குரங்கு ஒன்று மரத்தில் ஏறிக்
….குதியாட்டம் போட்டுச்சாம்,
வரம்பு இன்றிக் குறும்பு செஞ்சு
….வாலைநல்லா ஆட்டிச்சாம்,
உரத்த குரலில் சிரத்தை யாக
….ஊலலல்லா பாடிச்சாம்,
’அரசன் நானே காட்டுக்’ கென்று
….அட்டகாசம் பண்ணுச்சாம்!
மந்தி சேஷ்டை யாவும் சிங்க
….மன்னருக்குத் தெரிஞ்சிச்சாம்,
தொந்தி துள்ளக் கோவப் பட்டுத்
….தூசுபறக்கப் பாஞ்சுச்சாம்,
வந்த மன்னர் வேகம் பார்த்து
….வனம்முழுக்க நடுங்கிச்சாம்,
அந்தக் குரங்கும் மனசுக் குள்ளே
….அரண்டுபோயிப் பார்த்துச்சாம்!
மன்னர் பேசும் முன்பு குரங்கு
….மரத்திருந்து இறங்கிச்சாம்,
‘மன்னிச் சுடுங்க’ என்று காலில்
….மளமளன்னு விழுந்துச்சாம்,
சின்னப் பொய்கள், திருட்டுத் தனங்கள்
….சிறிதுநேரம் தாங்குமாம்,
பென்னப் பெரிய உண்மை மட்டும்
….பேருலகை ஆளுமாம்!
***