மகள்:

மயிலிறகைப் பாருங் கப்பா,
….மழையைப் போலக் குளிருது,
ஒயிலுடனே வளைந்து நெளிந்து
….உண்மை யாகச் சிரிக்குது,
உயிரிருக்கும் கண்ணைச் சிமிட்டி
….ஊரைக் கிட்ட அழைக்குது
தயவுசெஞ்சு எனக்கு இதனைத்
….தந்தி டுங்க, வாங்கியே!

தந்தை:

எனதுகண்ணே, செல்லக் குட்டி,
….இந்த ஆசை விட்டிடு,
உனக்குவேறு பொம்மை நூறு
….உள்ள தம்மா வீட்டிலே,
தனதுஇறகை மயிலும் விரும்பித்
….தருவ துண்டா சொல்லிடு,
சினத்துடனே பிடுங்கி வருவர்,
….சீச்சீ, வெறுத்து ஒதுக்கிடு!

மகள்:

வெண்ணெயுண்டு காடு முழுக்க
….வேணு கானம் மீட்டிய,
கண்ணபிரான் தலையில் கூட
….கான மயிலின் சிறகுதான்,
வண்ணமான அந்தச் சிறகு
….வந்த விதமும் எப்படி?
அண்ணலவன் மயிலைப் பிடித்து
….அடித்துப் பிடுங்கக் கூடுமோ?

தந்தை:

அருள்நிறைந்த வேல னுக்கு
….அன்பு மயில் வாகனம்,
முருகனுக்கு மாமன் இந்த
….முல்லைச் சிரிப்புக் கண்ணனாம்,
மருகனோடு மயில தற்கும்
….மாயன் மீது நேசமாம்,
விரும்பியேதன் இறகைப் பறித்து
….வீர னுக்குத் தந்ததாம்!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book