ராத்திரி நேரம் பூனை யொண்ணு
….ரகசிய மாக நடந்ததாம்,
பாத்தி ரங்கள் உருட்டி அதிலே
….பாலிருக் கான்னு பார்த்ததாம்.
குவளை யொண்ணில் பாலும் இருக்கக்
….குடிக்கும் ஆசை வந்ததாம்,
கவலை யின்றிக் குடிச்ச பூனை
….களைப்புத் தீர்ந்து பறந்ததாம்.
அந்த நேரம் ரெண்டு எலிகள்
….அங்கு வந்து நின்றதாம்,
இந்தப் பூனை நம்மைத் தின்னும்
….என்று பயந்து நொந்ததாம்!
எலியைப் பார்த்த பூனை உடனே
….எட்டிப் பாய வில்லையாம்,
புலியைப் போன்ற மீசை நடுவே
….புன்ன கைதான் வந்ததாம்!
உயிர்பி ழைத்த எலிகள் ஓடி
….உள்வ ளைக்குள் நுழைந்ததாம்,
வயிறு வலிக்கச் சிரித்துக் கதையை
….வக்கணை யாகச் சொன்னதாம்.
பூனை சைவம் ஆகி விட்ட
….புதியவிவரம் கேட்டதும்
தேனைக் குடித்த நரிகள் போலத்
….திரிந்து எலிகள் துள்ளிச்சாம்.
அடுத்த நாளில் எலிகள் பூனை
….அருகில் சென்று துணிவுடன்
துடுக்குத் தனமாய்க் குறும்பு செய்து
….துன்பு றுத்தப் பார்த்ததாம்.
கருத்த பூனை பாய்ந்து நாலு
….கறுத்த எலியைத் தின்றதாம்,
வருத்த மான மற்ற எலிகள்
….வாடி ஓடிப் பிழைத்ததாம்.
அதனைக் கேட்ட மூத்த எலிகள்
….அர்த்தத் தோடு சிரித்ததாம்,
பதறும் இளைய எலிக ளுக்குப்
….பக்கு வம்தான் சொன்னதாம்.
‘வயிறு முட்டத் தின்ற பூனை
….வாழும் சைவ மாகவே,
வயிறு காய்ந்த பின்பு நம்மை
….வளைத்துத் தின்னப் பாயுமே!’