ஓரிரு நாள் முன்பாக, பெங்களூரு புறநகர் பகுதியில் சில காட்டு யானைகள் நுழைந்துவிட, மீடியாவில் ஒரே பரபரப்பு. பல பள்ளிகளுக்கு விடுமுறை!
பொதுவாக ஸ்கூல் லீவ் என்றால் குழந்தைகள் சந்தோஷப்படும், ஆனால் இந்த விஷயத்தில், குழந்தைகள் விடுமுறையைவிட, அந்த யானைகளைப் பார்ப்பதற்குதான் அதிகம் விரும்பியிருக்கும் என்று எனக்குத் தோன்றியது.
காட்டு ஆனைக் கூட்டமொன்று
….கையை வீசி நடந்துச்சாம்,
நாட்டுக் குள்ளே எட்டிவந்து
….நம்ம ரோட்டில் புகுந்துச்சாம்,
கேட்ட போது சனங்ககூட்டம்
….கிலிபி டிச்சுப் போச்சுதாம்,
வீட்டுக் குள்ளே பாய்ஞ்சுஓடி
….வேக மாகப் பதுங்கிச்சாம்!வீதி வந்த யானையெல்லாம்
….வெறுமை கண்டு நொந்துச்சாம்,
பாதி ஜன்னல் திறந்துவெச்சுப்
….பாப்பா ஒண்ணு பார்த்துச்சாம்,
சோதி போலக் கண்ஜொலிக்கச்
….சொக்கிக் கையைத் தட்டிச்சாம்,
தீதில் லாத நட்புஎன்று
….திண்ணை வாசல் வந்துச்சாம்!மீனைப் போலக் கண்ணிரண்டும்
….மின்ன அதுவும் சிரிச்சுச்சாம்,
ஆனைக் கூட்டம் மகிழ்ந்துதங்கள்
….அன்புக் கையை நீட்டிச்சாம்,
பானைத் தொப்பை குலுங்கரோட்டில்
….பாங்க்ரா டான்ஸ் ஆடிச்சாம்,
ஏனை சனமும் பார்த்துவாயில்
….எறும்பு போக வியந்துச்சாம்!
***