7
மனிதன் சுதந்திரமாகத்தான் பிறக்கிறான்.ஆனால்
எங்கும் அடிமைச்சங்கிலியால் கட்டப்பட்டுள்ளான்.
பிரெஞ்சுப் புரட்சி,பழமைவாதம் மற்றும் சமூகவுடைமைக் கோட்பாடுகளிலும் செல்வாக்கு படைத்த அரசியல் தத்துவத்தை உருவாக்கியவர் ஜூன் ஜாக்குஸ் ரூசோ (Rousseau) ஆவார். இவர் 1712 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று இன்றை சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் பிறந்தார். சிறுவயதிலேயே மிகவும் துன்பத்தை அனுபவித்தார்.இருப்பினும் பல நூல்களை விரும்பிப் படித்தார்.பின்னர் பல நூல்களையும்,புதினங்களையும் எழுதினார்.இவரது புதிய ஏலவீஸ் என்னும் புதினம் 18 ஆம் நூற்றாண்டில் அதிகம் விற்பனையானது. இவர் 18 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார்.இவர் இசையில் ஆர்வம் கொண்டவர்.பெண்களுக்கு இசை கற்றுக் கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டார்.
புதிய கல்வி அறிவியல் முறையில் வழங்கப்பட வேண்டும்.அத்துடன் குழந்தைகளுக்குக் கல்வியில் முழுச் சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்றார்.அத்துடன் சுற்றுச்சூழல் கல்வியும் தேவை என்றார்.பிரபுக்கள்,மன்னர்கள்,சமய குருமார்களின் ஆடம்பர வாழ்க்கையை எதிர்த்து எழுதி வந்தார்.அதனால் பாரிஸ் நீதிமன்றமும்,திருச்சபையும் இவரை எதிர்த்தன.அரசன் என்பவன் மக்களின் நலனுக்காக மக்களோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பயனால் உருவானவன்.மக்களின் உரிமைகளைக் காப்பாற்றும் வரைதான் மன்னன்.அவ்விதிகளை மீறும்போது மக்களும் தம்மைக் கட்டுபடுத்தும் ஒப்பந்த விதிமுறைகளை மீறலாம் என தனது சமுதாய ஒப்பந்தம் என்னும் தத்துவ நூலில் எழுதியுள்ளார்.இவர் 1778 ஆம் ஆண்டு ஜூலை 2 இல் காலமானார்.