சிறுவன்:

சேவலண்ணா, சேவலண்ணா
…. சீக்கிரமா எழுவதேன்?
ஆவலாகத் தூங்கும்போது
…. அலறிச் சத்தம் இடுவதேன்?

சேவல்:

காலை எழுந்து சுறுசுறுப்பாய்க்
…. கல்வி கற்கும் போதிலே,
சோலையாகும் வாழ்வுஎன்று
…. சொல்லிக் கூவத் தானய்யா!

சிறுவன்:

பூனையக்கா, பூனையக்கா
…. பொழுதும் உடலை நாவினால்
பானைபோலத் தேய்த்துக் கழுவிப்
…. பழகுவதேன்? சொல்லக்கா!

பூனை:

சுத்தமாகத் தோன்றும்போது
…. சோர்வு நீங்கும் நெஞ்சிலே,
தத்தம் வாழ்வைத் தூய்மையாக்கும்
…. தத்துவத்தைச் சொல்கிறேன்!

சிறுவன்:

நாயண்ணாவே, நாயண்ணாவே
…. நன்கு சுருண்ட வாலினை
நேயத்தோடு ஆட்டியாட்டி
…. நீயும் சொல்வ தென்னவோ?

நாய்:

’நன்று செய்த மக்களுக்கு
…. நாள்முழுக்க ஆசையாய்
நன்றி சொல்லி வாழ்க’ என்று
…. நண்பன் உனக்குச் சொல்கிறேன்!

சிறுவன்:

குதிரையண்ணா, குதிரையண்ணா
…. குதித்து ஓடும் அழகனே,
கதிரைப்போன்ற கண்ணினோரம்
…. கருப்பு மூடி எதற்கண்ணா?

குதிரை:

இலக்கை நோக்கிச் செல்லும்போது
…. இருக்க வேண்டும் கவனமே,
வலது இடது திரும்பிடாமல்
…. வழியை நோக்கச் சொல்கிறேன்!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book