தாத்தா வந்தார், தாத்தா வந்தார்
…. தடபுட லாகச் சாப்பாடு
வாத்துப் பொம்மை, போலீஸ் பொம்மை
…. வாங்கித் தாத்தா தந்தாரு,
காத்தில் ஜோராப் பறக்கும் பட்டம்
…. கண்ணைப் பறிக்கும், நீபாரு!
பூத்துச் சிரிக்கும் ரோஜா போலே
…. பொம்மை பலவும் இங்குண்டு!
பொம்மை எல்லாம் வாங்கித் தந்த
…. பொக்கை வாயித் தாத்தாவும்
அம்பது ரூபாய் காசும் தந்தார்
…. ஆஹா, எனக்கு ஆனந்தம்!
அம்மா தந்த உண்டியல் தன்னில்
…. அதனைப் போட்டு வைத்தேனே,
சும்மா நானும் செலவு செய்யேன்,
…. சொத்தாய்ச் அதனைச் சேமிப்பேன்!
பாக்கெட் மணியும், மற்றவர் தருகிற
…. பரிசுப் பணமும் உண்டியலில்!
ராக்கெட் போலே மதிப்பும் ஏறும்
…. ரகசியம் சொல்வேன் கேட்டிடுவீர்,
ஊக்கம் கொண்டே காசை நீங்கள்
…. ஒழுக்க மாகச் சேமித்தால்,
காக்கும் அதுவும் உங்கள் வாழ்வில்
…. கஷ்டம் வருகிற நேரத்தில்!
பணத்தை விடவும் மதிப்பு அதிகம்
…. பண்புக் குத்தான் உண்மையில்,
கணக்குப் பார்க்கும் உலகம் ஏனோ
…. காசை மட்டும் தான்மதிக்கும்,
சுணக்கம் வேண்டாம், செல்வம் சேர்த்துச்
…. சுகமாய் வாழ்வீர் என்றென்றும்,
மணக்கும் அருமைப் பண்பைச் சேர்ப்பீர்
…. மனமென் கின்ற உண்டியலில்!
***