொண்டிருக்கும் குடிசையை நோக்கி ஒரு விசைப்படகு விரைவதையும் கண்டான்.
நம்பிக்கை என்பதை முழுவதுமாக இழந்து வாழ்ந்து வந்தவனை ஏற்றிச் செல்ல படகில் வந்தார்கள். சில நாளில், தன் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்ததும் வரலாறு.
குடிசை தீப்பிடித்தபோது மனம் எத்தனை வேதனைப் பட்டிருக்கும்? அதுவே, தான் காப்பாற்றப்படுவதற்கு ஒரே ஒரு காரணமாக அமையும் என்று முதலில் நினைக்கவில்லை.
இந்த கதையின் முக்கியமான ஒரு படிப்பினை என்னவென்றால், நாம் பல நாள் வாழ்ந்தும், பல கல்விகள் கற்றும், அறிந்தது, அறியக்கூடியது எல்லாமாகச் சேர்த்து, மிகமிகக் குறைவு.
நாம் அறிந்த நன்மைகளில் தீமையும், தீமைகளில் நன்மையும் ஒளிந்திருக்கிறது. அதனால், நாம் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாம் நல்லதற்கே என்ற மனப்பக்குவத்தை அடைந்தால், அதிகம் பயன் பெறுவோம்.
நம்பிக்கைகள்
வாழ்க்கையில் நம்பிக்கை ஒன்று இல்லை என்றால் என்னவாகும் என்பதற்கு கீழே காணும் ஒரு சில சோõதனைகளைச் செய்து பார்ப்போம்.
டிக்கட்டுடன், மீதி பணம் நடத்துனர் தருவார் என்ற நம்பிக்கையால் பஸ்ஸில், டிக்கட் வாங்க முதலில் நாம் பணம் தருகிறோம். பயணியும், நடத்துனரும் ஒருவரை ஒருவர் நம்பாமல் பயணச்சீட்டு வாங்கும் ஒரு காட்சியை எண்ணிப்பாருங்கள். வேடிக்கையாக இருக்கும்.
இந்த நம்பிக்கையை ஆதாரமாக வைத்து மீதி சில்லரையைத் தராமல் ஏமாற்றும் நடத்துனரும், காசே கொடுக்காமல் கொடுத்ததாக தகராறு செய்யும் பயணிகளும் இருக்கிறார்கள், இவர்கள் மிகச் சிறுபான்மையினர்.
இந்தவிதமான ஓரிரு நிகழ்ச்சியை மனதில் கொண்டு நான், யாரையும் நம்புவதில்லை என்ற முடிவு எவ்வளவு தவறோ, அதேபோல, யாரையும் எதையும் முழுவதுமாக நம்புவதும் நமக்கு எந்த நன்மையும் தராது.
நமது நாட்டில் எத்தனை தடவை பிளேடு கம்பெனிகள் என்று செல்லமாக அழைக்கப்படும் நிதி நிறுவனங்கள் உருவாகின?
இந்த அமைப்புகள் (பைனான்ஸ் கம்பனிகள்) அறிவுக்கு ஒவ்வாத அளவு வட்டி விகிதம் அளிப்பதாக விளம்பரம் செய்வதென்ன?, நாட்டில் உள்ள பொருளாதார மேதைகள், அரசு அதிகாரிகள் ஊமைகளாம் வினோதம் என்ன? ஏழைகளும், மத்தியதர மக்கள் பலரும், தன் வாழ்நாள் முழுவதும் சேமித்த அனைத்தையும், சிறிது அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் பைனான்ஸ் கம்பெனிகளில் கொண்டு கொட்டுவது என்றாவது நிற்குமா?
அந்த பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடியவர்கள் தான் என்றாவது தண்டிக்கப்படுவார்களா?
பல நாடுகளில், அரசு இயந்திரங்கள் அவ்வளவு சுலபமாக அசையாது, நீதி தேவதை பெரும்பாலும் பணம், பதவி இருக்கும் பக்கம்தான் இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு நடைமுறைகள் சொல்கின்றன.
நம் நாட்டில் அநியாயம் செய்பவர்கள், முக்கியமாக போலிச் சாமியார்கள், அரசியல்வாதிகள் – பணம் – அதிகாரம் – சமூக அந்தஸ்த்து உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்களோடு இணைந்த எந்த தீய சக்திகளையும் நமது நீதி மன்றங்களும், குற்றவியல் அமைப்புகளும் தேவையான அளவு கண்டு கொள்வதில்லை எனலாம்.
சட்டங்களிலுள்ள ஓட்டைகளும் இவர்களுக்கே சாதகமாக இருப்பது நாடறிந்த உண்மை இது முடியும், இது நடவாது என்று உள்ளுணர்வு உடனடியாகச் சொல்ல வேண்டும். அதற்கு பகுத்து அறியும் அறிவு, நாட்டு நடப்பு ஆகியவை அவசியம். இவ்வளவு மோசடிகள் நடந்தும் மக்களுக்கு புத்தி வந்ததா என்றால், இல்லை !