நீலநிறம் வந்ததாம்,
….நிமிர்ந்து நின்னு பார்த்ததாம்,
வால ஆட்டும் குருவி யோடு
….வானம் வரையச் சொன்னதாம்!
சிவப்புநிறம் வந்ததாம்,
….சிரிச்சுப் பழகி நின்றதாம்,
கவர்ந்தி ழுக்கும் மாலை நேரக்
….கதிரை வரையச் சொன்னதாம்!
பச்சைநிறம் வந்ததாம்,
….பணிந்து வணக்கம் என்றதாம்,
நச்சைச் சுத்தம் செய்யும் இலையை
….நன்கு வரையச் சொன்னதாம்!
மஞ்சள்நிறம் வந்ததாம்,
….மகிழ்ந்து கைகள் கோத்ததாம்,
கொஞ்சும் அழகுக் கொன்றை மலரின்
….கொத்தை வரையச் சொன்னதாம்!
கறுப்புநிறம் வந்ததாம்,
….கனிந்து நன்கு சிரித்ததாம்,
குறுக்கு, நெடுக்கு, பின்னிப் பிணைந்த
….கூந்தல் வரையச் சொன்னதாம்!
பழுப்புநிறம் வந்ததாம்,
….பழகி இனிமை தந்ததாம்,
குழுமி நடக்கும் பெரிய யானைக்
….கூட்டம் வரையச் சொன்னதாம்!
தங்கநிறம் வந்ததாம்,
….தன்மை யாக அணைத்ததாம்,
சிங்க மொன்று சீறிப் பாயும்
….சிறப்பை வரையச் சொன்னதாம்!
வெள்ளைநிறம் வந்ததாம்,
….விரைந்து அருகில் அமர்ந்ததாம்,
உள்ள நிறங்கள் அனைத்தும் எனக்குள்
….உண்டு என்று சொன்னதாம்!
***