75
காமராசரின் தலைமைக்குப் பின் வேறொரு தலைமை கட்சிக்குத் தேவைப்பட்டது. ஆனால், அவர் இயற்கை எய்தும் முன்பே காங்கிரசின் இரு அணிகளும் இணைந்து செயற்படுவதே நாட்டிற்கு நல்லது என்ற எண்ணத்தைக் கக்கன் போன்றவர்களிடம் காமராசர் கலந்து ஆலோசித்ததாகத் தெரிகிறது. அந்த எண்ணத்தை மனத்தில் கொண்டு காங்கிரசின் இரு அணிகளும் ஒன்றுபட வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளியிட்டதுடன் இந்த இணைப்பிற்கு முயன்று கொண்டிருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்தார்.
ஆனால் அன்றைய “காங்கிரஸ் ஒ” பிரிவில் பல எதிர்ப்புகள். கருப்பையா மூப்பனார் அவர்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துவது என்ற முடிவுக்கு வந்தனர். அம்முடிவின்படி மூப்பனார் அவர்களை 12.12.1969 அன்று இந்திரா காந்தி அம்மையாரைச் சந்தித்து இணைப்பிற்கான பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டு வந்தார். அவ்வாறே 1976 ஜனவரி ஒன்பதாம் நாள் காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளும் இணைந்து ஒன்றாயின. ஆனால், தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர்கள் இணைப்பில் கலந்து கொள்ளாமல் தனித்து நின்றனர்.
எப்படியும் காங்கிரஸ் ஒன்றுபட வேண்டும் என்ற காமராசரின் எண்ணம் நடந்தேறியது. இந்த இணைப்பிற்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்து கக்கன் இரு அணிகளையும் ஓரணியாக்கினார். தண்ணீரைப் பிளந்து செல்லும் மீனுக்குப் பின்னே அத்தண்ணீர் பிளவு நீங்கி ஒன்றிவிடுவது தானே இயற்கை.
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கிடில்
அனைவருக்கும் தாழ்வு
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம் வந்தால்
பிறகு நமக்கென்ன வேண்டும்“
– பாரதியார்