10

இந்தியாவின் தேசியவிலங்கு (Natinal Animal) வங்காளப் புலி (Bengal Tiger) ஆகும்.இதனை ராயல் பெங்கால் புலி (Royal Bengal Tiger) எனவும் அழைக்கின்றனர் .இதன் விலங்கியல் பெயர் பந்தேரா டைகரிஸ் (Panthera Tigris).இது இந்தியா, பாகிஸ்தான்,வங்காளதேசம்,நேப்பாளம்,பூடான்,மியான்மர் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன.இவை வடமேற்குப் பகுதியைத் தவிர இந்தியா முழுமையிலும் காணப்படுகின்றன.இவை காடுகள்,வெப்பமண்டலப் பகுதிகள் எனப் பல்வேறு வகையான சூழ்நிலைகளில் வாழ்கின்றன.

புலி பூனை இனத்தைச் சேர்ந்தது.உயர்நிலை ஊன் உண்ணி.இது ஆங்கிலத்தில் டைகர் என்று அழைக்கப்படுகிறது.இது கிரீஸ் என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டது.ஆசியாவின் ஐந்து பெரிய விளையாட்டு விலங்குகளில் புலியும் ஒன்றாக இருந்தது.புலியின்மேலே பட்டைபட்டையாக கோடுகள் உள்ளன.இதன் மேல் உள்ள மஞ்சள் வண்ண மென்மயிர் தோலில் கருப்புப்பட்டைகள் காணப்படுகின்றன.

தேசியவிலங்கு:

புலி அழகான தோற்றம் உடையது.இதன் வலிமை,விரைந்தோடும் இயல்பு, பேராற்றல் ஆகியவையே இந்தியத் தேசியவிலங்கு என்னும் பெருமையை இதற்குப் பெற்றுத் தந்தன.பெங்கால் புலி இந்தியாவின் தேசியவிலங்காக 1973 ஆம் ஆண்டு,ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.அதற்கு முன்புவரை சிங்கமே தேசிய விலங்காக இருந்தது. இதேசமயத்தில் பழங்காலத்திலயே புலி இந்தியாவின் சின்னமாக கருதப்பட்டு வந்தது. கி.மு.25இல் பயன்படுத்திய புலி முத்திரைகள் கிடைத்துள்ளன.சோழ மன்னர்கள் தங்களின் ஆட்சிக் காலத்தில் புலியை தங்களது அரசு சின்னமாக கடைப்பிடித்து வந்துள்ளனர்.

குணம்:

வங்கப் புலிகள் விலங்குகளை வேட்டையாடி உண்ணுகின்றன.இவை நடுத்தர மற்றும் பெரிய விலங்குகளான முயல்,மான்,காட்டெருமை ,ஆடு,காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடுகின்றன.இவை மரங்களில் ஏறி குரங்குகளையும் வேட்டையாடுகின்றன.பொதுவாக இரவிலேயே வேட்டையாடுகின்றன.வேட்டையாடிய இரையை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றே உண்ணுகின்றன.இவற்றால் ஒரே சமயத்தில் 20 கிலோகிராம்வரை உண்ண முடியும். இப்புலிகள் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை.

புலிகள் வழக்கமாக மனிதர்களை உணவாக உண்பது கிடையாது.ஆனால் மனிதர்களைக் கொன்றுள்ளன. புலிகள் வாழிடங்களில் அழிக்கப்படும் பகுதிகள் ,மரம் வெட்டுதல் போன்ற இடங்களில் மனிதர்களை புலிகள் கொல்கின்றன.வயதான பல் விழுந்த,வேட்டையாட முடியாத புலிகள் மட்டுமே மனிதர்களைக் கொன்று உண்ணுகின்றன.மனிதர்களை உண்ணும் புலிகள் எனக் கருதப்படும் அனைத்துமே கண்டுபிடித்து சுட்டுக்கொல்லப்படுகின்றன.காலநிலை மாற்றத்தால் புலிகளின் துரித வாழிட இழப்பு காரணமாக மனிதர்களின் மீதான தாக்குதல் சுந்தரவனக் காடுகளில் அதிகரித்துள்ளன.

காடுகளில் வாழும் ஆண் புலிகளின் எடை 205 முதல் 227 கிலோவாகவும்,பெண் புலிகளின் எடை சராசரியாக 141 கிலோ வரையிலும் இருக்கின்றன.இருப்பினும் வட இந்தியப் புலிகளும்,வங்கப்புலிகளும் இந்தியத் துணைக் கண்டத்தின் தென் பகுதிகளில் வாழக்கூடியவை,கொழுத்தவையாக உள்ளன.இங்கு காணப்படும் ஆண் புலிகளின் எடை சராசரியாக 235 கிலோவாக இருக்கும்.

ஆபத்து:

புலிகளுக்கு எப்போதுமே மனிதர்களால் ஆபத்து. புலிகளின் இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன.புலிகளின் தோலுக்காக அவை வேட்டையாடப்படுகின்றன.புலிகளின் உடலில் இருந்து பல மருந்துகள் ஆசிய நாடுகளில் செய்கின்றனர்.இதனால் அவைகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.அதுதவிர அதன் உடல் பாகங்களுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.புலிகள் ஊருக்குள் புகுந்து மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகளைக் கொல்கின்றன.ஊர்மக்கள் புலிகளைக் கொல்கின்றனர்.20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகளவில் சுமார் ஒரு இலட்சம் புலிகள் இருந்தன. ஆனால் இன்றைக்கு மிகக் குறைந்தளவிலேயே வாழ்கின்றன.சுமார் 20000 புலிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதன் மூலம் ஓரளவு அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

உலகம் முழுவதும் 2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 4580 வங்கப் புலிகளே காடுகளில் உள்ளன.இந்தியாவில் 3500-3750 ,வங்கதேசம் 300-440 ,நேபாளம் 150-440,பூடான் 50-140,சீனா 30-35 வரை உள்ளன.புலிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கின்றன.

பாதுகாப்பு :

இந்தியாவில் புலிகளை பாதுகாப்பதற்காக 1972 ஆம் ஆண்டில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் (Tiger Project) கொண்டுவரப்பட்டது.இது 1973 ஆம் ஆண்டுமுதல் முன்னால் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் தொடங்கப்பட்டு செயலில் உள்ளது.சுமார் 25 புலிகள் சரணாலயம் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டது.இதுவரை 27 புலிகள் காப்பகங்கள் இத்திட்டத்தின்கீழ் 37761 சதுர மைல் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் விளைவாக 1973 ஆம் ஆண்டில் 1200 என்ற எண்ணிக்கையில் இருந்த வங்காளப் புலிகள் 1990 ஆம் ஆண்டுகளில் 3500 என மூன்று மடங்காக உயர்ந்தன.ஆனால் இதில் சந்தேகம் எழுந்தன,ஏனெனில் 2007 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு இந்தியாவில் நடந்தது.12,பிப்ரவரி 2008 இல் அறிக்கை வெளியிடப்பட்டது.புலிகளின் எண்ணிக்கை 1411 எனக் குறிப்பிடப்பட்டது.இந்தளவிற்கு புலிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு சட்ட விரோதமாக வேட்டையாடப்பட்டதே காரணம் எனத் தெரியவந்தது.

பிடித்தமான விலங்கு:

அனிமல் ப்ளானெட்(Animal Planet) நடத்திய கணக்கெடுப்பில் நாயைவிடப் புலிகளே உலகின் மிகப் பிடித்தமான விலங்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.உலகில் 73 நாடுகளிலிருந்து சுமார் 50000 பார்வையாளர்கள் வாக்களித்தனர்.புலிக்கு 21 சதவீதம், நாய் 20 சதவீதம்,டால்ஃபின்கள் 13 சதவீதம்,குதிரை 10 சதவீதம்,சிங்கம் 9 சதவீதம் ,பாம்புகள் 8 சதவீதம் மற்றும் யானை ,சிம்பன்சி ,உராங்குட்டான் என வாக்களித்தனர் .மக்கள் புலியை தமது விருப்பமான விலங்காகத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் புலிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.புலிகள் காக்கப்பட வேண்டிய அவசியத்தை அறிந்துள்ளனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book