கோடை வெய்யில் வந்தவுடன்,
….கொளுத்தும் சூட்டைத் தணிப்பதற்கு,
ஓடை நீரின் குளுமையுடன்
….ஊரில் எங்கும் இளநீர்கள்!

பச்சை ஆடை அணிந்திருக்கும்,
….பாரம் ஏறிக் கனத்திருக்கும்,
இச்சை யோடு நாம்கையில்
….எடுத்துக் குடிக்க ஏலாது!

இளநீர் விற்கும் அண்ணன்மார்
….எழிலாய்ச் சீவித் தருவார்கள்,
மளமள வென்று நாமதனை
….மகிழ்ந்தே குடித்துக் குளிர்ந்திடலாம்!

குடித்துத் தீர்ந்த இளநீரைக்
….குறுக்கே வெட்டி அதனுள்ளே
படிந்தே ஜொலிக்கும் வழுக்கையினைப்
….பதமாய்க் கீறித் தருவார்கள்!

வழவழ வென்று அவ்வழுக்கை
….வாயில் வழுக்கிச் சுவையேற்ற,
குழந்தை, பெரியோர் எல்லாரும்
….குஷியாய்ச் சிரிப்பர், ஆனந்தம்!

வேதிப் பொருளைக் குடித்தால்,பின்
….வேதனை நமது உடலுக்கு,
பாதிப் பில்லா இளநீரைப்
….பார்த்தே குடிப்போம் அனுதினமும்!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book