உனக்கும் எனக்கும் சாப்பாடு
….ஊட்டி விடுறார் அம்மாதான்,
தினமும் சோறு தின்பதனால்
….திடமாய் நாமும் வளர்கின்றோம்,
மனத்துக் குள்ளே ஒருகுழப்பம்,
….மரத்துக் கெல்லாம் சோறுண்டா?
கணக்காய் அதற்கு உணவூட்டிக்
….கண்போல் காப்போர் யாரம்மா?
விடியும் காலைப் பொழுதெல்லாம்
….வித்தை செய்யும் தாவரங்கள்,
செடியோ மரமோ கொடிவகையோ
….சிறப்பாய் வளரும் தானாக!
கடிகா ரத்தின் முள்போலே
….கச்சி தமாகத் தன்உணவைத்
துடிப்பாய்த் தானே உருவாக்கும்,
….தூண்டல் எதுவும் வேண்டாமே!
தரையில் நாமும் ஊற்றுகிற
….தண்ணீர் தன்னை வேர்உறிஞ்சும்,
கறையில் லாத சூரியனின்
….கதிரை இலைகள் கவர்ந்திழுக்கும்,
இறைபோல் எங்கும் நிறைந்திருக்கும்
….எல்லை இல்லாக் காற்றினிலே
உறையும் கார்பன் டைஆக்ஸைட்
….உள்ளே ஈர்க்கும் அச்செடியும்!
இந்த மூன்று பொருள்களுடன்
….இலையில் உள்ள பச்சையம்
பந்தம் கொள்ளும் காரணத்தால்
….பதமாய்ச் சோறும் உருவாகும்,
அந்தச் சோறே கிளையாகும்,
….அதுவே காய்த்துக் கனியாகும்,
சொந்தச் சமையல் அதனாலே,
….சோலை, காடு உருவாகும்!