சிறுவன்:
சேவலண்ணா, சேவலண்ணா
…. சீக்கிரமா எழுவதேன்?
ஆவலாகத் தூங்கும்போது
…. அலறிச் சத்தம் இடுவதேன்?
சேவல்:
காலை எழுந்து சுறுசுறுப்பாய்க்
…. கல்வி கற்கும் போதிலே,
சோலையாகும் வாழ்வுஎன்று
…. சொல்லிக் கூவத் தானய்யா!
சிறுவன்:
பூனையக்கா, பூனையக்கா
…. பொழுதும் உடலை நாவினால்
பானைபோலத் தேய்த்துக் கழுவிப்
…. பழகுவதேன்? சொல்லக்கா!
பூனை:
சுத்தமாகத் தோன்றும்போது
…. சோர்வு நீங்கும் நெஞ்சிலே,
தத்தம் வாழ்வைத் தூய்மையாக்கும்
…. தத்துவத்தைச் சொல்கிறேன்!
சிறுவன்:
நாயண்ணாவே, நாயண்ணாவே
…. நன்கு சுருண்ட வாலினை
நேயத்தோடு ஆட்டியாட்டி
…. நீயும் சொல்வ தென்னவோ?
நாய்:
’நன்று செய்த மக்களுக்கு
…. நாள்முழுக்க ஆசையாய்
நன்றி சொல்லி வாழ்க’ என்று
…. நண்பன் உனக்குச் சொல்கிறேன்!
சிறுவன்:
குதிரையண்ணா, குதிரையண்ணா
…. குதித்து ஓடும் அழகனே,
கதிரைப்போன்ற கண்ணினோரம்
…. கருப்பு மூடி எதற்கண்ணா?
குதிரை:
இலக்கை நோக்கிச் செல்லும்போது
…. இருக்க வேண்டும் கவனமே,
வலது இடது திரும்பிடாமல்
…. வழியை நோக்கச் சொல்கிறேன்!
***