நான் சமீபத்தில் எழுதிய சிறுவர் பாடல்களின் தொகுப்பு இது.
திடீரென்று வந்த ஆர்வம்தான். கட்டுப்பாடுகள் இல்லாமல் இஷ்டப்படி எழுதியதில் ஒரு மகிழ்ச்சி. உடனுக்குடன் இணையத்தில் வெளியிடுவது இன்னும் மகிழ்ச்சி. நண்பர்கள் வாசித்துப் பாராட்டுவது மேலும் மகிழ்ச்சி.
ஆனால், இந்த நண்பர்கள் எல்லாரும் (வயதில்) பெரியவர்கள். இந்தப் பாடல்களின் வாசகர்கள் அவர்கள் அல்லவே.
இதுபோன்ற பாடல்கள் உரியவர்களிடம் (குழந்தைகளிடம்) சென்று சேர்ந்தால்தானே பயன்படும்? இங்கே உள்ள சொற்கள் அவர்களுக்குப் புரிகின்றனவா, பல வருடங்களுக்குமுன் அழ. வள்ளியப்பா போன்றோர் முன்னெடுத்துச் சென்ற நடையில் நான் இப்போது எழுதுவது இன்றைய ’மாடர்ன்’ சிறுவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமா, இதில் பேசப்படும் விஷயங்கள் அவர்களுக்கு அலுப்பூட்டுமா என்றெல்லாம் எனக்குப் பல சந்தேகங்கள் உள்ளன. இவற்றுக்குப் பதில் தெரிந்தால், “சரியான” பாடல்களை நானும் பிறரும் எழுதலாம்.
உங்கள் வீட்டில் தமிழ் வாசிக்கும் குழந்தைகள் இருந்தால், உங்களுக்கு நேரமிருந்தால், இந்தப் பாடல்களை அவர்களிடம் காண்பித்து (அல்லது வாசித்துக் காட்டி) அவர்களுடைய Feedbackஐப் பெற்றுத் தர இயலுமா? இதை வாசித்த/கேட்டபின் அவர்களுடைய எண்ணம் எதுவாக இருந்தாலும் எனக்குச் சொல்லுங்கள், என் மின்னஞ்சல் முகவரி: nchokkan@gmail.com
குழந்தைகள், பெரியோர் அனைவரின் கருத்துகளும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி!
என். சொக்கன்,
பெங்களூரு.