94
அரசியல் பதவி வகிக்கும் தலைவர்களின் செய்திகளைப் பொதுவாக அனைத்து செய்தித்தாள்களும் வெளியிடுகின்றன. அதுபோலக் கக்கனைப்பற்றிச் செய்திகளும் நல்ல துணுக்குகளும் வெளியாகியுள்ளன. தனிமனித ஒழுக்கம், பண்பாடு அரசியல் நாகரிகம் ஆகிய அனைத்தையும் எடுத்துக்காட்டித் தலையங்கம் எழுதப்பட்டிருக்கும் ஒருசில அரசியல் தலைவர்களுள் கக்கனும் ஒருவர். அவ்வாறு கக்கனின் அரசியல் ஒழுக்கத்தை முதன்முதலில் தலையங்கத்தில் குறிப்பிட்ட பெருமை “துக்ளக்” இதழைச் சேரும். அவ்விதழின் ஆசிரியர் சோ. இராமசாமி அவர்கள், அவருக்கு உரித்தான சொற்றொடர்களால், 1981 டிசம்பர் இறுதியில் வெளியான துக்ளக் இதழில் எழுதி கக்கனைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.
பெண்களை மட்டுமே பல கோணங்களில் படமாக்கி அட்டைப்படமிட்டு வணிகம் செய்யும் இதழ்களின் கூட்டத்திற்குள் கக்கனின் உருவத்தை அட்டைப் படமாக்கி வெளியிட்ட பெருமையும் துக்ளக் இதழ் ஆசிரியர் ‘சோ’வையே சாரும்.
தினமணி நாளிதழ் பல காலக்கட்டங்களில் கக்கனின் பண்புகளை வெளிப்படுத்தியுள்ளது. அதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் “தும்பைப்பூப் பொதுவாழ்வு” என்ற தலைப்பில் 20.4.2000 ஆம் நாள் தலையங்கம் ஒன்றை வெளியிட்டது.