அத்தியாயம் 19
ஒரு கதையுடன் இந்த அத்யாயத்தை, அதிரடியாகத் தொடங்கு வோம். இந்த கதையின் கதாநாயகர் நடுவயதை தாண்டிய மனிதர் ஒருவர். பொருளாதார உலகில் தன்னிடமிருந்த பொருள் எல்லாவற்றையுமே இழந்துவிட்டு பிழைக்க வேறு வழியே தெரியாமல் ஒரு காட்டிற்குள்ளே ஒடினார்.
பல நாள் காட்டிற்குளே சுற்றித்திரிந்தார். ஒரு நாள் தான் பார்த்த, ஒரு சாதுவைச் சரணடைந்தார். பல நாட்கள் காக்க வைத்த இந்த சாது, ஒரு நாள், மனம் இறங்கி, யோகியாக மாறுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்.
அவர் விவரித்தது, பின் வருமாறு:
கண்களை மூடு; படிப்படியாக ஒவ்வொன்றாக ஐந்து புலன்களில் வரும் செய்திகளை மனதை நெருங்காதவாறு செய்வது முதல் கட்டம் என்றும், இதுவே தியானத்தின் அடிப்படை. இதை மனதில் கொண்டு செயல்பட அறிவுருத்தினார்.
அதற்கு பல வழிகள் உண்டென்றும், தியானப் பயிற்சி ஒரு சுலபமான வழி என்றும் கூறினார். எல்லாம் சரிதான், இதை நடை முறையில் செயல்படுத்துவது எப்படி? அதையும் விவரித்தார்.
மனதில், ஏதாவது ஒரு பொருள், உருவம், உருவப்படம், விளக்கில் தெரியும் தீச்சுடரின் மத்தியபாகம் இவைகளில் ஒன்றை தேர்ந்து எடுக்க வேண்டும். பின்னர் கண்களை மூடி இந்த உருவத்தை, அல்லது பொருளை மாத்திரம் தனது கண்களை மூடியவாறு தன் இரண்டு புருவங்களின் மத்தியில், மனக்கண் முன்னால், அதை நிறுத்த வேண்டும்.
ஆரம்ப கட்டத்தில், பயிற்சி செய்யும்போது, சில வினாடிகள் கூட இந்த உருவம் மனதின் கஙளின் முன்னால் நிற்காது. இந்த உருவத்தை மீண்டும் மீண்டும் கண்ணினால் கண்டு,. பிறகு கண்களை மூடி திரும்பவும் மனக்கண் முன் கொண்டு வரவேண்டும்.
விடாது பயிற்சி செய்யும் போது, நாம் சில வினாடிகளிலிருந்து முன்னேறி, சில நிமிடங்கள் வரை மனக்கண் முன்னால் உருவம் நீடிப்பதை உணரலாம்.
நாம் விரும்பாமல் இந்த உருவம் மறையாது என்று நிலை வரும் வரை இந்த பயிற்சியை விடாது தொடரவேண்டும்.
இரண்டாவது கட்டமாக நாம் விரும்பியதன் பேரில், இந்த உருவத்தை மறையச் செய்வது அடுத்த, கடினமான ஒரு கட்டம். இதை பயிற்சியைச் செய்துவா என்றார், என்றார்.
நமது கதாநாயகன், துறவியின் வார்த்தைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததினால், ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து, பல நாட்களாக (மாதங்களோ, வருடங்களோ) இந்த தியானப் பயிற்சியைத் தொடர்ந்தார்.
இடையில், ஒரு நாளும் பசியோ, வேறு எந்த உணர்வுகளும் அவரைத் துன்புருத்தியதில்லை. ஒரு நாள் திடீரென்று கண் விழித்தவருக்கு, ஒரு விரும்பத் தகாத ஓரு அனுபவம் காத்திருந்தது. இந்த மனிதர் அமர்ந்திருந்த இடத்தின் மேலே, மரத்தின் ஒரு கிளையின் மீது அமர்ந்திருந்த கொக்கு ஒன்று இந்த மனிதரின் மீது எச்சமிட்டது.
நமது கதாநாயகன், இதனால், எரிச்சலும் கோபமும் அடைந்தார். தனது சுட்டெரிக்கும் பார்வை ஒன்றை கொக்கின்மீது வீசினார். அடுத்த வினாடி. இந்த அப்பாவிக் கொக்கு எரிந்து சாம்பலாக அவர் முன்னால் விழுந்தது.
இந்த மனிதருக்கு இரண்டு திருப்தி. தன்னை அசுத்தம் செய்த கொக்கைப் பழிவாங்கியதில் மகிழ்ச்சி.
இரண்டாவது, தனக்கு அமானுஷ்ய சக்திகள் கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. கொக்கிற்கு இந்த மனிதருடன் என்ன தனிப்பட்ட விரோதமா?
இந்த மனிதர், அந்த கொக்கின் இடத்தை அடைந்து, அது வழக்கமாக செய்யும் ஒரு செயலில் தான் மாட்டிக் கொண்டார். அதில் கோபம் கொண்டு, தனக்கு கிடைத்த புதிய சக்தியால் அதை அழித்தார். அழிவில் கவலை கொள்ளாமல், மகிழ்ந்து … இதெல்லாம் நியாயமா?
அதனால் தான், எந்த சக்தியையும் அடைந்திட எல்லோருக்குமே ஆசைதான். சக்தியில் ஆக்க சக்தி அழிக்கும் சக்தி என்று தனியாக இல்லை. அறிவில்லாதவர் கையில் கிடைத்த ஒரு ஆக்க சக்தி அழிக்கும் சக்தியாக உருமாறும். அவ்வளவுதான்.
உலகப்போரும் சரி, உள்ளூர்ச் சண்டைகளும் நிகழக்காரணம், பெரும்பான்மை மக்கள் இல்லை. ஒரு சிலரே ! நாம் நமது சக்திகளை ஒன்றாகத் திரட்டி, ஒரு பெரும் சக்தியாக மாற்றி, நமது மக்கள் தலைவர்களாக, நாட்டின் தலைவர்களாக உருவாக்குகிறோம். அதில் சில தவறான தலைவர்கள் நாடுகளிடையும், மக்களிடையும் போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணம் ஆவதில்லையா?
அறிவு இல்லாதவர் அடையும் எந்த சக்தியும், அவரையும் அவரோடு இணைந்த மற்றவருக்கும், தவறாது, அழிவையும் தொல்லைகளையும் தரும்.
ஆகவே மனிதன் உயர்ந்த சக்திகளை அடையும் முன்னால் தனது மனதை உயர்ந்த நிலையை அடையச் செய்வது அவசியம், மனதைத் தூயதாக்கி, அன்பு, மனித நேயம், எல்லா உயிர்கள் மீதும் கருணையும் கொண்டவராக மாறுவதும் அவசியம் என்பதை உணர வேண்டும்.
இப்போது, கதைக்குத் திரும்புவோம்.
பல நாள் யோக சாதனையில் ஈடுபட்டு விழித்து எழுந்தவருக்கு, இப்போது அசுரத்தனமான பசி. இந்திய மண்ணில், அந்தக் கடந்த காலங்களில் யாசகம் கேட்டு வருவோரை. அதிலும் சிறப்பாக சாதுக்களை, விருந்தினராக வரவேற்று உணவு தருவது தலை சிறந்த செயலாகக் கருதப்பட்டது.
முதல் முதலாக கண்ணில் கண்ட ஒரு வீட்டை அடைந்து வீட்டின் கதவை தட்டி, உணவுக்காக தான் வந்திருப்பதாக அறிவித்தார். கதவை திறந்த பெண்மணி விருந்தினரை காத்திருக்க சொல்லிச் சென்றவர், உடனடியாக உணவோடு திரும்பாததால், கோபம் கொண்டார்.
இந்த பசி பொருக்காதவர், சிறிது நேரம் கழிந்த பின்னர் உணவுடன் வந்த பெண்மணியை நோக்கி, கோபம் கொப்பளிக்க, கொக்கை பார்த்த அதே பார்வையை, வீசினார்!!
இவருடைய பார்வை இந்த பெண்மணியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக, இந்த மனிதனின் பார்வைக் கண்டு புன்னகைத்த பெண்மணி, என்னை என்ன, கொக்கு என்று நினைத்தீரோ என்றாள்.
இந்த அமேச்சூர் யோகிக்கு இடி ஒன்று தன் தலையில் இறங்கியது போல ஒரு உணர்வு. சற்று நேரம் முன்னால் காட்டின் உள்ளே நடந்தது இந்த வீட்டிற்குள் இருந்த பெண்மணிக்கு எப்படித் தெரியும்?
இந்த கேள்வியை அவர் கேட்காமலே, அந்த பெண்மணி பதில் தந்தாள். சில மைல் தொலைவிலுள்ள ஒரு ஊரின் பெயரைக் குறிப்பிட்டு, அங்கே செல்லும்படி கூறினாள். அந்த ஊரிலுள்ள ஒரு மனிதரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரைக் கண்டு பேசினால், தேடும் கேள்விகளுக்கு விளக்கம் கிடைக்கும் என்று சொல்லி வீட்டினுள் மறைந்தாள்.
நமது புதிய யோகி, கிடைத்த உணவை சாப்பிடக் கூட நினைவில்லாது, ஒட்டமும் நடையுமாக பெண்மணி குறிபிட்ட ஊரை அடைந்தார். அந்த மனிதரைத் தேடி கண்டுபிடித்த போது அவருடைய அதிர்ச்சி மேலும் அதிகரித்தது.
விபூதி பட்டை, குங்கும பொட்டு சகிதமாக மத சின்னங்களையும் அணிந்த அந்த மனிதர், கசாப்பு கடையில் மாமிசம் வெட்டி அளந்து விற்றுக் கொண்டிருந்தார்.
இந்த புதிய யோகியை வரவேற்ற அந்த மாமிச வியாபாரி, அடுத்த ஊர் பெண்மணியைக் குறிப்பிட்டு, அவர் நலம் விசாரித்தார். பிறகு அந்த பெண்மணி சொல்லியே தன்னைக் காண யோகி வந்திருப்பதையும், வந்த காரணத்தையும் தானே சொன்னார்.
இதை எல்லாம் கேட்ட பிறகு, இந்த புதிய முனிவர், பிளந்த தன் வாயை மூடவில்லை. கசாப்புக்கடை மனிதர் தொடர்ந்தார்.
யோகியாக பரிணமிக்க ஒன்று இரண்டல்ல பல ஆயிரம் வழிகள் உண்டு. நானும், தாங்கள் கண்ட அந்த பெண்மணியும் கடமை என்ற (கீழை நாட்டி ஞானிகள் அறிந்திருந்த முக்கியமான நான்கு பாதைகளில் ஒன்று) பாதையில் ஒன்றில் வாழும் யோகிகள்.
நாங்கள் மனதைக் கட்டுப்படுத்தும் யோக சாதனைகளோ (ராஜயோகா) , இறைவனிடம் சரணடைவதோ (பக்திப்பாதை) இல்லை. பல கிரந்தங்களைக் கற்று ஆராய்ந்து இறைவனை அறிவின் மூலம் அறிந்து மனக் கண்ணால் காணும் வகையும் (ஞானப்பாதை) இல்லை.
மிக எளிமையான பாதை இது, என்று விளக்கினார்.
சமூகம் தங்களுக்கு அளித்த கடைமைகளைச் செய்வதைத் தவிர வேறு சிந்தனைகள் ஏதும் இல்லாதவர்கள். காலையில் நீங்கள் சந்தித்த பெண்மணி தனது குடும்பத்தை, கணவன் மற்றும் கணவனின் வயதான பெற்றோரைச் சிறந்த முறையில் பராமரிப்பதைக் கடமையாக கொண்டவர்.
உலகில் வேறு எந்த சிந்தனையோ செயலையோ அவர் உயர்வாகக் கருதவில்லை. காட்டில் நுழைந்து கடும்தவம் செய்த முனிவர்களுக்கு உள்ள சக்தி இந்த பெண்மணியின் சக்திகளைவிட எந்த விதத்திலும் உயர்வில்லை.
நீங்கள் கோபம் கொண்டு ஒரு கொக்கை சுட்டெரித்தது ஒரு பாபச்செயல். அதில் நீங்கள் பெற்றதாக உணர்ந்த சக்தி மிகவும் தாற்காலிகமானது.
அப்பாவிக் கொக்கு அழிந்தது. இது மற்ற யோகிகளிடம் நடக்காது. இந்த விதமாக, சக்தியைத் தவறாகப் பயன் படுத்தினால் தாங்க முடியாத எதிர் விளைவுகளைச் சந்திகிக்க நேரிடும். அதைத் தான், அந்த பெண்மணி, சூசகமாக கூறினார் என்று முடித்தார்.
அந்த பெண்மணி சாதாரண மக்களின் பார்வையில் ஒரு மிகச் சாதாரண மனிதரின் ஒரு மிகச் சாதாரண மனைவி. இருவரும் தங்கள் கடமையை மாத்திரமே கருத்தில் கொண்டுள்ளோம். இதுவும் ஒரு வகையில் யோக சாதனையே என்றார்.
மிகப் பெரிய சக்தி கொண்டு, என்னவெல்லாம் செய்யலாம்? தன்னைத்தானே அறிந்துகொள்வது. இந்த அகில அண்டத்தை அறிவது. அந்த அண்டத்திற்கும் இந்த மனிதனுக்கும் உள்ள தொடர்பை உணர்வது.
தனக்கும் இந்த அண்டத்தை படைத்தவனுக்கும் உள்ள அறிவை உணர்வது போன்ற பெரிய குறிக்கோளுடன் ஞானப்பயணம் மேற்கொள்வதே நன்மை தரும் என்றும் கூறினார்.
கொக்கைச் சுட்டெரித்தவருக்கு புரிந்தது. ஆனால் உங்களுக்கு புரிவதுதானே முக்கியம்.
ஐயா, இந்த தடைகளையும் மீறியாகிவிட்டது. அடுத்து என்னவோ?
குறுக்குப் பாதையில் ஆன்மிகத்தில் குதிப்பதற்கு ஒரு கடைசிக் கட்டமாக, மிகவும் முக்கியமான ஒரு வேலை.
யோக சாதனைகள் அதிகமாக சக்தியை பயன் படுத்துவதை அறிவோம். நீண்ட நாள் பயணமாக நாம் குடும்பத்துடன் காரில் செல்ல திட்டமிட்டால் செய்வது என்ன? வண்டியயை சர்வீசிங் செய்ய வைத்து, சக்கரத்தில் தேவைப்படும் அளவில் காற்றை அடித்து, அதோடு பெட்ரோல் அல்லது டீசல் டாங்க் புல் செய்வது போலத்தான் ஆன்மீக பயணத்திற்கான நடவடிக்கைள்.
உடற்பயிற்சி, மற்றும் தீவிரமான மூச்சுப்பயிற்சிகள் மனிதனின் தூல, மற்றும் சூட்சும உடலை – சக்தி மிகந்ததாக செய்வதை ராஜ யோகிகள் அறிவார்கள். இவைகளை முறையாக செய்து வந்தால், நோயின்றி பொருள் உல்கத்தில் வாழலாம், அருளுலகத்திற்கும் இந்த சாதனைகளுக்கும் மிக அவசியமாகும்.
ஸ்வாமி ராம்தேவ் என்ற துறவி பரப்பிவரும் இந்த யோக விஞ்ஞானம் அலோபதி மருத்துவம் சரி செய்யமுடியாத பல வியாதிகளை சரி செய்திருப்பது இன்று உலகம் அறிந்தது. நம்பிக்கையுடன் தீவிரமாக பயிற்சி செய்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கியம் வார்த்தைகளால் விளக்க முடியாது.
61 வயதை எட்டிய எனது தலைமுடி முழுவதும் வெளுத்திருந்த நிலையில், இப்போது ஆங்காங்கே கறுத்து வருகிறது என்ற சிறிய உதாரணம் ஒன்றே போதுமானது.
இப்போது நாம் அவசியமான சக்திகளை யோக விஞ்ஞானம் மூலம் அடைந்து விட்டோம். அடுத்து, நமது மனதை தயார் நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
சாதாரணமாக அதிக வருடங்கள் பிடிக்கும் இந்த கட்டத்தை நாம், விஞ்ஞானத்தின் துணை கொண்டு, இன்று வெகு விரைவாக கடக்க மு டியும். அடுத்ததாக அதை அலசுவோம்.
உடலைப் பட்டினி போடுதல்
நாம், ஒரே ஒரு வேளை உணவில்லாவிட்டால் கூட ஒய்ந்து போகிறோம். உடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் ஆரோக்கியமான உணவு அவசியம் என்கிறார்கள் மருத்துவர்களும். ஆராய்ச்சியாளர்களும்.
ஆனால், நம்மவூர் சாமியார் வருடக்கங்களாக சமாதி நிலையை அடையும்போது, சாப்பிடுவதே இல்லையே. அது எப்படி?
கம்ப்யூட்டரில் உபயோகத்தில் இல்லாதபோது மின்சாரம் மிகக் குறைவாக செலவாவதற்கு -ஒரு ஏற்பாடு உண்டு. உபயோகப்படுத்தாத சில நிமிடங்களில், கம்ப்யூட்டர் உறங்கிவிடும்.
கீ போர்டில் ஏதாவது ஓரு எழுத்தைத் தட்டினால் கம்ப்யூட்டர் உயிர் பெற்று, வழக்கம் போல, வேலை செய்யும். இடைப்பட்ட நேரத்தில் கம்ப்யூட்டர் மிக மிக குறைந்த அளவு மின்சாரம் மாத்திரம் எடுத்துக் கொள்ளும்.
அது போலவே மனிதருக்கு சமாதி நிலையிலும் குறைந்த அளவு சக்தி தேவைப்படும். நாம் உண்ணும் உணவில், மிக மிக சிறிய அளவு மாத்திரமே உடலுக்கு தேவைப்படும் சக்தி இருப்பதும் மற்றவை எல்லாம் அவசியம் இல்லாதவை என்று அறிந்து கொள்ளலாம். நாம் அவசியத்திற்கும் அதிகமான உணவை உள்கொள்கிறோம். அது முழுவதாகப் பயன் படுவதில்லை.
மனிதன் உணவு உண்ணாவிட்டால் என்னவாகும்?
எந்த உடலும் பலகோடி உயிர்களால் ஆனது. மனிதன் உணவு தராவிட்டால், அந்த சிறிய உயிர்கள், தானாகவே தம் உணவைச் சம்பாதிக்கிறது.
ஆரா எனப்படும், இந்த உயிருடல் ஞானிகளுடைய உடலை மையமாக கொண்டு பல அடி தூரம்வரை வியாபித்திருப்பதை விஞ்ஞானிகள், கருவிகள் மூலம் அறிகிறார்கள். சில பயிற்சிகள், இந்த உயிருடலைப் பலமுள்ளதாகச் செய்கிறது.