20
தாம் பொதுத்தொண்டில் கலந்து கொண்ட காலம் முதல் கல்வியில் ஆர்வம் கொண்ட கக்கன். தாம் வேளாண் அமைச்சராக இருக்கும் போதும் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் கல்வித்தரத்தைக் கேட்டறிவார். இது அவருக்கு மனமுவந்த பணியாக இருந்தது. தமக்கு நேரடியாகத் தொடர்பில்லாத துறையாக இருந்தாலும் பள்ளிகளுக்குச் செல்ல தயங்குவதில்லை. 1957இல் விவசாய அமைச்சராகி மதுரைக்குச் சென்று இவரால் அழைக்கப்பட்ட முதல் அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி என்பதை முன்பே பார்த்தோம்.
இவருக்கு அளிக்கப்பட்ட மற்றொரு துறையான தாழ்த்தப்பட்டோர் நலத்துறை, இவருக்கு இருந்த கல்வி ஆர்வத்தை மிகவும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. மாவட்டந்தோறும் பள்ளிகள் இருக்கும் ஊர்களில் விடுதிகள் தொடங்கி ஏழை மக்களுக்குப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தார். இந்த விடுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் பிறசாதியினருக்கும் குறிப்பிட்ட விழுக்காடு ஒதுக்கித்தந்து ஏழைகளுக்கு உதவினார். 1963க்குள் தாழ்த்தப்பட்ட நலத்துறையின் கீழ் இயங்கும் 1052 பள்ளிகளைத் திறந்த பெருமை கக்கனுக்கு உண்டு. அப்பள்ளிகளில், காமராசரால் மிகவும் மனமுவந்து தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்.
வீட்டுவசதி
தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி வீட்டுவசதி வாரியம் ஒன்றினை அமைத்து, குடிசைவாழ் மக்களுக்கும் கிராமவாழ் மக்களுக்கும் உதவுமாறு நடைமுறைப்படுத்தினார். அதில் பத்து விழுக்காடு பிற சாதி இந்துக்களுக்கு ஒதுக்கி அவர்கள் விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆணை வழங்கினார். ஆனால் எந்தப் பிற சாதியாரும் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.