14
தமிழக சிறைகளில் இடமின்மையோ அல்லது தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கமோ தெரியவில்லை. ஆந்திர மாநிலப் பெல்லாரி மாவட்டத்திலுள்ள அலிப்புரம் கொண்டு செல்லப்பட்டு அலிப்புரம் மத்தியச் சிறையில் கக்கன் அடைக்கப்பட்டார். அலிப்புரம் சிறை திறந்தவெளிச் சிறை என்பதையும் தப்பி ஓட முயன்றால் சுற்றியமைக்கப்பட்ட மின் கம்பி உயிரைக் குடித்து விடும் என்பதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவருடன் நாடக நடிகர் விஸ்வநாததாஸ் போன்றோரும் அலிப்புரம் சிறையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சிறையில் கேழ்வரகுக் கூழ் ஊற்றும்போது கூட அதில் கல்லும் மண்ணும் வேண்டுமென்றே கலந்து கொடுப்பதும் சிறைக்கைதிகள் படுக்குமிடத்தை, மேடு பள்ளமாக உடைத்து விடுவதும், எங்கெங்கோ இருந்து மூட்டைப்பூச்சிகளைக் கொண்டு வந்து போட்டு ஆர்ப்பரிப்பதும் வெள்ளை வெறியர்களின் அன்றாடப் பொழுது போக்காயிருந்தன. உயிர் இருக்குமானால் அலிப்புரம் சிறையிலிருக்கும் மின்கம்பிகள் கூடக் கண்ணீர் விட்டிருக்கும்! ஆனாலும் அத்துணைக் கொடுமைகளால் கக்கன், விஸ்வநாததாஸ் போன்றோரின் உரம்மிக்க உள்ளங்களை என்ன செய்து விட முடியும்? கலங்கா நெஞ்சினராய் வாழ்ந்த கக்கன் 18மாத கடுங்காவல் தண்டனை முடிந்து 15.01.1944 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார்.