எங்கள் வீட்டுப் பூனை யொன்று எட்டுத் திக்கும் ஓடிடும்,
பொங்கும் பாலின் வாசம் கண்டு வாசல் வந்து கூப்பிடும்,
பங்கு கேட்டுக் கெஞ்சும், கொஞ்சும், நாம சந்த நேரமே,
வங்கிக் கொள்ளை போலப் பாலைக் காலி செய்து போய்விடும்!
விட்ட மேறி வேட்டை யாடும், மற்ற நேரம் தூங்கிடும்,
வட்ட மிட்டு வீட்டி னுள்ளும் தீனி தேடிக் கவ்விடும்,
கிட்ட யாரும் வந்து நின்றால் நல்ல பிள்ளை வேஷமே,
தொட்டுப் பாரு, காலைக் கீறி ரத்தம் சிந்த நேருமே!
சிங்க மாக நாயை எண்ணி அஞ்சி ஓடும் மாயமாய்,
எங்கி ருந்தும் தாவும், பாயும், காய மின்றித் தப்பிடும்,
அங்க மெங்கும் நாவி னாலே சுத்தம் செய்து கொண்டிடும்,
மங்கி டாத பார்வை உண்டு கும்மி ருட்டில் கூடவே!
அஞ்சு, ஆறு குட்டி போடும் வண்ண வண்ண மாகவே,
பிஞ்சுக் குட்டி பால்கு டிக்கக் கண்ம யங்கிச் சொக்கிடும்,
பஞ்சு மெத்தை போல மாந்தர் மேனி மீது சாய்ந்திடும்,
கொஞ்சம் கொஞ்சம் தப்புச் செய்த போதும் பூனை வேணுமே!
***