சின்னச் சின்னச் சிட்டுகளே,
….செப்பு வாயைத் திறவுங்கள்,
தின்ன உணவு கொண்டுவந்தேன்
….திகட்டத் திகட்ட உண்ணுங்கள்,
அன்னை அன்பை அதில்கலந்து
….ஆசை யாக மெல்லுங்கள்,
சொன்ன பேச்சைக் கேட்டுநாளை
….சொர்ணம் போல வாழுங்கள்!

சிறகு வளர்ந்த பிறகுநீங்கள்
….சிரித்துப் பறந்து திரிகையில்,
திறந்து கிடக்கும் வானமெங்கும்
….தீனி தேடி அலைகையில்,
மறக்க வேண்டாம் எனதுவார்த்தை,
….மற்ற வர்க்கு உதவுங்கள்,
உறவு என்று அனைவரையும்
….உண்மை யாக எண்ணுங்கள்.

தளர்ந்தி ருக்கும் ஒருவருக்குத்
….தாயைப் போலக் கொடுப்பவர்,
வளர்ந் திருப்பர் இமயம்போல
….வான தேவன் ஏட்டினில்!
அளந்து பார்த்துக் கணக்கிடாமல்
….அன்பை வாரித் தாருங்கள்,
வளங்கள் யாவும் உங்களோடு
….வந்து நிற்கும் பாருங்கள்!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book