ஸ்ரீவியாசராயர் எழுதிய ‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ’ என்ற கன்னடப் பாடலைத் தமிழில் எழுதக் கேட்டார் நண்பர் பி. வி. ராமஸ்வாமி. அதே மெட்டில் எனக்கு எழுதத் தெரியவில்லை, நண்பர் சத்யா மொழிபெயர்ப்பின் உதவியுடன் அந்தப் பாடலின் கருத்துகளை விருத்தமாக எழுத முயன்றேன்.
சின்னக் கண்ணா வாவாவா,
….சிட்டாய் பறந்து நீவாவா,
மின்னும் மேகக் கூட்டம்போல்
….மிளிரும் முகத்தைக் காட்டிடவா!
காலில் கொலுசு சத்தமிடும்,
….கையில் வளையல் கலகலக்கும்,
நீலக் கமலம் போன்றவனே,
….நெஞ்சைக் கிள்ள வாவாவா!
இடுப்பில், விரலில் பலநகைகள்
….இனியன் உன்னால் அழகுபெறும்,
துடுக்காய்த் திரியும் நவநீதா,
….துள்ளிக் குதித்து வாவாவா!
கையில் குழலை ஏந்திவிட்டால்
….காற்றின் அரசன் நீயாவாய்,
மையில் செய்த குழலழகா
….மயக்கும் குட்டா, வாவாவா!
அன்னைக் காக அன்றைக்கு
….அகிலம் வாய்க்குள் காண்பித்தாய்,
சின்னப் பயலாய் உடுப்பியிலே
….சிரிக்கும் அழகா, வாவாவா!
சின்னக் கண்ணா வாவாவா,
….சிட்டாய்ப் பறந்து நீவாவா,
மின்னும் மேகக் கூட்டம்போல்
….மிளிரும் முகத்தைக் காட்டிடவா!