1
சின்னப் பூக்கள் கோத்தெடுத்துச்
…. சீராய் மாலை செய்வதுபோல்,
அன்னைத் தமிழில் எழுதுதற்கு
….அடிப்படை எழுத்து முப்பதுண்டு!
பொன்போல் பன்னிரு உயிரெழுத்து,
…. புதுவைரம்போல் மெய்யெழுத்து,
பின்னம் ஆகா இவ்வெழுத்தைப்
…. பின்னிச் சேர்த்தால் பிறஎழுத்து!
2
அமுதல் ஔவரை பன்னிரண்டு
…. அழகுள எழுத்துகள் உயிராகும்,
கமுதல் னவரை பதினெட்டு
…. கவின்மிகு எழுத்துகள் உடலாகும்!
3
உயிரெழுத் துக்குள் இருவகைகள்,
…. உரைக்கும் விதத்தில் மாறுபடும்,
குயிலினைப்போலே மெல்லியதாம்
…. குறிலெனும் ஐந்து நல்லெழுத்து!
வயிரம் போலே மின்னுகிற,
…. வலுவுள ஏழு நெடிலெழுத்து!
பயிரினை வளர்த்திடத் துணைபுரியும்
…. பகலவன் போலே இவ்வெழுத்து!
4
மெய்யெழுத் துக்குள் மூவகைகள்,
…. மெல்லினம், வல்லினம், இடையினமாம்,
பெய்மழை போலே தமிழ்ச்செடியைப்
….பேணி வளர்க்கும் இவ்வெழுத்து!
5
நெஞ்சினில் பிறப்பது வல்லினமாம்
…. நேர்த்தியில் அதற்கிணை வேறிலையாம்,
பஞ்சினைப் போலே மூக்கினிலே
…. படர்ந்து மலர்வது மெல்லினமாம்
கொஞ்சிடும் இடையினம் இவைநடுவே
…. கொவ்வைப் பழம்போல் இனித்திடுமாம்!
மிஞ்சிட வேறு மொழியேது,
…. மிளிர்ந்திடும் எங்கள் தமிழ்மொழியை!