விநாயகருக்கும் 21-க்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா). விநாயகரின் திருநாமங்கள் 21 உண்டு. அவை கணேசன், ஏகதந்தன், சிந்தாமணி, விநாயகன், டுண்டிராஜன், மயூரேசன், லம்போதரன், கஜானனன், ஹேரம்பன், வக்ரதுண்டன், ஜேஷ்ட ராஜன், நிஜஸ்திதி, ஆசாபூரன், வரதன், விகடராஜன், தரணிதரன், சித்தி,புத்திபதி, பிரம்மணஸ்பதி, மாங்கல்யேசர், சர்வ பூஜ்யர், விக்னராஜன் ஆகியன ஆகும்.

இவற்றின் விளக்கங்கள் வருமாறு:

1. கணேசன்: பிரும்மமே விநாயகர். பிரும்ம சொரூபமே விநாயகர். விநாயகர் என்றாலே தனக்கு மேலே தலைவன் இல்லாதவன் என அர்த்தம். ஆகவே பிரம்மத்திற்கும் மேலே தலைவனாய் இருப்பதால் கணேசன்.

2. ஏகதந்தன்: ஆரம்பத்தில் விநாயகருக்கு இரண்டு தந்தங்கள் இருந்ததாயும், ஒரு தந்தம் அசுரனைக் கொல்ல ஆயுதமாய்ப் பயன்பட்டதாய்ச் சொல்லுவார்கள். மற்றொரு செய்தி வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விக்னராஜனை விட்டே எழுதச் சொன்னதாகவும், அப்போது தன் தந்தத்தை ஒடித்தே எழுதுகோலாக்கி விநாயகன் எழுதியதாகவும் சொல்லுவோம். எப்படிப் பார்த்தாலும் ஒரு தந்தம் தான் விநாயகருக்கு. பெண் யானைக்கும் தந்தம் உண்டென்றாலும் ஆண் யானை அளவுக்கு வெளியே தெரியும் நீண்ட தந்தம் அதுக்குக்கிடையாது. ஆணாகிப் பெண்ணாகி ஒன்றானவன் என்பதை நிரூபிக்கும் வண்ணமும் விநாயகனுக்கு ஒரே தந்தம் என்ற அர்த்தம் வரும். ஆகக் கூடி மேற் கூறிய காரணங்களில் எதைச் சொன்னாலும் ஏகதந்தன் என்பது நன்கு பொருந்தும் அல்லவா???

3. சிந்தாமணி: கபில முனிவருக்குக் கிடைத்த சிந்தாமணியால் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் அதை விநாயகரிடமே கொடுத்துவிட்டார் அல்லவா? அந்தச் சிந்தாமணியை அணிந்ததாலும் சிந்தாமணி என்ற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.

4. விநாயகன்: தன்னிகரற்ற தலைவன். தனக்குத் தானே நிகரானவன்.

5. டுண்டிராஜன்: காஞ்சி மன்னனுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து டுண்டி என்ற பெயரோடு வளர்ந்து வந்ததும், அதனால் தமிழ்நாட்டின் அந்த வடபகுதி தொண்டை மண்டலம் என அழைக்கப் பட்டது என்றும் காஞ்சிபுராணம் கூறும். காஞ்சி அரசனுக்கு அம்பாளின் கடாக்ஷத்தைப் பெற்றுத் தந்ததோடு அல்லாமல், மோக்ஷத்தை அடையவும் வழிகாட்டியதால் டுண்டிராஜன் என்ற பெயர்.

6. மயூரேசன்: மயில்வாகனர். ஆதியில் விநாயகருக்கே மயில் வாகனம் இருந்ததாகவும், பின்னரே அந்த வாகனத்தை முருகனுக்கு விநாயகர் கொடுத்துவிட்டதாயும் சொல்லுவார்கள். மயூரேசன் என்ற பெயரில் ஒரு விநாயகர் கோயில் மஹாராஷ்டிராவில் அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒரு கோயிலில் குடி கொண்டுள்ளார். தன்னை வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்யும் விநாயகர் அதே சமயம் தன் பக்தர்களை மாயை நெருங்காதபடியும் காக்கின்றார்.

7. லம்போதரன்: லம்போதர லக்குமிகரன். இத்தனை பெரிய வயிறு இருக்கே?? உலகையே உள்ளடக்கி இருப்பதால் வயிறு பெரிசா இருக்கு. அண்ட பகிரண்டத்தையும் தன்னுள்ளே அடக்கி இருக்கும் பெரிய வயிற்றைக் கொண்டவன்.

8. கஜானனன்: கஜமுஹாசுரனை அடக்கியதால் ஏற்பட்ட பெயர். ஆணவத்தின் வடிவன் அவன். ஆனை முகம் கொண்ட அவனை அடக்கியதால் யானைமுகனும் இந்தப் பெயர் பெற்றான்.

9. ஹேரம்பன்:தன் பக்தர்கள் வேண்டிப் பிரார்த்தனை செய்து அபிஷேஹ ஆராதனைகள் செய்யணும்னு எல்லாம் காத்திருக்காமல், ஒரு அருகம்புல்லைச் சாத்தினாலே உள்ளம் குளிர்ந்து போய் கஷ்டப் படுபவர்களை ரக்ஷிக்கின்றான் விநாயகன். அதனால் ஹேரம்பன் என்னும் பெயர்.

10. வக்ரதுண்டன்: பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் தீமைகளைத் தடுப்பவன். தீமைகளைத் தடுக்கும் தன் மகனுக்கு அருமை அன்னை வைத்த பெயர் இது.

11. ஜேஷ்டராஜன்: மூத்தவன். அனைவருக்கும் மூத்தவன் என்பது இங்கே பொருந்துமோ? ஏனெனில் ஸ்கந்தபூர்வஜன் என்ற பெயரும் விநாயகனுக்கு உண்டு. முழுமுதல் பொருளாக இருப்பதால் ஜேஷ்டராஜன் என்ற பெயர் வந்திருக்கலாம்.

12. நிஜஸ்திதி: ஸ்திதி நிலைத்து இருப்பது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வது மண்ணும், நீரும் கொடுக்கும் வளங்களாலேயே. அந்த மண்ணிலும் நீரிலும் நிலைத்து இருப்பவன், மூலாதாரப் பொருளாக இருப்பவன் விநாயகனே. அதனாலேயே பிள்ளையார் பிடிக்கிறதுனால் களிமண்ணை நீரில் குழைத்துப் பிடிக்கிறோம். இப்படி உண்மையாக நிலைத்து அனைத்து உயிர்களிலும் இருப்பதால் அவன் நிஜஸ்திதியாகக்கூறப்படுவான்.

13. ஆஷாபூரன்: புருகண்டி முனிவர் விநாயகரைக் குறித்துத் தவம் இயற்றி, இயற்றிக் கடைசியில் விநாயகர் போல் அவருக்கும் தும்பிக்கை ஏற்பட்டது. விநாயகரின் உதவியால் தன்னுடைய ஆசைகள் நிறைவேறியதால் இப்பெயரை அவரே விநாயகருக்குச் சூட்டினார்.

14. வரதன்: அனைவருக்கும் வேண்டியவரங்களைக் கொடுப்பவன்.

15. விகடராஜன்: இந்த மாயாலோகம் என்று சொல்லப் படும் பிரபஞ்சத்தில் உண்மையாகப் பரம்பொருளாய்த் தோன்றுபவன்.

16. தரணிதரன்: இந்த பூமியை அவனே ஆள்கின்றான். ஆகையால் அதையே ஆபரணமாகவும் அணிகின்றான். எப்போதும் காத்து ரக்ஷிப்பவன் அவனே.

17. சித்தி, புத்தி பதி: மனிதருக்குத் தேவையானது சித்தியும், புத்தியும். சித்தி என்னப்படும் கிரியாசக்தியும், புத்தி எனப்படும் இச்சாசக்தியும் நன்கு வேலை செய்தாலே ஞானசக்தியை அடைய முடியும், அத்தகையதொரு சக்திகளை தன்னுள்ளே கொண்டவன் விநாயகன் ஞானசக்தியாகவே தென்படுகின்றான். ஞானத்தை அவனே அளிக்கின்றான். சித்தி, புத்திக்கு அவனே தலைவன்.

18. பிரம்மணஸ்பதி: பிரம்மா வைத்த பெயர் இது. பிரம்மம் என்றால் சப்தம் என்றொரு அர்த்தம் இருக்கிறது. வேத நாதமாக, ஓங்கார சொரூபமாக, வேத நாதத்திற்கும் ஆதாரமாய்க் காட்சி கொடுக்கும் விநாயகனை பிரம்மணஸ்தபதி என அழைத்தார் பிரம்மா.

19. மாங்கல்யேசர்: விநாயகர் அனைத்தையும் காத்து ரக்ஷிப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.

20. சர்வபூஜ்யர்: எந்தத் தெய்வ வழிபாடென்றாலும் விநாயக வழிபாடு இல்லாமல் ஆரம்பிக்க முடியாது. முன்னதாக அவரை வணங்க வேண்டும். அனைவராலும் வழிபடப் படுபவர் விநாயகர். அதனாலே சர்வ பூஜ்யராக இருக்கின்றார்.

21. விக்னராஜன்: அனைத்து விக்னங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டவர். திரிபுர சம்ஹாரத்திற்குச் சென்ற ஈசனின் தேர் அச்சு முறியவும், விநாயக வழிபாடு செய்யாததால் அவ்வாறு இடையூறு ஏற்பட்டதாகவும் , விநாயக வழிபாட்டுக்குப் பின்னர் தடை இல்லாமல் சம்ஹாரம் முடிந்ததாகவும், புராணங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மேலும் தேவி மஹாத்மியத்தில் அசுரன் செய்த விநாயகனின் சக்கர வழிபாடு தேவியின் வதத்தைத் தடுத்ததாகவும் சொல்லுவார்கள். அதை முறித்த பின்னரே தேவியினால் வழிபட முடிந்தது என்றும் சொல்லுவார்கள். இப்படி அனைத்து விக்னங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டவனே விநாயகன்.

விநாயகரின் பாதங்கள் பூமியையும், வயிறு நீரையும், மார்பு நெருப்பையும், புருவங்கள் காற்றையும் புருவமத்தி ஆகாயத்தையும் குறிக்கின்றன.

File:Chitrashalagoa.jpg

https://en.wikipedia.org/wiki/File:Chitrashalagoa.jpg