சங்கரன் என்றொரு சிறுவனுக்கு
….சர்க்கரை, இனிப்பினில் மிகப்பிரியம்,
எங்கதைக் காணினும் சட்டென்று
….எடுத்துடன் உண்டவன் சிரிப்பானாம்,
சங்கடம் தந்திடும் பழக்கமிதைச்
….சிறுவனின் தாயவள் ரசிக்கலையாம்,
கங்கணம் கட்டினள் மாற்றிடவே,
….கருத்திலோர் தந்திரம் தோன்றியதாம்!

அங்கொரு பண்டிகை நாள் வரவே,
….அடர்ந்தனர் விருந்தினர் வீடெங்கும்,
பெங்களூர்ப் பாட்டியும் வந்திருந்தார்,
….பற்களும் அவர்க்கிலை, பொக்கையராம்,
’பங்கமில் அன்பினைப் பொழிந்திடவே,
….பல்லெதற்(கு?)’ என்றவர் சிரித்தாராம்,
‘இங்குவா சங்கரா’ என்றழைத்து
….இக்கதை சொல்லினள் தாயவளும்:

’தங்கமாம் பாட்டியின் பற்களெல்லாம்,
….தொலைந்தன, காரணம் சர்க்கரையாம்,
இங்குனைப் போலவே அவளும்தான்
….இனிப்பினை அதிகமாய்த் தின்றனளாம்,
மங்கிய பற்களும் விழுந்தனவாம்,
….மயங்கியே தவிக்கிற நிலையாச்சாம்,
சிங்கமும் சர்க்கரை மிகஉண்டால்,
….சீக்கிரம் எலியென மாறிடுமாம்!

’செங்கதிர்ச் சூரியன் அதுபோலே
….சுடுகிற கருத்தினைச் சங்கரனும்
திங்களின் சுடரெனக் கற்றபின்னே
….திடுமென ஒருவினா கேட்டானாம்:
‘உங்களின் அறிவுரை புரிந்தாலும்,
….உண்டெனக் கிங்கொரு சந்தேகம்,
திங்(ன்)கவே தூண்டுது இந்நாக்கு,
….தண்டனை மட்டுமென் பற்களுக்கா?’

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book