அத்தியாயம் 5
மனம், ஒரு மாற்றில்லா விருப்பம் கொள்ள, ஒரு முயற்சி அல்லது பயிற்சி.
தவங்கள் வலிமையானவை. சக்திகளை சுலபமாக அடைய வழி செய்யும். ஆனால் சக்திகள் ஆபத்தானவை
பராசக்திக்கு சுப்பிரமணிய பாரதிகூட, ஒரு பட்டியலிட்டு வரம் கேட்டுப் பாடினார் (காணி நிலம் வேண்டும் … ).
நம் எல்லோருக்குமே நாம் விரும்பியதை அடைய எவ்வளவு ஆசை? விரும்பியதை அøந்தால் எத்தனை மகிழ்ச்சி? அதற்குண்டான உழைப்பிற்கு மட்டுமே நாம் தயாராக இல்லை.
ஒரு தாடி வைத்த ஆளைத் தேடிப்பிடித்து, அவர், ஒரு சில வாழைப் பழங்களுக்கு ஈடாக வசதியான வாழ்க்கையோ, அல்லது விரும்பிய செல்வங்களையோ தருவாரா என்று பார்க்கிறோம்.
அப்படி, வேண்டியது ஒன்றை அடைவதற்கு யாகங்களும் யோகங்களும் அவசியமில்லை. சாமியும் சாமியாரும் தேவையே இல்லை.
மாற்றில்லா விருப்பம் ஓன்று மட்டுமே போதும்.
(இதை நம்பத்தயாராக இல்லாதவர்களே அதிகம். இது பிரம்மனின் அவசியம். அதனால் மாயா செய்யும் சூழ்ச்சி).
விருப்பங்கள் நிறைவேறினால்?
இங்கே ஒரு சிக்கல். நாம் விருப்பபட்டதை எல்லாம் அடைவது சரி. அப்படி அடைந்தது எல்லாமே நமக்கு சாதகமாக இருக்குமா? அதை நிச்சயமாக யாராலும் சொல்லமுடியாது. விரும்பும்போது நாம் அந்த கோணத்தில் என்றுமே சிந்திப்பதில்லை. கிடைப்பதெல்லாம் ஒரு பாக்கேஜ்-டீல். நன்மையும் – தீமையும் என்றுமே கலந்திருக்கும். வேண்டியதை லாபங்களை அடைந்த பிறகு தான், அதில் உடன் வரும், வேண்டாத துன்பங்கள் தெரிகிறது.
ஓரு குட்டிக் கதை:
இரண்டு நண்பர்கள் இருந்தார்கள்.
இருவருமே தங்களுடன் படித்த ஒரு குறிப்பிட்ட பெண்ணை மணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்கள். ஆனால் இருவருக்குமே மற்றவரும் அதே பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பது தெரியாது. காலம் சென்றது.
முதலாமவர் பெண்ணின் கரம் பிடித்தார். தன் விருப்பம் நிரைவேறியதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.
இரண்டாமவர், தன் விருப்பம் நிறைவேறாததால் ஒரு சில நாட்கள் துயரத்திலிருந்தார். பிறகு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தார். (முதலாமவருடைய மகிழ்ச்சி எத்தனை நாட்கள் நீடித்ததென்று தெரியாது இல்லையா?)
ஞானிகளும் அறிஞர்களும் மக்களுக்கு ஒன்று இரண்டல்ல, பல கதைகளைச் சொல்லி இதை விளக்கினார்கள். அது எதுவுமே நமது மர மண்டையில் ஏறுவதில்லையே.
இப்போது சில உண்மைச் சம்பவங்கள் ஒரு சிலவற்றைப் பார்ப் போம்.
லாட்டரி சீட்டில் பரிசு:
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் பத்திரிக்கையில் படித்த ஒரு செய்தி. ஓரு மானிலத்தில், புதியதாக, லாட்டரி முறையிலான பரிசுஅறிமுகப் படுத்தப்பட்டது.
மக்கள் பலர், முக்கியமாக ஏழைகள், போட்டி போட்டுக் கொண்டு, பரிசுச் சீட்டுகளை வாங்கி, பரம ஏழைகளானார்கள். இதைத் தொடர்ந்து, பல உண்மைக் கதைகள் வெளிவரலாயின. சில மகிழ்ச்சிகரமான முடிவுகளும், பல துக்கமான முடிவுகளும் கொண்டது.
அதில் மிக வருந்தத் தக்க கதை ஒன்று.
கதாநாயகன் ஒரு படு ஏழை. ஏனென்றால், அவர் ஒரு சிறிதே அளவு நிலமுள்ள ஒரு விவசாயி. வயதில் முதியவர். அவருக்கு ஒரே மகள். திருமணமாகி, அவர்கள் எல்லோருமே, தாங்கள் காலம் காலமாக பழகிய ஏழ்மையில், அவர்களுக்குத் தெரிந்த சிறிய மகிழ்ச்சிகளுடன், ஒரு மாதிரியாக வாழ்ந்து வந்தார்கள்.
எல்லா மக்களையும் போல பரிசுச் சீட்டுகளை வாங்கி வாழ்வை வளமாக்கிக் கொள்ள ஆசைப்பட்டார் அந்த முதியவர். அவர் போதாத காலம், முதல் பரிசாக, ஒரு லட்ச ரூபாய் அவருக்குக் கிடைத்தது.
அந்த செய்தி பத்திரிக்கைகளில், முதியவரின் புகைப் படத்தோடு, வெளி வந்தது.
சில வாரங்களாகியும் கையில் காசு கிடைத்தபாடில்லை.
இதனிடையே, அவருடைய சிறிய ஓலைக் குடிசையைப் பலர் முற்றுகை இட்டார்கள். இதில் உள்ளூர் பெரியவர்கள், ஜாதித் தலைவர்கள், அரசியல் தொடர்புள்ளவர்கள் என்று எல்லோருமே உண்டு. அவரவர்கள் பங்கிற்கு முதியவரை ஒரு பெரும் தொகையைத் தரும்படிக் கேட்டார்கள்.
பல நாட்கள் அடுத்துள்ள நகரத்திலுள்ள வங்கியைப் படை எடுக்க, சும்மா வந்த காசு தானே என்று, நகரத்திலும் முன்பின் அறியாத எத்தனையோ பேர் பலர் மிரட்டலுடனும், சிலர் பணிவாகவும் தொல்லை தந்தனர்.
கடைசியாக, வரிகள் போக ஒரு முழு லட்சம் காணவில்லை.
மிரட்டியவர்களுக்கு தந்தது போக மீந்தது என்னவோ சுமார் ரூபாய் ஐம்பதினாயிரம் மட்டுமே.
மருமகப்பிள்ளை, இதை எல்லாம் கவனித்து வந்தார். மாமனின் அதிருஷ்டத்தோடு தன் அதிருஷ்டத்தையும் சேர்த்துப் பார்த்தார்.
நிலம் வாங்கி வளம் பெறக் காத்திந்த மருமகனுக்கு மீந்து இருப்பதில் பாதியைத் தருவதாக பெரியவர் சொல்ல, மருமகனுக்கு அதிர்ச்சி. அவர் தன் மனைவியையும் குழந்தை குட்டிகளுடன் பெரியவரின் குடிசையில் சேர்ப்பித்து விட்டு, மொத்தமாகக் காணாமல் மறைந்து விட்டார்.
நாட்கள் நகர, காசு கரைந்ததே தவிர தொல்லைகள் குறையவில்லை. அதிருப்தியடைந்ததில் சிலர், பெரியவரின் அதிருஷ்டத்தில் பங்கு கிடைக்காத அதிருப்தியாளர்கள். அவர்களில் ஒருவர் முதியவரின் குடிசைக்குத் தீ வைத்தார்.
காத்து வந்த கரன்சி நோட்டுகள் தீயில் கருகுவதைக் காண, நிலை குலைந்து நோய்வாயில் சிக்கிய முதியவர், அதிவிரைவில் மரணம் அவரை விழுங்கியது.
தனியாக, கைவிடப்பட்ட பெரியவரின் மகள் தன் சிறு குழந்தைகளுடன் வாழ்க்கையை எப்படி நடத்தியிப்பாள்? சற்றே சிந்தியுங்கள்.
செல்வமும் ஒரு சக்திதான். தவம் இருந்து சக்திகளை கையகப்படுத்துவது, மிகவும் சுலபம். ஆனால் பழக்கமில்லாத எந்த சக்தியையும் கையாள்வது நமக்கு நலம் தருவதைவிடத் துயரம் தருவதற்கான வாய்புகளே அதிகம்.
ஒரு மெக்சிகன் ஞானி சொல்கிறார்.
உலகத்தில் பலவிதமான சக்திகள் உள்ளன. அதில் அதிகாரம், பதவி, செல்வம், மின்சாரம், அணுசக்தி, ஆயுதங்கள், அறிவு என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இது போன்ற பல சக்திகளைக் கையாள பலருக்கு ஆசை. ஆனால் இவற்றைக் கையாள. ஒருவருக்கு இந்த சக்திகளைவிட அதிக சக்திகளைப் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் விரும்பிப் பிடித்த சக்தியே நம்மை அழித்துவிடும்.
தனி மனிதர்களும் சரி, தலைவர்கள் என்று அதிக்காரத்தின் உச்சியில் வாழ்ந்து வந்த சிலரும், தங்கள் இறுதியில் துயரமான முடிவுகளைச் சந்தித்த சரித்திரங்களையும் புரட்டுங்கள். மேலே கூறிய உண்மை வெளிப்படும்.
மாற்றில்லா விருப்பமே தவமெனப்படும்
தவம் என்பது என்ன? ஒரே எண்ணத்தில் ஒரே சிந்தனையில் மனதை வைத்திதிருப்பது தானே? கடவுள் வருகிறாரோ இல்லையோ, வேண்டியது நிறைவேறும்.
(எனது வாழ்வில் இரண்டு நிகழ்வுகள், இதற்கு சாட்சி சொல்லும் – ஆசிரியர்)
தவம் இயற்ற மனதைக் கட்டுப்படுத்துவது அவசியம். அறிவுள்ளவருக்கு மட்டுமில்லை, அறிவில்லாதவருக்கும் அது சாத்தியமாகும்.
அறிவில்லாதவர் தவம், அழிவுகளை அள்ளித்தரும்.
யோக சாதனைகள் நமக்கு பலவித சக்திகளைத்தரும்.
அறிவில்லதவர் செய்த யோக சாதனைகள் சிலருக்கு கிடைத்த சில சக்திகளையும் அதன் பின்விளைவுகளையும் பார்ப்போமா?
சிலவற்றை ஸ்வாமி ராமாவின் சுய சரிதையில் காணலாம். (கடைசி பக்கத்தில் சில புத்தங்களைப் பற்றிய விவரங்களைக் காணலாம்).
புராண இதிகாசங்களிலும் இதே செய்தி
பல அரக்கர்கள், கடவுளை நோக்கித் தவமிருந்து வரம் பெற்றார்கள். தவத்தில் பெற்ற வரங்கள் எதுவுமே அவர்கள் விரும்பியது போல வாழ விடவில்லை.
அரக்கர்கள் யார்? பெரிய பற்கள், பெரிய உருவம், பல யானைகளின் பலம் காட்டுமிராண்டிகளைப் போல உருவம் கொண்டவர்களா? சினிமா மற்றும் சின்னத்திரையில் அப்படிக் காண்பிப்பது நமது மனதில் அரக்கர்களைப் பற்றி ஒரு தாழ்வான எண்ணத்தைப் பதிய வைக்க.
உண்மையில் அரக்கர்கள் அறிவில்லாத மற்றும் சிந்தனையில் குறைந்த மனிதர்கள் தான். அவர்களுக்கு ஒரு தனி உலகம் இல்லை. பல விதங்களில் பல சந்தர்ப்பங்களில் நம்மை ஒரு அரக்கராக உணரலாம்.
கடைசியாக, புராண இதிகாசங்களிலிருந்து ஒரு நிகழ்ச்சி.
பஸ்மாசுரன் என்ற ஒரு அரக்கன் தவமிருந்து இறைவனிடமிருந்து
ஒரு வரம் பெற்றான். தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் சாம்பல்லாகிவிட வேண்டும், என்பதே அது.
இறைவனிடமிருந்து கிடைத்த சக்தியை, அதைக் கொடுத்த இறைவனின் தலையிலேயே சோதிக்கத் துணிந்தான் அந்த அரக்கன்.
பதிலுக்கு அரக்கனை தன் தலையிலேயே கை வைத்துக் கொள்ளுமாறு இறைவன் ஒரு சிக்கலான சூழ்நிலையை உருவாக்க, பஸ்மாசுரன் பஸ்மம் ஆனான் என்பதே அந்தக் கதையின் சுருக்கம்.
மிடாசுக்கு கிடைத்த வரம் – மிடாஸ் டச்
மிடாஸ் டச் என்று பள்ளிப் பருவத்தில் படித்த ஒரு கதை நினைவு படுத்திப்பாருங்கள். தான் எதைத் தொட்டாலும் அது தங்கமாக மாற வரம் பெற்றான் மிடாஸ். அவனுக்கு அந்த சக்தி கிடைத்ததும் என்னவெல்லாம் நிகழும்? சற்று யோசித்துப் பாருங்கள்.
மகளைத் தொட்டான். மகள் தங்கச் சிலையானாள். விரும்பியதை சாப்பிட முடியாது. துணிகள் கவசங்களாக மாறிவிடும்.
இந்த காலகட்டத்தில், இப்படி ஒரு சக்தி இருப்பது தெரிந்தால், பேராசைக்காரர்கள், மிடாஸின் கையையே ஒடித்துக் கொண்டு போய் விடுவார்கள் இல்லையா?
நாம் நமது தேடுதலைத் தொடருவோம்.
எதைத் தெரிந்து கொண்டதால் மனிதர்கள், ஞானிகளாக மாறினார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
ஞானிகள் தெரிந்து கொண்டதை நாம் அவர்கள் எழுதியதையும், பேசியதையும் கொண்டு தேடுவோம். அதைத் தெரிந்து கொண்டால், நாமும், ஒரு மாதிரியான ஞானியாக மாறும் வாய்ப்பு கிடைக்கும். உண்மைதானே!
அடுத்ததாக நாம் தேடப் போவது தேடல்கள் மற்றும் தேடுவோரைப் பற்றியது.
வாசகர்களே,
வெவ்வேறு, கல்வி, அனுபவம், சமூக, பொருளாதார, மற்றும் கலாசார பின்னணியை கொண்டவர்கள் உங்கள் அனைவருக்கும், ஆன்மிகத்தைப் பற்றி சொல்ல வேண்டிய செய்திகள் பலவற்றை சேகரித்திருக்கிறேன். இவற்றை சிந்தாமல், சிதையாமல், மனதில் கொள்ளும் வகையில் எழுதுவது மிக கடினமான ஒரு முயற்சி.
இந்த புத்தகத்தை உருவாக்க சில நண்பர்களின் கடின உழைப்பும், உதவியும், அதோடு சில அத்யாயங்கள் பல முறை திரும்பத் திரும்ப எழுதவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
ஆன்மிகப்பயணம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும்?
நம்மைப் படைத்த பிரமனை, வழியில், சந்திக்கலாம். முயற்சி செய்தால், பிரமனுடன் கைகுலுக்கலாம்.