96
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிரதமர் இந்திரா காந்தி 1970ஆம் ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அதனால், 1971 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குப் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை உருவானது. ‘காங்கிரஸ்–ஓ’ தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தது. பெருந்தலைவரின் கட்டளைக்கு இணங்க 1971ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ‘ஸ்ரீபெரும்புதூர்’ நாடாளுமன்றத் தொகுதியில் ‘ஸ்தாபன காங்கிரஸ்’ சார்பாகக் கக்கன் வேட்பாளராக நின்றார். அப்போது தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இந்திரா காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்திருந்தன. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி இருந்தன. அவற்றுள் ஒன்று பரங்கி மலைத் தொகுதி. இந்தப் பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர், திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற வேட்பாளராகப் பரங்கிமலைத் தொகுதியில் நின்றார்.
இந்திய நாட்டில் எவருக்கும் கிடைக்காத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இவருக்கு இருந்தது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கக்கன், பரங்கிமலைத் தொகுதியில் மிகப்பெரிய வரவேற்பை மக்களிடம் பெற்றிருந்த எம்.ஜி.ஆரை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். மற்றவர்களைப் போல் இல்லாமல் கக்கன், தமக்கே உரித்தான பண்பு நிறைந்த பாணியில் எதிர்க்கட்சி வேட்பாளரை விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார். இதை வெற்றிபெற்ற வேட்பாளரான எம்.ஜி.ஆரும் பாராட்டிப் பேசினார். எனினும் தி.மு.க. ‘காங்கிரஸ்–ஐ’க்கு ஆதரவு அளித்ததால், அந்த வேட்பாளரே வெற்றிபெற்றார். கக்கன் வெற்றி வாய்ப்பை இழந்தார். அகில இந்திய அளவில் நாடாளுமன்றத் தேர்தலில் ‘காங்கிரஸ்–ஐ’ அதிகமாக வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தின் மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெற்றது. இந்திரா காந்தி மத்தியில் ஆட்சி அமைத்தார். தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் தி.மு.க.விற்குப் பெரும்பான்மை கிடைத்ததனால் மு.கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்தது