நீல மூக்குப் பறவை ஒண்ணு
….நெல்லி மரத்தில் இருந்துச்சாம்,
வால நல்லா ஆட்டி கிட்டே
….வக்கணையாப் பாடிச்சாம்!
அந்தக் குரலை கேட்டு அங்கே
….ஆறு எலிகள் வந்துச்சாம்,
‘சொந்த மாகப் பாட ஆசை,
….சொல்லிக் கொடுங்க’ என்றதாம்!
சம்ம திச்ச பறவை உடனே
….சரிகமப சொல்லிச்சாம்,
நம்பி எலிகள் கூடப் பாடி
….நர்த்த னம்தான் ஆடிச்சாம்!
நாலு பாட்டு ஆன பின்னே,
….’நாளை பார்ப்போம்’ என்றதாம்,
வாலு நீண்ட எலிகள் அதுக்கு
….வணக்கம் சொல்லிக் கிளம்பிச்சாம்!
இதனைப் பார்த்த அணிலு ஒண்ணு
….எட்ட நின்னு கேட்டுச்சாம்,
’உதவி செய்யும் பறவை யக்கா,
….உங்க முயற்சி பலிக்குமா?’
‘எலியின் குரலில் இனிமை இல்லை,
….எதுக்குப் பாடம் சொல்லுறே?
வலிக்கும் கேட்டு நூறு காது,
….வாயை மூடச் சொல்லிடு!’
அணிலின் பேச்சைக் கேட்ட பறவை
….அழகு மிளிரச் சிரிச்சுச்சாம்,
பணிவு கலந்து அதற்கு உரிய
….பதிலை மெல்லச் சொல்லுச்சாம்!
‘இனிமை, திறமை என்ப தெல்லாம்
….இறைவன் கொடுத்த வரமல்ல,
கனிக்கு முன்னே காயும் உண்டு,
….கண்டு கொள்ளு நண்பனே!’
‘ஆர்வம், உழைப்பு உள்ள வர்க்கு
….அத்தனையும் சாத்தியம்,
சோர்வி லாது பாடு பட்டால்
….சொந்த மாகும் வானமும்!’
‘கொஞ்ச நாளில் எலிகள் கூட
….கொஞ்சு குரலில் பாடுமே,
அஞ்சி டாமல் முயல்ப வர்க்கு
….அனைத்துத் திறமும் கூடுமே!’