மகள்:
சர்க்கரை இனிக்கிற காரணம் என்ன?
….சட்டெனச் சொல்லிடு அப்பா,
சுர்ரென மிளகாய்க் காரமும் ஏனோ
….சூழ்ச்சியும் எவர்செய் தாரோ?
உப்பினில் ஒருதுளி நாக்கினில் பட்டதும்
….உறைக்குது தனிவித மாக,
அப்புறம் பாகற் காயினைத் தின்றால்
….அதுமிகக் கசக்குது ஏனோ?
சமைக்கிற புளியினில் சிறுதுளி மென்றேன்
….சட்டெனப் புளிக்குது நாக்கு,
நமைச்சலும் கொடுக்குது துவர்க்குது தாத்தா
….நாளெலாம் தின்கிற பாக்கு!
தந்தை:
ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு சுவையது
….உள்ளது இயற்கையில் பெண்ணே,
அவ்விதச் சுவைகளை அறிந்தே சமைத்தால்
….அறுசுவை பெருகிடும் கண்ணே!
இத்தனை சுவைகளும் இருப்பத னால்தான்
….இன்னமும் கேட்குது வயிறு,
அத்தனை சுவையும் ஒன்றே ஆனால்
….அலுத்திடும், அதுமிகத் தவறு!
ஆட்டமும் தீனியும் தூக்கமும் கல்வியும்
….அளவாய்க் கலந்தால் நன்று,
வாட்டமும் இல்லை, அறுசுவை விருந்தென
….வாழ்க்கையும் ஆகிடும் இன்று!