68
பிறகு என் கணவர் மத்திய அரசுப் பணிக்காக, மைய அரசு பொதுப் பணியாளர் தேர்வு ஆணையம் (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். அதனால், மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறையில் உதவிப் பொறியாளராக என் கணவருக்கு உயர் பதவி கிடைத்தது.
1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய தோல்வி, திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. அதன் விளைவாக என் தந்தையார் அமைச்சர் பதவியை இழக்க நேர்ந்தது. அந்தச் சமயத்தில்தான் என் கணவருக்கு மத்திய அரசின் கப்பல் துறையில் உயர் பதவிக்கு உரிய ஆணை கிடைத்தது.
அந்தமான் தீவில்தான் என் கணவர் உதவிப் பொறியாளர் வேலையில் சேர்வதற்குப் புறப்பட்டார். என்னையும் அழைத்துச் சென்றார். என்னைப் பிரிவதற்கோ என் அப்பாவுக்கு மனம் இல்லை.
‘நீங்கள் அந்தமான் போய்த்தான் ஆக வேண்டுமா?’ என்று நெகிழ்ச்சியோடு கேட்டார். என் எண்ண ஓட்டத்தை என்னால் மறைக்க முடியவில்லை.
‘அப்பா! நீங்கள் என் கணவருக்கு மாநில அரசிலேயே பதவி உயர்வு (புரமோஷன்) வாங்கித் தரவில்லை. வந்திருக்கிற மத்திய அரசு வேலையை அவரால் விடமுடியாது. அதனால்தான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் அந்தமான் போகிறோம்” என்று கவலையை மனத்தில் தேக்கிக்கொண்டு தந்தைக்குப் பதில் கூறினேன்.
‘நீ சொல்வதும் சரிதாம்மா!’ என்று சொன்ன அவர், ஓர் அறிவுரையையும் கூறினார்:
‘உன் கணவரின் அனுமதி இல்லாமல் எந்தப் பொருளையும் நீ அன்பளிப்பாக வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. காய்கறி, பழம் உள்பட எதுவாக இருந்தாலும் இலவசமாக வாங்கவே கூடாது!’ என்றார்.
“தேவையில்லாமல் பொருட்களை வாங்கிக் குவிக்கதீ‘a3ர்கள். பிறகு சில நேரங்களில் தேவையானதை விற்க நேரிடும்”.
– எடிசன்