1

சின்னப் பூக்கள் கோத்தெடுத்துச்
…. சீராய் மாலை செய்வதுபோல்,
அன்னைத் தமிழில் எழுதுதற்கு
….அடிப்படை எழுத்து முப்பதுண்டு!
பொன்போல் பன்னிரு உயிரெழுத்து,
…. புதுவைரம்போல் மெய்யெழுத்து,
பின்னம் ஆகா இவ்வெழுத்தைப்
…. பின்னிச் சேர்த்தால் பிறஎழுத்து!

2

அமுதல் ஔவரை பன்னிரண்டு
…. அழகுள எழுத்துகள் உயிராகும்,
கமுதல் னவரை பதினெட்டு
…. கவின்மிகு எழுத்துகள் உடலாகும்!

3

உயிரெழுத் துக்குள் இருவகைகள்,
…. உரைக்கும் விதத்தில் மாறுபடும்,
குயிலினைப்போலே மெல்லியதாம்
…. குறிலெனும் ஐந்து நல்லெழுத்து!
வயிரம் போலே மின்னுகிற,
…. வலுவுள ஏழு நெடிலெழுத்து!
பயிரினை வளர்த்திடத் துணைபுரியும்
…. பகலவன் போலே இவ்வெழுத்து!

4

மெய்யெழுத் துக்குள் மூவகைகள்,
…. மெல்லினம், வல்லினம், இடையினமாம்,
பெய்மழை போலே தமிழ்ச்செடியைப்
….பேணி வளர்க்கும் இவ்வெழுத்து!

5

நெஞ்சினில் பிறப்பது வல்லினமாம்
…. நேர்த்தியில் அதற்கிணை வேறிலையாம்,
பஞ்சினைப் போலே மூக்கினிலே
…. படர்ந்து மலர்வது மெல்லினமாம்
கொஞ்சிடும் இடையினம் இவைநடுவே
…. கொவ்வைப் பழம்போல் இனித்திடுமாம்!
மிஞ்சிட வேறு மொழியேது,
…. மிளிர்ந்திடும் எங்கள் தமிழ்மொழியை!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book